நம்மில் பலர் அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி, பொது இடங்களிலும் சரி பிறரை குறை கூறிக்கொண்டு அதற்கு செலவிடும் நேரத்தை நம் வளர்ச்சிக்கு செலவிட்டால் நம் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், அடுத்தவர் வளர்ச்சியை தடுக்கிறேன் என்ற பெயரில் குறைகள் மட்டுமே கூறிக்கொண்டு வாழ்பவர்கள் இன்று பலரும் உண்டு.
மனிதர்களுக்கு இடையில் ஒருவரையொருவர் வெறுப்பதற்கும், இதமான உறவு இல்லாமல் போவதற்கும் சரியான, தெளிவற்ற, தவறான புரிதல்கள்தான் காரணம்.
மற்றவர்களை தவறாக எண்ணுவதற்கு காரணமாக இருப்பது தேவையற்ற அய்யப்பாடுகளும் அவதூறு பரப்புதலும்தான் என்றால் அது மிகையில்லை.
கெட்ட எண்ணத்தில் ஆதாரம் இல்லாமல் நாம் பேசும்பொழுது நிறைய பொய்களை சேர்த்து பேசவேண்டிய நிலை உருவாகி விடுகின்றது. அவர்களைப் பற்றி தேவையில்லாமல் துருவித் துருவி ஆராய வேண்டிய நிலையையும் உருவாக்கி விடுகின்றோம். மனிதர்களில் எவரும் தவறுக்கும், குறைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் கிடையாது.
எனவே, பிறரின் குறைகளையும், அவர்களின் அந்தரங்க செயல்களையும் எக்காரணம் கொண்டும் துருவித் துருவி ஆராயமல் இருப்பது மிக நல்லது. அடுத்தவரின் சுய செயல்பாடுகளை நாம் விமர்சனம் செய்வது முதல் தவறு அதை எத்தனை பேர் உணர்ந்து இருக்கிறோம் என்றால் நம்மில் பலர் உணராமல் இன்றைக்கும் அந்த தவறை செய்து கொண்டு இருக்கிறோம்.
சிலர் தங்கள் பொன்னான நேரத்தை, தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் அடுத்தவர்களின் குறைகளை கண்டுபிடிக்கவே செலவிட்டுக் கொண்டிருப்பார்கள்.
அவர்களின் கண்களுக்கு மற்றவர்களிடம் இருக்கும் நிறைகள் தெரியாது. குறைகள் மட்டுமே தெரியும். அடுத்தவர்களின் குறைகளை கண்டுபிடிக்கவும், அதுபற்றி பேசவுமே தங்கள் மூளையை பயன்படுத்திக் கொண்டிருப்பதால், அவர்களது மூளை அதற்கு அப்பால் சிந்திக்கும் திறனை இழந்துவிடும்.
மற்றவர்களின் குறைகளை மட்டுமே கண்டுபிடிப்பவன், தனக்குத்தானே குழி பறித்துக் கொள்கிறான். மற்றவர்களின் குறைகளை எல்லாம் கண்டுபிடிக்கும் சிலருக்கு, தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்குப் பெயர்தான் ''தன்நலம்''.
பிறரை குறை கூறுவதற்கு பெயர் தன்நலம் என்றும் சொல்லலாம். ஆமாம். மற்றவருக்கு உதவாத மனசாட்சியை மறந்து செயல்படுவதற்கு பெயர்தான் மனிதநேயமற்றவர் என்று கூறுகிறோம். அதேபோல் குறை கூறுபவர்களை இனி தன்நலவாதிகள் என கூறலாமே!