
பிரதோஷம் என்பது சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். 20 வகை பிரதோஷங்கள் பற்றியும் அவற்றின் பலன்களையும் இப்பதிவில் காண்போம்.
1. தினசரி பிரதோஷம்: தினமும் மாலை 4.30 முதல் 6.30 மணி வரை உள்ள பிரதோஷ காலத்தில் தொடர்ந்து 5 வருடங்கள் முறையாக பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு முக்தி நிச்சயம்.
2. பட்ச பிரதோஷம்: அமாவாசைக்குப் பிறகான திரயோதசி திதி பட்ச பிரதோஷம் என அழைக்கப்படுவதால் இந்த நேரத்தில் பட்சி லிங்க வழிபாடு செய்வது உத்தமம்.
3. மாத பிரதோஷம்: பௌர்ணமிக்கு பிறகு வரும் திரயோதசி திதி மாத பிரதோஷம் ஆதலால், இந்த நேரத்தில், பாணலிங்க வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.
4. நட்சத்திர பிரதோஷம்: பிரதோஷ திதியாகிய திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.
5. பூரண பிரதோஷம்: திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி பூரண பிரதோஷம் ஆகும். இந்நேரத்தில் சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்வது இரட்டைப் பலனைத் தரும்.
6. திவ்ய பிரதோஷம்: பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ, திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது திவ்ய பிரதோஷம். இன்று மரகத லிங்கேஸ்வரரை வழிபட, பூர்வ ஜன்ம வினை நீங்கும்.
7. தீப பிரதோஷம்: பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களை தீபங்களால் அலங்கரித்து வழிபட, சொந்த வீடு அமையும்.
8. அபய பிரதோஷம் என்னும் சப்த ரிஷி பிரதோஷம்: சப்த ரிஷி மண்டலத்தை தரிசித்து வழிபடுவதே அபய பிரதோஷம் என்னும் சப்த ரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.
9. மகா பிரதோஷம்: சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற, மகா பிரதோஷ நாளில் எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் மிகவும் உத்தமம்.
10. உத்தம மகா பிரதோஷம்: சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாத வளர்பிறையில், சனிக்கிழமையில் வரும் திரயோதசி திதி உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
11. ஏகாட்சர பிரதோஷம்: வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷம் `ஏகாட்சர பிரதோஷம்' ஆகும். இன்று சிவாலயம் சென்று, `ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை ஓத, பலவிதமான நன்மைகள் ஏற்படும்.
12. அர்த்தநாரி பிரதோஷம்: வருடத்தில் இரண்டு முறை வரும் மகா பிரதோஷம், அர்த்தநாரி பிரதோஷம் ஆகும். இன்று சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வர்.
13. திரிகரண பிரதோஷம்: வருடத்துக்கு மூன்று முறை மகா பிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும்.
14. பிரம்ம பிரதோஷம்: ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்ம பிரதோஷம் ஆகும். இந்த வழிபாடு செய்ய முன் ஜன்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.
15. அட்சர பிரதோஷம்: வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சர பிரதோஷம் ஆகும். இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பாவ விமோசனம் கிடைக்கும்.
16. கந்த பிரதோஷம்: சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் கந்த பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.
17. சட்ஜ பிரபா பிரதோஷம்: ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்' ஆகும். இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி, பிறவிப் பெருங்கடலை கடக்கலாம்.
18. அஷ்டதிக் பிரதோஷம்: வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்கு பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
19. நவகிரக பிரதோஷம்: வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவகிரகப் பிரதோஷம். அரிதான இந்த பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவகிரகங்களின் அருளும் கிடைக்கும்.
20. துத்த பிரதோஷம்: அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. இந்த துத்த பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் சரியாகும்.