

திருக்கண்ணங்குடி பெருமாள் கோவிலில் ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் விபூதி கொடுக்கிறார்கள். இதை வைணவர்களும் பூசிக் கொள்கிறார்கள். இதை ஒரு விழாவாக 'திருநீரணத் திருவிழா' என்று கொண்டாடுகிறார்கள்.
திருக்காளஹத்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் பச்சை கற்பூரத்தை தண்ணீரில் கலந்து அந்த தீர்த்தத்தை சங்கின் மூலம் வழங்குகிறார்கள். இங்கு திருநீறு வழங்குவது கிடையாது. காரணம் கண்ணப்பரால் அபிஷேகம் செய்யப்பட்ட சுயம்பு மூர்த்தி காளஹஸ்தீஸ்வரர் ஆவார்.
சிருங்கேரியில் கல்விக் கடவுளான சரஸ்வதி தேவி மாணவியாக, படிக்கின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.
சிவனின் (சுயம்புலிங்கம்) எதிரில் சூரிய பகவான் நின்று சிவதரிசனம் செய்யும் கோலத்தினை தஞ்சை பரிதியப்பர் கோவில் பாஸ்கரேஸ்வரர் ஆலயத்தில் மட்டுமே காணலாம்.
ஈரோடு ராட்டைசுற்றிபாளையம் பைரவர் கோயில் உள்ளது. இங்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய 33 அடி உயர காலபைரவர் சிலை இங்கு அமைந்துள்ளது சிறப்பு.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள வன்னியர் விநாயகர் கோவிலில், விநாயகரின் மடியில் குழந்தை கண்ணன் வீற்றிருப்பது சிறப்பு.
ஆடுதுறைக்கு அருகேயுள்ள ஊர் மருத்துவக்குடி. இங்கு உள்ள ஆலயத்தில் தேள் போன்ற வடிவமைப்பில் விநாயகர் விருச்சிகப் பிள்ளையாராக அருள்கிறார்.
சென்னை சவுகார்பேட்டையில் உள்ள பைராகி மடம் திருவேங்கடம் ஏழுமலையான் ஆலயத்தில், பெண் வடிவிலான கருடனை தரிசிக்கலாம்.
சென்னை வண்டலூர் செல்லும் சாலை புதுப்பாக்கத்தில் அமைந்துள்ள கஜகிரி என்ற மலை மீது அமைந்துள்ளது வீர ஆஞ்சநேயர் கோவில். 108 படிகள் ஏறிச் சென்றால் மலை மீது அற்புதமாக, அமைதியாக அருள் செய்யும் ஆஞ்சநேயரை தரிசிக்க முடியும். பவுர்ணமி தோறும் இங்கு ஆஞ்சநேயரே கிரிவலம் வருவதாக நம்பிக்கை. அந்த சமயத்தில் நாமும் கிரிவலம் வந்து வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் என்பது நம்பிக்கை.
பொதுவாக சூரிய பகவானும், சனி பகவானும் நேருக்கு நேர் பார்க்க மாட்டார்கள். ஆனால் தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழியில் உள்ள கபர்தீஸ்வரர் கோவிலில் வெளி பிரகாரத்தில் சூரிய பகவானும், சனீஸ்வரனும் நேருக்கு நேர் பார்த்தபடி அமர்ந்த காட்சியளிக்கின்றனர்.