

ஏகாதசி விரதம் என்பது புண்ணிய பலன்களைத் தரும் அற்புதமான விரதம் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரு ஏகாதசி விரதங்கள் வரும். எவர் ஒருவர் ஏகாதசி விரதம் இருந்து, பெருமாளை மனதார பக்தியுடன் வழிபடுகிறாரோ அவர் வாழும் போதும் அனைத்து நலன்களையும், வாழ்க்கைக்கு பிறகு தன்னுடைய திருவடிகளையும் வந்து அடைவார்கள் என ஸ்ரீமத் பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரே கூறி இருக்கிறார்.
அதேபோல் ஒரு வருடத்தில் வரும் 24 ஏகாதசிகளையும் எவர் ஒருவர் பக்தி சிரத்தையுடன் விரதத்தை கடைபிடிக்கிறாரோ அவருக்கு மறுபிறவியே கிடையாது என்பது ஐதீகம்.
மாசி 15-ம்தேதி வரக்கூடிய ஏகாதசிக்கு ஆமலகி ஏகாதசி என்று பெயர். ஏகாதசி திதி பிப்ரவரி 26-ம்தேதி வியாழக்கிழமை நள்ளிரவு 12.35 மணி முதல் பிப்ரவரி 27-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10.35 மணி வரை உள்ளது. அதாவது நாளை (வெள்ளிக்கிழமை) ஆமலகி ஏகாதசி அனுஷ்டிக்கப்படுகிறது.
மாசி மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை இரண்டிலுமே வரும் ஏகாதசி தனித்துவமானவை. மாசி மாத வளர்பிறையில் வரும் ஆமலகி ஏகாதசி செல்வ வளத்தையும், வெற்றிகளையும் தரக்கூடியது.
ஆமலகி ஏகாதசி (Amalaki Ekadashi) விஷ்ணு மற்றும் நெல்லி மரத்தை (Amla tree) வழிபடும் ஒரு புனிதமான விரத நாளாகும். அதனால் அதன் பெயரிலேயே இது ஆமலகி ஏகாதசி என அழைக்கப்படுகிறது. இது பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் வருகிறது. இந்த நாளில் நெல்லி மரத்தில் திருமால் வாசம் செய்வதாக நம்பப்படுவதால், மரத்தை பூஜித்து, விரதமிருந்து விஷ்ணுவை வழிபட்டால் பாவங்கள் நீங்கி, ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. ஒரு கோதானம் செய்தாலே மிகவும் சிறந்தது என்றிருக்கும் பட்சத்தில், ஆயிரம் கோதானம் செய்தால் எவ்வளவு பலன் கிட்டுமென்று எண்ணிப் பாருங்கள்.
ஆமலகி ஏகாதசியன்று ஒரு நெல்லிமரத்தடியில் பெருமாளைப் பிரதிஷ்டை செய்து, அன்று முழுவதும் உபவாசமிருந்து பூஜித்து, விஷ்ணு வழிபாட்டுடன், நெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.
ஒருவேளை நெல்லி மரம் இல்லாத பட்சத்தில் துளசி செடிக்கு பூஜை செய்யலாம் என்று வசிஷ்ட மஹரிஷி கூறியுள்ளார்.
ஆமலகி ஏகாதசி மகிமை ஸ்கந்த புராணத்தின்படி, சத்யயுகத்தில் ராஜா சித்ரரதன் இந்த விரதத்தை அனுசரித்து மோட்சம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த விரத பலனை படிப்பவர்கள் மற்றும் விரத பலனை பிறருக்கு தெரியப்படுத்துபவர்கள், என அனைவரும் ‘கோ’தானம் செய்த பலனை பெறுவார்கள் என்றும் வசிஷ்ட மஹரிஷி கூறுகிறார்.
‘ஓம் நாராயணாய வித்மஹே
வாசு தேவாய தீமஹி
தந்தோ விஷ்ணு ப்ரசோதயாத்’
இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். இந்த ஆமலகி ஏகாதசி நாளில் பெருமாளுக்கு நெல்லிக்கனி வைத்து பூஜை செய்தால் லட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆமலகி ஏகாதசி விரதத்தை அனுசரிப்பதன் மூலம், வாழ்வில் தடைகள் நீங்கி, செல்வம் பெருகும், மோட்சம் கிடைக்கும், பாவங்கள் தீரும், மற்றும் ஆன்மீக வளர்ச்சி அடையலாம் என்று நம்பப்படுகிறது. இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பதன் மூலம், ஒரு நபர் தன்னிடம் உள்ள பாவங்களில் இருந்து விடுபட முடியும் என்று நம்பப்படுகிறது.