உலகிலேயே மிகச்சிறிய நுழைவாயில் கொண்ட அதிசய சிவன் கோயில்!

கோடி கொடுத்த நாதர் கோயில்
கோடி கொடுத்த நாதர் கோயில்https://www.youtube.com

விழுப்புரம் – திருக்கோவிலூர் சாலையில் தோகைப்பாடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஒருகோடி கிராமத்தில் அமைந்திருக்கிறது அழகிய சிவன் கோயில். அழகிய இக்கிராமத்தில் மொத்தம் 230 வீடுகளும் ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகையும் மட்டுமே உள்ளது. விவசாயத்தையே பிரதானத் தொழிலாகக் கொண்ட இக்கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலில் அருளும் சிவபெருமானை ஒரு கண் மட்டுமே வைத்து பார்க்கும் அளவுக்கு உலகிலேயே மிகவும் சிறிய நுழைவாயிலைக் கொண்டு விளங்குகிறது.

15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழைமை வாய்ந்த இந்த சிவாலயத்தில் ஒரு கோடி சித்தர்கள் வழிபட்டு தவம் செய்து சென்றுள்ளனர். அதனால்தான் இந்த கிராமத்தின் பெயரே ஒரு கோடி என்று அழைக்கப்படுகிறது. தற்போது சிதிலம் அடைந்த நிலையில் காட்சி தரும் இந்த சிவாலயத்தில் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த பழைமை வாய்ந்த பல சிற்பங்கள் உள்ளன.

கோயிலின் முன்புறம் எல்லைப்பிடாரி அம்மனும் கோடி விநாயகர் என்று அழைக்கப்படும் விநாயகர், குரு பகவான், கொற்றவை ஆகியோருக்கு சிலைகள் உள்ளன. இங்குள்ள பல சிலைகள் புதையலாகக் கண்டெடுக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. இக்கோயிலில் இருந்த அரிய வகை ஓலைச்சுவடிகள் நாளடைவில் காணாமல் போனதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
வெற்றுக்கூடு நோய்க்குறியை எதிர்கொள்வது எப்படி?
கோடி கொடுத்த நாதர் கோயில்

கருவறை மூலவர்களாக ஸ்ரீ முக்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரர் இருப்பினும், இக்கோயில் மூலவரை ஸ்ரீ ஓலைபடித்த நாயகி உடனுறை கோடி கொடுத்த நாதர் என்ற பெயரிலும் அழைக்கின்றனர். அதனால் இங்கு ஓலைச்சுவடிகள் இருந்தது உண்மை என்ற கூற்றும் நிலவுகிறது. கருவறை செல்வதற்கு பக்கத்தில் நுழைவாயில் இருந்தாலும் மூலவருக்கு நேராக ஒரு கண்ணால் பார்க்கக்கூடிய மிகச்சிறிய பிரதான வாசலே உலகிலேயே மிகச் சிறிய வாசலைக் கொண்ட கோயில் இது என்றும் மக்கள் கூறுகின்றனர்.

சிவாலயம் அருகில் கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றின் உள்ளே தங்கத் தேருடன் கூடிய புதையல் இருப்பதாகவும் கற்களை கிணற்றுக்குள் வீசினால் உலோகத்தின் மேல் விழுவது போல் வினோதச் சப்தம் வந்ததாகவும் தற்போது எந்த சப்தமும் வருவதில்லை என்றும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com