ஆடி வெள்ளி சிறப்புகள்: அம்மன் அருளைப்பெற ‘சுருள்’ நேர்த்திக்கடன் செலுத்துவது எப்படி?

Amman Surul Vazhipadu - அம்மன் சுருள்
Amman Surul Vazhipadu - அம்மன் சுருள்AI Image
Updated on

ம்மன் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் வழிபாடுகளில் 'சுருள்' எடுத்துச் செல்வது என்பது மிகச்சிறப்பு வாய்ந்த, காலம் தொட்டே பின்பற்றப்படும் ஒரு முக்கிய நேர்த்திக்கடன் மற்றும் வழிபாட்டு முறையாகும்.

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பக்தர்கள் கூழ் வார்த்தல், நேர்த்திக் கடன் செலுத்துதல், முளைப்பாரி திருவிழாக்கள் நடைபெறும். அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு போன்றவற்றை எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அந்த வகையில் சுருள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கமும் உள்ளது.

வேண்டுதலை நிறைவேற்றும் அம்மன் சுருள் செலுத்தும் முறை:

சுருள் என்பது அம்மனுக்கு படைக்கப்படும் மங்கலப் பொருட்கள் அடங்கிய ஒரு சீர்வரிசை தட்டாகும். கிராமப்புறங்களில் திருமணத்திற்குப் பெண் வீட்டார் சீர் கொண்டு செல்வதுபோல, தங்களின் காவல் தெய்வமான அம்மனுக்கு பக்தர்கள் அன்புடன் கொண்டு செல்லும் சீராக இது கருதப்படுகிறது.

வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூ மற்றும் காணிக்கையாக பணம் ஆகியவற்றை ஒரு புதிய துணியிலோ அல்லது தாம்பாளத் தட்டிலோ வைத்து சுருட்டி அல்லது மடித்துக் கட்டுவது 'சுருள்' என்று அழைக்கப்படுகிறது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறவும், குடும்பத்தில் நலம் பெருகவும், அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இந்த சுருளைப் படைக்கின்றனர்.

சுருள் எடுத்துச்செல்லும் முறை:

ஒரு வெற்றிலையின் மேல் பாக்கு, பழம்(வாழைப்பழம், எலுமிச்சம் பழம்), பூ மற்றும் காணிக்கையை வைத்து, அம்மனுக்கு சாத்துவதற்காக பட்டுப்புடவை போன்றவற்றை வைத்து அம்மனின் திருநாமத்தை மனதில் நினைத்து சுருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சுருளை ஒரு தட்டிலோ அல்லது கைகளில் ஏந்தியோ பக்தியுடன் கோவிலுக்குச் செல்லவேண்டும்.

அத்துடன் வளையல்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், கண்ணாடிப் பொருட்கள், பூமாலைகள் போன்ற வற்றையும் எடுத்துச்செல்வது வழக்கம். சிலர் இதனை நடைபயணமாகக்கூட செய்வார்கள். கோவிலை அடைந்ததும் அர்ச்சகரிடம் இந்தச் சுருளை கொடுத்து விட அர்ச்சகர் அதை அம்மனின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து, பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் மற்றும் பிரசாதங்களை வழங்குவார்.

திருவிழாக்களில் சுருளின் முக்கியத்துவம்:

பல குடும்பங்களில் குலதெய்வமான அம்மனுக்கு பொங்கல் வைப்பதுடன் சுருள் வைத்து வழிபடுவதும் கட்டாயமான சடங்காக உள்ளது. நோய் நொடிகளிலிருந்து விடுபடவும், திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற வேண்டுதல்கள் நிறைவேறவும் பக்தர்கள் சுருள் எடுத்துச் செல்வதாக நேர்த்திக்கடன் செய்கிறார்கள்.

கிராமப்புறங்களில் திருவிழா தொடங்கும் முன் ஊர் பொதுமக்கள் சார்பில் அம்மனுக்கு சுருள் வைத்து அழைப்பு விடுக்கும் வழக்கமும் உண்டு. இதனை சுருள் மாற்றுதல் என்கிறார்கள்.

Amman Surul Vazhipadu - அம்மன் சுருள்
Amman Surul Vazhipadu - அம்மன் சுருள்AI Image

திருவிழாவின் முக்கிய நாட்களில் ஆடி வெள்ளி, பங்குனி உத்திரம் அல்லது மாசிக்கொடை போன்ற முக்கிய நாட்களில் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து அல்லது ஆற்றங்கரையிலிருந்து மேளதாளங்கள் முழங்க சுருள் தட்டுகளை தலை மீது சுமந்து கொண்டு ஊர்வலமாகக் கோவிலுக்கு வருவார்கள். சில ஊர்களில் திருமணம் ஆன பெண்கள் தங்கள் தாய் வீட்டு சீராக அம்மனுக்கு சுருள் எடுத்து வந்து சமர்ப்பிக்கும் வழக்கமும் உண்டு. இதனை 'குடும்ப சுருள்' என்பார்கள்.

தென் மாவட்டங்களில் கொண்டாடப்படும் அம்மன் சுருள் திருவிழாக்கள்:

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் கொங்குப் பகுதிகளில் இந்த "சுருள் வழங்கும் விழா" திருவிழாவின் முக்கிய அங்கமாக கொண்டாடப்படுகிறது. வீட்டில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெற வேண்டி அம்மனுக்கு "பட்டுச் சுருள்" சாத்துவதாக வேண்டிக் கொள்வார்கள்.

இதையும் படியுங்கள்:
இன்று முதல் ஆஷாட நவராத்திரி: உங்கள் வீட்டுப் பூஜையறையை வாராஹி பீடமாக மாற்றுங்கள்!
Amman Surul Vazhipadu - அம்மன் சுருள்

அம்மை போன்ற வெப்ப நோய்கள் நீங்கிய பிறகு, அம்மனுக்கு குளிரக் குளிர சுருள் பொருட்களைக் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி தங்களின் விவசாயம் செழிக்கவும், ஊர் நலம் பெறவும் "ஊர் சுருள்" கொடுக்கும் பழக்கமும் பல கிராமங்களில் இன்றளவும் உயிர்ப்போடு உள்ளது.

இந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் குலதெய்வத்தின் அருளை முழுமையாகப் பெற்று, குடும்பத்தில் உள்ள தடைகள் நீங்கி, செல்வமும் ஆரோக்கியமும் பெருகும் மங்கல வாழ்வை நீங்கள் அடைவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com