
செங்கல்பட்டுக்கு அருகில் அரசர் கோவில் எனுமிடத்தில் வலது பாதத்தில் ஆறு விரல்கள் உடைய சுந்தர மகாலக்ஷ்மி கோவில் உள்ளது. இங்கு கிழக்கு முகமாக தாயார் தரிசனம் தருகிறார். மேலிருக்கும் கைகளில் தாமரை மலர்களுடனும் , கீழ் இரு கைகள் அபய, வரத முத்திரைகள் காட்டி பத்மாசன கோலத்தில் அமர்ந்திருக்கிறாள். இந்த சுந்தர மகாலக்ஷ்மியின் ஆறுவிரல் பாதத்தை தரிசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தருகிறாள் என்பது ஐதீகம்.
வெள்ளிக் கிழமைகளில் விசேஷ திருமஞ்சனம் செய்யப்படுகிறது. வரலக்ஷ்மி தினத்தன்றும், அக்ஷயத்ருதியை அன்றும் கோவில் விழா கோலம் காண்கிறது. இக்கோவில் மண்டபத்துக்கு முன் ஒரு இசை மண்டபம் உள்ளது. ஒவ்வொரு தூணையும் விரலால் சுண்ட ஒவ்வொரு ஸ்வரத்தை எழுப்புகிறது. நான்கு வேதங்களை குறிக்கும் விதமாக இங்குள்ள சிறு துளை ஒன்றில் குச்சியை சொருகி அது மறுபக்கம் வரும் போது நான்கு பாகங்களாக பிளந்து வருகிறது.
இந்த மண்டபத்திற்கு வெளியே வலது புறம் அட்சய கணபதி வைணவ தும்பிக்கை ஆழ்வாராக காட்சி தருகிறார். அனுமன் ஒருமுறை விநாயகரிடம் இந்த அரசர் கோவில் நிவேதனங்களைச் செய்ய அட்சய பாத்திரம் கேட்டார்.
அனுமனின் விருப்பத்தை அறிந்து மகாலக்ஷ்மி விநாயகர் மூலமாக அனுமனுக்கு அதை அளித்தாள். எனவே இவருக்கு அட்சய கணபதி என்ற பெயர் ஏற்பட்டது. இந்த ஆலயம் பிரசாதங்கள் அனுமன் மேற்பார்வையில் தயாரிக்கப்படுகிறதாக ஐதீகம்.
சுந்தர மகாலக்ஷ்மியின் சன்னதிக்கு இடப்புறம் தலையில் பலாப்பழம் ஏந்திய பலாப்பழ சித்தர் சிற்பம் உள்ளது. தினமும் இந்த சித்தர் பலாப்பழத்தை படைப்பாராம். இன்றும் அபிஷேக தினங்களில் பலாச்சுளை பழம் அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. தாயாரின் கருவறையில் யோகநரசிம்மமூர்த்தி, குபேரன், காளிங்க நர்த்தன கண்ணன், பரமபதநாதர், த்ரிவிக்ரமர் ஆகிய பெருமாள்கள் தேவிக்கு காவலாக அருள் புரிகின்றனர்.
பெருமாள் கமலவரதராஜன் என்ற பெயருடன் சீதேவி பூதேவியோடு நின்ற கோலத்தில் உள்ளார். ஜனக மகாராஜாவும் பெருமாளும் ஒன்றாக இருந்தபடியால் இத்தலத்திற்கு அரசர் கோவில் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த தலம் ஒருமுறை நான்முகனுக்கு ஏற்பட்ட சாபத்தை போக்கியது. இங்கு ஜனக மகாராஜா மற்றும் பெருமாளை சந்தித்து பிரம்மா சாபவிமோசனம் பெற்றார்.
இக்கோவிலில் தினமும் ஜனக மகாராஜா பெருமாளை பூஜிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒருநாள் ஜனகர் வராததால் பெருமாளே ஜனகர் தங்கியிருந்த இடத்திற்கு வந்தார். அந்த வேளையில் ஜனகர் இல்லை. பெருமாள் தானே ஜனகர் அமரும் சிம்மாசனத்தில் அமர்ந்து ஜனகர் செய்வது போலவே தனக்கு பூஜை செய்தார். நடந்ததை அறிந்து ஜனகர் மெய் சிலிர்த்தார். தன் நித்ய கர்மாவை தவற விட்டதால் ஆலயம் எழுப்ப விண்ணப்பித்தார் பெருமாள். தேவலோக விஸ்வகர்மாவை அனுப்பி ஆலயம் எழுப்பச் சொன்னார். அப்படி எழுப்பப்பட்ட கோவில்தான் இந்த அரசர் கோவில்.
நித்ய கர்மா செய்த பெருமாள் விவகாரத்தில் மகாலக்ஷ்மி மனம் வருந்தினாள். பக்தன் பரந்தாமனை நோக்கி வரலாம். ஆனால் பரந்தாமன் பக்தனை நோக்கிச் செல்லலாமா என்று கோபம் கொண்டாள். இதைக்கண்ட பெருமாள் அந்த ஆலயத்தில் லக்ஷ்மிக்கே முதல் மரியாதை என்ற வரம் அளித்தார். மகிழ்ந்த மகாலக்ஷ்மி தாமரையில் வசிக்கும் தன் சார்பாக எப்போதும் பெருமாள் தாமரை மொக்கை வைத்துக் கொண்டு அருள் அளிக்க வேண்டும் என கேட்க பெருமாளும் தாமரையை ஏந்தி கமல வரதராஜ பெருமாளாக கோவில் கொண்டார்.