நாட்டையும் வீட்டையும் சுபிட்சம் பெற வைக்கும் தேவசயனி ஏகாதசி!

சயனக் கோலத்தில் மகாவிஷ்ணு
சயனக் கோலத்தில் மகாவிஷ்ணுhttps://www.astroyogi.com
Published on

ரு வருடத்தில் இருபத்தி நான்கு ஏகாதசிகள் வருகின்றன. அவை ஒவ்வொன்றுமே ஒரு சிறப்பைப் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியானது பெருமை வாய்ந்தது. இந்த ஏகாதசி சயனி ஏகாதசி, தேவ போதி ஏகாதசி, விஷ்ணு சயன ஏகாதசி, தாயினி ஏகாதசி  என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

தேவசயனி ஏகாதசி தினம் நாளை 17ம் தேதி புதன்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. ஜூலை 16ம் தேதி மாலை 6.39 மணி துவங்கி, ஜூலை 17ம் தேதி இரவு 7.16 வரை ஏகாதசி திதி உள்ளது. பாரனை செய்ய வேண்டிய நேரமாக ஜூலை 18ம் தேதி காலை 5.35 முதல் 10 மணி வரையிலான நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அனைத்து ஏகாதசிகளும் திதி துவங்கும் நாளிலேயே ஆரம்பமாகும். ஆனால், ஹரி சயனி அல்லது யோக சயனி ஏகாதசி மட்டும் முந்தைய நாள் இரவிலேயே துவங்கி விடுவதாகப் புராணங்கள் கூறுகின்றன.

பகவான் மகாவிஷ்ணு தன்னுடைய உலகக் கடமைகளை நிறைவேற்றிய பிறகு பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயனித்து நான்கு மாதங்கள் தியானத்தில் ஆழ்ந்த தினம் இதுவாகும். அந்த நான்கு மாதங்களும், ‘சதுர்மாஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. ஆடி மாதம் என்பது பொதுவாகவே சிறப்புகுரிய மாதமாகும். அதோடு, மகாவிஷ்ணுவின் அருள் நிறைந்த சந்திரனும் சூரியனும் ஒரே ராசியில்  சஞ்சரிக்கும் சிறப்பைப் பெற்ற மாதம் ஆகும்.

தேவர்கள் உறங்கச் செல்லும் காலம் என்பதால் இந்த ஏகாதசி விரதத்திற்குப் பிறகு வைதீக காரியங்கள் சிறிது நாட்களுக்கு நடத்த மாட்டார்கள். ஹோமத்தில் அளிக்கும் அன்னத்தை உண்பதற்கும் தேவர்கள் வர மாட்டார்கள். மகாராஷ்டிரா மக்கள் பண்டரிபுரம் சென்று விட்டலனை வழிபடுகிறார்கள். மற்ற பல மாநில மக்கள் கோதாவரி நதியில் நீராடி காலாராமர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு கதை இருப்பது போல தேவசயன ஏகாதசிக்கும் ஒரு கதை உண்டு.

முன்பு ஒரு காலத்தில் மந்தாதர் என்ற மன்னன் சிறப்பாக ஆட்சி நடத்தி வந்தான். அவரது நீதி தவறாத ஆட்சியில் நாட்டு மக்களும் எந்தக் குறையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். ஒரு முறை கடுமையான பஞ்சமும் வறட்சியும் அந்த நாட்டை தாக்கியது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மக்கள் அதிலிருந்து மீள முடியாமல் தவித்தனர். கடைசியாக, மன்னனிடம் சென்று மக்கள் முறையிட்டனர். இந்த திடீர் பஞ்சத்திற்குக் காரணம் தெரியாமல் தவித்த மன்னனும் தனது படைகளை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு காடாக சென்று பல முனிவர்களை சந்தித்து தங்கள் நாட்டின் பஞ்சம் தீர வழி கேட்டான்.

இதையும் படியுங்கள்:
பேசுவதற்கு முன் இதை படியுங்க!
சயனக் கோலத்தில் மகாவிஷ்ணு

கடைசியாக ஆங்கிரஸ முனிவரை சந்தித்தான் மன்னன். முனிவர் மன்னனின் நிலையைக் கேட்டு, ‘உங்கள் ராஜ்ஜியத்தில் பிராமணன் அல்லாத ஒருவன் வேள்வி, யாகங்களில் ஈடுபட்டதன் காரணமாகத்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவனை உடனடியாக அழித்து விட்டால் நிலை சரியாகும்’ என்றார். கொலை செய்யும் அளவிற்கு இது குற்றமில்லை எனக் கருதிய மன்னன், மாற்று வழி இருந்தால் கூறும்படி கேட்டான்.

முனிவரும் தேவசயனி ஏகாதசி விரதத்தைக் கடைபிடிக்கும்படி சொன்னார். நாடு திரும்பிய மன்னன், தான் ஏகாதசி விரதம் இருந்ததுடன் நாட்டு மக்களையும் தேவசயனி ஏகாதசி விரதம் இருக்கும்படி கூறினான். இதனால் அந்த நாட்டில் வறட்சி பஞ்சம் நீங்கி வளம் உண்டாயிற்று. தேவசயனி ஏகாதசி விரதம் இருந்தால் எந்த ஒரு பாவமாக இருந்தாலும் அது நீங்கி ஆன்மிக சக்தி அதிகரிக்கும். வாழ்வில் இருக்கும் அத்தனை தடைகள், பாவங்கள் மற்றும் சாபங்களால் ஏற்படும் தீமைகள் அனைத்தும் விலகும்.

பாண்டுரங்கன் மீது தீராத பக்தி கொண்ட துக்காராம் மகாராஜ் மற்றும் ஞானேஸ்வர் ஆகியோர் தங்களின் பக்தர்களுடன் பாண்டுரங்கனை காண பல மைல்கள் பாத யாத்திரையாக வந்தனர். அவர்கள் பண்டரிபுரம் வந்து சேர்ந்த நாள் ஆஷாட ஏகாதசியாகும். இதை நினைவு கூறும்விதமாக ஆஷாட ஏகாதசி நாளில் துக்காராம் மஹாராஜின் பாதுகைகள் பல்லக்கில் வைத்து பண்டரிபுரம் எடுத்து வரப்படுகிறது . பல ஊர்களில் இருந்து பக்தர்கள் பண்டரிபுரம் வந்து பாண்டுரங்கனை வழிபட்டுச் செல்வது வழக்கமாகும்.

இத்தனை சிறப்பு வாய்ந்த தேவசயனி ஏகாதசி விரதத்தை நாமும் கடைப்பிடித்து மகாவிஷ்ணுவின் அருளைப் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com