விஸ்வரூப தரிசனத்தின் அளப்பரிய பலன்கள் தெரியுமா?

திருச்செந்தூர் முருகன் தரிசனம்
திருச்செந்தூர் முருகன் தரிசனம்

விஸ்வரூப தரிசனம் என்றால் அதிகாலையில் இறைவனைக் காணும் முதல் தரிசனம் என்று பொருள். அதாவது, இறைவனை திருமஞ்சனத்திற்கு முன்னே அவரது முந்தைய தினத்தின் அலங்காரத்தில் தரிசிப்பது. திருமஞ்சனம் என்னும் சொல் இறை உருவங்களுக்கு நடைபெறும் நீராட்டுதலைக் குறிக்கும். மற்ற தரிசனத்திற்கும் விஸ்வரூப தரிசனத்திற்கும் என்ன வித்தியாசம் என்கிறீர்களா? நாம் இறைவனைக் காண்பது தரிசனம். ஆனால், இறைவன் நம்மைப் பார்ப்பது விஸ்வரூப தரிசனம். காலையில் முதல் முறை தனக்கு முன் இருக்கும் திரை விலக்கப்பட்டதும் தன்னை பார்க்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று இறைவன் பார்ப்பார் அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது விழும் அதுதான் விஸ்வரூப தரிசன சிறப்பு.

ஒரு கோயிலில் விஸ்வரூப தரிசனத்திற்காகக் காத்திருந்தபோது வந்திருந்தவர்களில் கண் பார்வையற்றவர்களும் இருந்தார்கள். அந்தக் காலை நேரத்தில் அவர்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருந்தது வியக்க வைத்தது.  இந்த விஸ்வரூப தரிசனத்தின் சிறப்பை அறிந்துதான் அந்த கண் பார்வை அற்றவர்களும் வந்திருக்கிறார்கள். இறைவனை அவர்களால் பார்க்க முடியாவிட்டாலும் இறைவனின் அருட்பார்வை அவர்களுக்குக் கிடைக்கும் அல்லவா. எனவே, இறைவனின் அருட்பார்வை தங்கள் மீது விழவில்லையே என்று ஏங்குபவர்கள் உங்கள் பகுதியில் உள்ள தொன்மையான ஆலயத்தில் தினசரி விஸ்வரூப தரிசனத்திற்கு சென்று வாருங்கள். விரைவில் அவனது அருட்பார்வை உங்கள் மீது விழுந்து உங்கள் துன்பங்கள் யாவும் ஒரு முடிவுக்கு வரும் என்பது உறுதி.

திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனின் விஸ்வரூப தரிசனம் எப்படி இருக்கும் தெரியுமா?

குழந்தையாக இருந்த முருகன் தேவர்களுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்த செய்தி கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. போர்க்களத்தில் சூரபத்மனுக்கும் விஸ்வரூப தரிசனம் தந்த பின்னரே அவனை ஆட்கொண்டு அருள்புரிந்தார். இந்த தரிசனத்தின்போது முருகனின் சேனை தலைவர் வீரபாகு முருகனின் உடலில் பதினான்கு உலகங்களையும் தரிசிக்கும் பேறு பெற்றார். இதன் அடிப்படையில் தினமும் காலை 5 மணிக்கு திருச்செந்தூர் கோயிலில் நடக்கும் விஸ்வரூப தரிசனம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

இந்த தரிசனத்தின்போது வள்ளியம்மன் கோயிலில் செந்திலாதிபன் சுப்ரபாதம் பாடப்படும். அதன்பின் பள்ளியறை தீபாராதனையும் கருவறையில் மூலவருக்கு பூஜையும் நடைபெறும். அதன் பின் கொடிமரத்தடியில் பள்ளியறையில் வைத்த பாலும் கற்கண்டும் பக்தர்களுக்கு வழங்கப்படும். விஸ்வரூப தரிசனம் கண்டவர்களுக்கு வாழ்வில் எல்லா தடைகளும் நீங்கி சுபயோகம் உண்டாகும். அதிகாலை விஸ்வரூப தரிசித்தின்போது பன்னீர் இலை விபூதி பிரசாதம் கொடுப்பது வழக்கமாகும். பன்னீர் இலை விபூதி பிரசாதத்தை வாங்குவதற்காகவே விஸ்வரூப தரிசன நேரத்தில் அதிக அளவிலான பக்தர்கள் சுப்பிரமணியர் சன்னிதி முன்பாக காத்திருப்பார்கள். பன்னீர் இலை விபூதியை நோய் தீர்க்கும் அருமருந்தாகப் பயன்படுத்துவதால் அதற்காகவே அனேக பக்தர்கள் காத்திருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
இஞ்சி, பூண்டு, மிளகு ருசிக்காக மட்டுமல்ல; ஆரோக்கியம் பெறவும்தான்!
திருச்செந்தூர் முருகன் தரிசனம்

பழனியில் அதிகாலை முருகன் மீது வியர்வை துளிகள் இருப்பதைக் காண முடியும். காலையில் மூலவர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் முழுவதும் களையப்பட்டு சிறு  வில்லையாக பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள். இது தீராத நோயையும் தீர்க்கும் அருமருந்தாகும். சந்தனம் களையப்பட்ட பிறகு நடத்தப்படும் தரிசனத்திற்கு விஸ்வரூப தரிசனம் என்று பெயர்.

ஸ்ரீரங்கம் தலத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை விசுவரூப தரிசனம் செய்தால் உங்களுக்கு பணம் வந்து குவியும். இந்த நேரத்தில் ஸ்ரீ ரங்கநாதரை மனமுருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும். திருமணமாகாதவர்களுக்கு சுக்ர தோஷம் விலகி, உடனே திருமணம் கைகூடும்.

சிறப்புகள் பல பெற்ற எந்தக் கோயிலிலும் காலையில் விஸ்வரூப தரிசனத்தை தரிசித்தால் எண்ணற்ற பலன்களை பெற்று வாழ்வில் சிறக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com