மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளத்தின் பெருமை தெரியுமா?

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளம்
Published on

துரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் அமைந்திருக்கும் பொற்றாமரைக் குளம் மிகவும் பழைமையும் பெருமையும் வாய்ந்தது. மிகத் தொன்மையான இக்குளம் செவ்வக வடிவில் 165 அடி நீளம் 120 அடி அகலம் கொண்டது. பொற்றாமரை குளம் என்ற சொல், பொன் + தாமரை + குளம் எனப் பொருள் தரும். இந்தக் குளத்திற்கு ஞான தீர்த்தம், முக்தி தீர்த்தம், உத்தம தீர்த்தம், ஆதி தீர்த்தம் போன்ற பெயர்களும் உண்டு. இந்தப் பொற்றாமரை குளத்தின் வடக்குக் கரையில் உள்ள தூண்களில் சங்கப் புலவர்களின் உருவங்கள் உள்ளன. தென்கரை மண்டபச் சுவர்களில் திருக்குறள் பாக்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச் சுவர்களில் திருவிளையாடல் புராணக் கதைகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.

நீங்கள் எந்தக் குளத்திற்குச் சென்றாலும் தங்கத் தாமரையை பார்க்க முடியாது. ஆனால், மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றால் நிச்சயம் தங்கத் தாமரையை காணலாம். இங்கு அமைந்துள்ள பொற்றாமரை குளத்தில் ஒரு காலத்தில் தங்கத் தாமரைகள் பூத்ததாகவும், அதைக்கொண்டு இந்திரன் சுந்தரேஸ்வரரை பூஜித்ததாகவும் வரலாறு. அதை நினைவுபடுத்தும் வகையில் இப்போதும் தங்க முலாம் பூசப்பட்ட தாமரையை குளத்தில் மிதக்க விட்டிருக்கிறார்கள்.

மூலவர் சுந்தரேஸ்வரருக்கு கருவறை கட்டிய பாண்டியனின் உருவம் இந்தக் குளத்தின் வடகரையில் உள்ள தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தப் படித்துறை, ‘பாண்டியன் படித்துறை’ என்று அழைக்கப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயில் கட்டுவதற்கு முன்பே இந்தக் குளம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

சிவபெருமான் தன்னுடைய 64 திருவிளையாடல்களை மதுரையில்தான் நிகழ்த்தினார். இதில் வெள்ளை யானையின் சாபம் தீர்த்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, நக்கீரரை உயிரோடு எழுப்பியது என்று பல புராண நிகழ்வோடு தொடர்பு கொண்டது இந்தப் பொற்றாமரை குளம்.

இந்தப் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வாழ்வது கிடையாது. இதற்கு ஒரு புராணக் கதை கூறப்படுகிறது. முன்பொரு காலத்தில் மழை பொய்த்துப் போன காரணத்தால் மதுரையில் நீர் நிலைகள் வற்றத் தொடங்கின. அதுவரை மதுரையில் உள்ள ஒரு குளத்தில் தனக்கான உணவை சாப்பிட்டு வந்த நாரை ஒன்று அக்குளம் வற்றிப்போனதால் தனது பசியை போக்க வேறு குளத்தை தேடிப் போனது. அப்படி அது சென்றடைந்த தண்ணீர் நிறைந்த குளம்தான் மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளம்.

பொற்றாமரை
பொற்றாமரை

அந்தக் குளத்தின் அழகை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தது நாரை. அப்போது ரிஷிகள் பலர் அதில் நீராடிக் கொண்டிருந்தனர். அவர்களின் மீது குளத்தில் இருந்த மீன்கள் தாவிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன. அந்தக் கொழுத்த மீன்களைக் கண்டு ஆச்சரியம் அடைந்த நாரையின் நாக்கில் எச்சில் ஊறியது. மகிழ்ச்சியோடு அக்குளத்திலிருந்த மீன்களை சாப்பிடலாம் என்று நினைத்து குளத்தில் இறங்க நினைத்த நாரை, சற்றே அதிர்ச்சியோடு நின்றது. அப்போது அதன் மனதில் ஒருவித பயம் தொற்றிக் கொண்டது. ‘அடடா தவறு செய்ய இருந்தேனே. முனிவர்களுடன் அன்பாக விளையாடும் இந்த மீன்களை நாம் சாப்பிட்டால் அது பாவமாகி விடுமே. அதோடு, முனிவர்கள் நமக்கு சாபம் கொடுக்க நேருமே’ என்று நினைத்த நாரை தனது முடிவை மாற்றிக்கொண்டு உண்ணாநோன்பு இருக்கத் தொடங்கியது.

இதையும் படியுங்கள்:
குறைகளைக் கொண்டாடக் கற்றுத்தரும் ஜப்பானிய ‘கின்ட்சுகி டெக்னிக்’ பற்றி தெரியுமா?
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளம்

நாரையின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட ரிஷிகள், அந்த நாரைக்கு பொற்றாமரை குளத்தின் பெருமையையும் ஈசனின் மகிமையையும் எடுத்துரைத்தனர். அதைக் கேட்டு அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்த நாரை சிவபெருமானை நோக்கி வணங்கியது. இதில் உள்ளம் நெகிழ்ந்த ஈசன், நாரையின் முன்பு தோன்றி, ‘உனது பக்தியில் யாம் மகிழ்ந்தோம். உனக்கு என்ன வரம் வேண்டும்’ எனக் கேட்டார் .

உடனே அந்த நாரை, ‘என்னைப் போல் இங்கு வரும் உயிரினங்களும் மனிதர்களும் இந்தப் பொற்றாமரை குளத்தில் உள்ள மீன்களின் மீது ஆசைப்பட்டு அதை சாப்பிட இந்தக் குளத்திற்குள் இறங்கலாம். மீன்களின் உயிர் போவதால் இந்தக் குளத்தின் புனிதம் கெடலாம். எனவே, இந்தக் குளத்தில் மீன்களே வசிக்காமல் செய்ய வேண்டும். மேலும், எனக்கு உங்கள் காலடியில் நிரந்தர இடம் வேண்டும். எனக்கு முக்தியை அருளுங்கள்’ என்று வேண்டியது. அப்படியே அருள் செய்தார் சிவபெருமான். இதன் காரணமாகத்தான் இன்றளவும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளத்தில் மீன்கள் வசிப்பது கிடையாது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றால் இந்தப் பொற்றாமரை குளத்தின் அழகையும் அதன் சிற்பங்களையும் தங்கத் தாமரையையும் கண்டு ரசித்து விட்டு வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com