
முப்பெரும் தேவியரில் சரஸ்வதி தேவி கல்விக்கு அதிபதியாக விளங்குகிறாள். அதற்கேற்றாற்போல்தான் இவளது வாகனமும் அன்னப் பறவையாக இருக்கிறது. அன்னப் பறவை பாலையும் தண்ணீரையும் தனித்தனியாகப் பிரிக்கும் இயல்புடையது. அதைப்போல, கல்வியாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் இருக்க வேண்டிய நற்பண்புகளை உணர்த்துகிறது அன்னப் பறவை. கல்வியாளர்கள் விவேகத்துடன் தீயவற்றை நீக்கி, நல்லவற்றை ஏற்க வேண்டும் என்பதைத்தான் அன்னப்பறவை நமக்கு உணர்த்துகிறது.
கலைவாணி தமது கையில் ஏந்தி இருக்கும் வீணை சிவபெருமான் அருளியது. இது ‘கச்சபி’ என்ற பெயர் கொண்டது. சரஸ்வதி தேவியின் கைகளில் இருக்கும் வீணையும் சுவடியும் கல்வியின் மேன்மையையும், கலைகளின் திறமைகளையும் உணர்த்துவதால்தான் கலைமகள் என்ற பெயருக்கு சொந்தக்காரியாக இவள் இருக்கிறாள். இத்தேவியின் கரங்களில் இருக்கும் மணிமாலை, சரஸ்வதி தேவி மொழி வடிவானவள் என்பதை உணர்த்துவதற்காகவே அட்சமாலை என போற்றப்படுகிறது.
பிரசித்தி பெற்ற சமஸ்கிருத அகராதியான அமரகோஷத்தை இயற்றியவர் அமரசிம்மன் என்னும் பண்டிதர். இவர் ஒரு ஜைனராக இருந்தாலும் சரஸ்வதி தேவியின் உபாசகர். இவர் ஆதிசங்கரருடன் ஒரு நாள் விவாதம் செய்ய நேர்ந்தது. அதற்கு முன்பு, ‘நம் இருவருக்கும் இடையில் திரை ஒன்று இருக்க வேண்டும்’ என்ற நிபந்தனையோடு வாதிட ஆரம்பித்தார் அமரசிம்மன். இதை, ஆதிசங்கரரும் ஏற்றுக்கொள்ள இருவருக்கும் இடையில் திரை போடப்பட்டது.
ஆதிசங்கரர் தமது அருகில் கலசம் ஒன்றை அமைத்து, அதில் கலைவாணியை எழுந்தருளச் செய்து விவாதத்தை ஆரம்பிக்க, அமரசிம்மன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலைக் கூறினார். இப்போது ஆதிசங்கரர் கடினமான கேள்விகளாகக் கேட்க அமரசிம்மனும் சளைக்காமல் பதிலைக் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த ஆதிசங்கரர் கண்களை மூடி தியானம் செய்ய, அப்போது தன்னிடம் வாதிடுவது அமரசிம்மன் அல்ல, சாட்சாத் அந்தக் கலைவாணியே என்பதை நன்கு அறிந்து கொண்டார்.
தொடர்ந்து சரஸ்வதி தேவியை ஆதிசங்கரர் வழிபட, இருவருக்கும் இடையில் இருந்த திரை அறுந்து விழுந்தது. இதனால் தொடர்ந்து ஆதிசங்கரர் கேட்ட கேள்விகளுக்கு அமரசிம்மனால் பதில் கூற இயலவில்லை. தோல்வியடைந்த அமரசிம்மன் மனம் கலங்கி, வாதக் கட்டளையின்படி தான் எழுதிய அனைத்து கிரந்தங்களையும் தீயில் இட்டு எரிக்கத் தொடங்கினார்.
இதைப் பார்த்த ஆதிசங்கரர் ஓடோடி வந்து அவரது செயலைத் தடுத்து நிறுத்தினார். ஆனாலும், அவரால் ஒரே ஒரு ஓலைச்சுவடியை மட்டும்தான் காப்பாற்ற முடிந்தது. அதுவே ‘அமரகோசம்.’ இது இந்தியாவில் தோன்றிய அனைத்து மதத்தினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழைமையான சமஸ்கிருத நூல் ஆகும். அமரகோசம் என்றால் அழிவில்லாதது என்று பொருளாகும்.
இதனால் இந்தியாவிலுள்ள அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொண்ட தேவியாக கலைமகள் சரஸ்வதி இருக்கிறாள் என்பதற்கு இதைவிட மிகச் சிறந்த உதாரணமே தேவையில்லை.