ராவண வதத்தை விட, மேகநாதன் வதம் ஏன் உயர்ந்தது? லக்ஷ்மண விரத மாண்புதான் காரணம்!

Lakshmana Vratham
Meganathan vatham
Published on

ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் ஏற்ற பிறகு அவரைப் சந்திக்க அகஸ்திய முனிவர் வந்தார். அவர் சபையில் அமர்ந்ததும் எல்லோரும் ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர். அப்போது அகஸ்தியர் சபையினரைப் பார்த்து ‘ராவண, கும்பகர்ண வதத்தை விட  லக்ஷ்மணன், ராவணனின் மகன் மேகநாதனை வதைத்ததே மாபெரும் வீரச் செயல்’ என்றார். அதைக்கேட்டு அனைவரும் ஆச்சரியமாக அகஸ்தியரைப் பார்க்க, ஸ்ரீராமர்  ஏதும் அறியாதவர் போல், ‘எதை வைத்து அப்படிக் கூறினீர்கள்? மேகநாதன் என்ன அவ்வளவு சக்தி வாய்ந்தவனா?’ என்று கேட்டார்.

உடனே அகஸ்தியர் ‘‘ஸ்ரீராமா, நீ எல்லாம் அறிந்தவன். அறியாதவர் போல் லக்ஷ்மணன் பெருமையை என் வாயால் கூற வேண்டும் என்றுதானே இப்படிக் கேட்கிறீர்கள் சரி. நானே கூறுகிறேன்’’ என்று சொல்லத் தொடங்கினார்.

இதையும் படியுங்கள்:
இன்று அங்காரக சிவராத்திரி: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்!
Lakshmana Vratham

"சபையோர்களே, ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன். இந்திரனுடன் போர் புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததுதான். நான்முகனான பிரம்மா, இந்திரனை விடுவிக்க மேகநாதனிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு அவன் தனக்கு மூன்று வரங்களைத் தந்தால் இந்திரனை விடுவிப்பதாக பிரம்மனிடம் கூறினான்.

அவை, ‘14 ஆண்டுகள் உணவு உண்ணாதவரும், 14 ஆண்டுகள் ஒரு நொடி கூட உறங்காதவரும், 14 ஆண்டுகள் எந்த ஒரு பெண்ணின் முகத்தையும் பார்க்காதவராக இருப்பவர் எவரோ அவரால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும்’ என்று மேகநாதன் கேட்டான். பிரம்மாவும் அந்த மூன்று வரங்களைக் கொடுக்க, அவன் இந்திரனை விடுவித்தான். இப்படிப்பட்ட வரங்களை வாங்கிய மேகநாதனை வதம் செய்த பெருமை லக்ஷ்மணரையே சேரும்” என்று கூறி முடித்தார்.

 ஸ்ரீராமர் “ஸ்வாமி, லக்ஷ்மணன் என்னுடன் 14 ஆண்டுகள் இருந்தபோது எந்த ஒரு மாதையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அது உண்மைதான். ஆனால், உண்ணாமல், உறங்காமல் எப்படி இருந்தான்’ என்று ராமர் கேட்க, ‘எல்லாம் தெரிந்த நீயே இப்படிக் கேட்கிறாயே ராமா. இதை லக்ஷ்மணனிடமே கேட்டுத் தெரிந்து கொள்வோமா’ என்றுகூறி, அவரை வரவழைத்தார். லக்ஷ்மணன் சபையில் அகஸ்தியரை வணங்க, லக்ஷ்மணனிடம்  அவர் உண்ணாமல், உறங்காமல் இருந்ததை விளக்கிக் கூறினார்.

இதையும் படியுங்கள்:
அண்ணன் ராவணனுக்காக தம்பி கும்பகர்ணன் செய்த உள்ளத்தை உருகச் செய்யும் உயிர் தியாகம்!
Lakshmana Vratham

‘‘அண்ணா, ரிஷ்யமுக பர்வதத்தில் அன்னை சீதை எறிந்த அணிகலன்களில் பாத அணிகலன் தவிர, வேறு எதையும் என்னால் அடையாளம் காண முடியவில்லை. ஏனென்றால், தினமும் நான் அன்னையின் பாதத்தை மட்டுமே வணங்குவேன். அடுத்து, வனவாசத்தில்போது நித்ரா தேவி என்னை ஆட்கொள்ள வந்தபோது அவளிடம், ஒரு வரம் கேட்டேன். அண்ணன் ராமரையும், சீதா தேவியையும் பாதுகாக்கவே நான் வனவாசம் வந்துள்ளேன். அது வரை எனக்கு உறக்கம் வரக் கூடாது’ என வரம் கேட்டேன். அவளும் 14 ஆண்டுகள் என்னை ஆட்கொள்ள மாட்டேன் என வரம் கொடுத்தாள்.

மேலும், நம் குலகுருவாகிய விச்வாமித்ரர் உடல் சோர்வு, பசியில்லாமல் இருக்க பலா அதிபலா என்ற காயத்ரி மந்திர உபதேசத்தால் பசி, சோர்வு அடையாமல் இருந்தேன்” என்று விளக்கமளித்தார். அங்கு கூடியிருந்த சபையினர் அனைவரும் லக்ஷ்மணனை ஆச்சர்யமாகப் பார்க்க, ஸ்ரீராமர், லக்ஷ்மணனை ஆரத்தழுவிக் கொண்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com