விநாயகருக்கு மூஷிக வாகனம் வந்த கதை தெரியுமா?

மூஷிக வாகனர்
மூஷிக வாகனர்

ந்திர சபையில் பாடகனாக விளங்கிய க்ரௌஞ்சன் என்பவன் மிகவும் வசீகரமானவன். அது மட்டுமின்றி, பிறரை ஏளனம் செய்யும் குணத்தையும் இவன் பெற்றிருந்தான். ஒரு சமயம் இந்திர சபைக்கு வந்த வாமன முனியின் காலை இவன் மிதித்து விட, கோபம் கொண்ட அந்த முனி அவனுக்கு, ‘பெருச்சாளியாகக் கடவது’ என்று சாபம் கொடுத்து விடுகிறார். இதனால் க்ரௌஞ்சன் உடனே ஒரு பெருச்சாளியாக மாறி வனத்திற்கு வந்து விடுகிறான்.

கந்தர்வ அந்தஸ்தை இழந்த அவனை, கழுகுகளும் காட்டுப் பூனைகளும் துரத்துகின்றன. இதனால் பயந்துபோன அவன், ரிஷி பராசரரின் குடிலில் ஒளிந்து கொள்கிறான். ஆள் மாறினாலும் குணம் மாறாது அல்லவா? க்ரௌஞ்சனுக்கு பெருச்சாளியின் குணம் வந்துவிடுவதால் ரிஷி குடிலில் இல்லாத நேரத்தில் அங்கிருந்த பொருட்களை எல்லாம் கடித்துக் குதறுகிறான்.

அது மட்டுமின்றி ரிஷியின் நந்தவனத்தில் பூத்திருந்த பூச்செடிகளின் வேர்களை கடித்து, செடிகளை நிலத்தில் இருந்து துண்டித்து நாசமாக்குகிறான். ஒரு பெருச்சாளி தனது குடிலுக்கு வந்து தொந்தரவு செய்வதை உடனே தனது ஞான திருஷ்டியில் அறிந்துகொண்ட பராசரர், சில நாட்களில் விநாயகருக்கு ஒரு விருந்து வைக்கிறார்.

விருந்துக்கு வந்த விநாயகருக்கு மோதகங்களை நிவேதிக்கும் பராசரர் தனது குடிலில் இருந்து கொண்டு  தனக்கு தொந்தரவு கொடுக்கும் பெருச்சாளியைப் பற்றி சொல்ல, தனது ஞானக்கண்ணால் அது கந்தர்வன் க்ரௌஞ்சன் என்று தெரிந்து கொள்ளும் விநாயகப்பெருமான், அந்தப் பெருச்சாளியை பிடித்து அதன் மீது ஏறி அமர்ந்து கொள்கிறார்.

இதையும் படியுங்கள்:
வாற்கோதுமையின் ஆரோக்கிய நன்மைகள்!
மூஷிக வாகனர்

அப்போது க்ரௌஞ்சன் மிகப்பெரிய உருவம் எடுத்து விநாயகரை கீழே தள்ள முயல்கிறான். உடனே விநாயகப்பெருமான் பல மடங்கு பெரிதாக தனது உருவத்தை மாற்ற, தனது தவறை உணரும் க்ரௌஞ்சன், “கணபதி தேவா என்னை மன்னித்து விடு. எனக்கு சாப விமோசனம் கொடு” என்று யாசிக்கிறான். க்ரௌஞ்சனை மன்னித்தாலும், தன்னால் வாம முனியின் சாபத்தை விலக்க முடியாது என்று கூறுகிறார் விநாயகப்பெருமான்.

“அப்படியென்றால் என்னை உனது வாகனமாக ஆக்கிக் கொள்” என்று அவன் கேட்டுக்கொள்ள அன்றிலிருந்து மூஷிகனான அவனையே தனது வாகனம் ஆக்கிக் கொள்கிறார் விநாயகப்பெருமான். இப்படித்தான் விநாயகருக்கு மூஷிக வாகனம் வந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com