‘வடக்குவாழ் செல்வி’ என அழைக்கப்படும் துர்கா தேவியை நவ கோலங்களில் வழிபடும் வைபவம் நவராத்திரி திருநாள். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை தாண்டவம் ஆடினாராம் சிவபெருமான். இந்த தாண்டவங்களிலிருந்து நவ துர்கைகள் தோன்றியதாக ஞான நூல்கள் விவரிக்கின்றன. இனி, நவ துர்கையரின் தோற்றத்தைக் காண்போம்.
ஆனந்த தாண்டவம்: வலக்காலை ஊன்றி, இடக்காலைத் தூக்கி சிவனார் ஆடிய ரிஷிமண்டல கோலத்தில் தோன்றியவள் சைலபுத்திரி.
ஸந்தியா தாண்டவம்: பகலும், இரவும் சந்திக்கும் வேளையில் இடக்கால் விரலால் சிவனார் இடும் கோலம் ஸப்த ஒலிக்கோலம். இதிலிருந்து தோன்றியவள் கூஷ்மாண்டா.
திரிபுர தாண்டவம்: ஈசனின் இடக்கால் பெரு விரலால் வரையப்பட்டது அஷ்ட வகைக் கோலம். இதில் தோன்றியவள் பிரம்மசாரிணி.
ஊர்த்துவ தாண்டவம்: திருவாலங்காடு தலத்தில் தன்னுடன் ஆடிய காளியை தோற்கடிக்க சிவனார் ஆடிய தாண்டவம். ஒரு காலை தரையில் ஊன்றி மறுகாலை தோளுக்கு இணையாக உயர்த்தி சிவனார் ஆடிய இந்த பிரணவக் கோலத்திலிருந்து தோன்றியவள் சந்த்ரகாந்தா.
புஜங்க தாண்டவம்: பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை சிவனார் அருந்த, அவரின் கழுத்தை பிடித்து விஷம் உள்ளே இறங்காமல் தடுத்தார் பார்வதி. அப்போது ஆடிய புஜங்க தாண்டவத்தில் தோன்றியவள் ஸ்கந்தமாதா.
முனி தாண்டவம்: பதஞ்சலி மிருதங்கம் வாசிக்க, சிவனார் ஆடிய ஆட்டம். அப்போது நெற்றிக் கண்ணில் தோன்றியவள் காத்யாயினி.
பூத தாண்டவம்: கஜாசுரனை கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம். இந்த ஆட்டத்தில் தோன்றியவள் காலராத்ரி.
சுத்த தாண்டவம்: தண்டக ஆரண்ய முனிவர்களின் அல்லல்கள் நீங்க அசுரர்களை அழித்து ஆடிய ஆட்டம். இதில் தோன்றியவள் மகாகௌரி.
சிருங்கார தாண்டவம்: நவரசங்களையும் வெளிப்படுத்தும் சிவ நடனம். இந்த நவரசக் கோலத்தில் தோன்றியவள் ஸித்திராத்ரி.