தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை கிராமத்தில் உள்ளது அருள்மிகு பாலைவனநாதர் திருக்கோயில். இந்தக் கோயிலின் ராஜகோபுரத்தை ஒட்டி 1640ம் ஆண்டு கட்டப்பட்ட நெற்களஞ்சியம் ஒன்று உள்ளது. செங்கற்களால் கட்டப்பட்ட இந்த நெற்களஞ்சியம் வட்ட வடிவம் கொண்டது. ராஜகோபுரத்தின் சிற்பங்களிலே கீழ்ப்பகுதி கருங்கல்லிலும் மேற்பகுதி கட்டமைப்பிலும் காணப்படுகிறது. மேற்கு பகுதி ஒரே கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 35 அடி, சுற்றளவு 80 அடி, 3 டன் நெல்லை சேமித்து வைக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த நெற்களஞ்சியத்தை நாயக்கர் ஆட்சி காலத்தில் கட்டியதாக வரலாறு கூறுகிறது.
நெல்லை உள்ளே கொட்டுவதற்கும் வெளியே எடுத்து வருவதற்கும் வசதியாக மூன்று வழிகள் களஞ்சியத்தின் சுவரில் அமைக்கப்பட்டுள்ளன. தானியங்கள் விஷ பூச்சிகளுக்கு இரையாகாமல் பாதுகாப்பதற்கு ஏற்ற தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட இந்த நெற்களஞ்சியம் வரலாற்று சின்னமாகவே கோயிலுக்கு வரும் பக்தர்கள் பார்க்கிறார்கள். அவரவர் வினைப்பயனின் விதிப்படி அருள்பாலிக்கும் சனி பகவான் தனியாக இக்கோயிலில் அருள்பாலிக்கிறார்.
திருக்கோயிலில் உறையும் பெருமாளை பிரம்மன், அஷ்டதிக் பாலகர்கள் ஆகியோர் வழிபட்டு பலன் அடைந்தார்கள் என்கிறது தல புராணம். இக்கோயிலில் நின்ற கோலத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவமூர்த்தி, பிரம்மா, துர்கை என பலரும் அருள்பாலிக்கிறார்கள். நான்கு திருக்கரங்களோடு அம்பிகை காட்சி அளிக்கிறார். இந்த அம்பிகையையும், பாலைவனநாதரையும் மனதார வேண்டினால் அனைத்து கஷ்டங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
தாருகாவனத்து முனிவர்கள் இறைவனைப் புறக்கணித்து அவரை அழிக்க எண்ணி தீய வேள்வி செய்து புலியை வரவழைத்தனர். இறைவன் அதை அவர்கள் மீது பாய விட, ஈசன் அந்தப் புலியின் தோலை உரித்து அதனை தனது இடையில் ஆடையாக உடுத்திக் கொண்டார். இந்த நிகழ்வு நடைபெற்ற தலம் இதுவென்று கூறப்படுகிறது. ஸ்ரீராமர், லட்சுமணன், சீதை, அர்ஜுனன் ஆகியோர் வழிபட்ட பெருமை மிக்க தலம் என்ற சிறப்பும் இதற்கு உண்டு.
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசத்தை அடுத்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த பாலைவனநாதர் திருக்கோயில்.