தினமும் வளரும் சிவலிங்கம் எங்குள்ளது தெரியுமா?
இந்தியக் கோயில்கள் தன்னுள் எண்ணற்ற அதிசயங்களை அடக்கி வைத்திருக்கிறது. அவை அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டுமாயின், நமது ஆயுள் போதாது. அப்படி ஒரு அதிசயக் கோயில்தான் வாரணாசியில் உள்ள மிகவும் பழமையானதும் பிரசித்தி பெற்றதுமான தில்பந்தேஸ்வர் மஹாதேவ் மந்திர். இந்தக் கோயில்18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் இக்கோயில் இருக்கும் இடத்தில் எள் விளைச்சல் செய்து கொண்டிருந்த நிலமிருந்துள்ளது. ஒரு நாள் திடீரென்று எள் குவியலில் இருந்து ஒரு சிவலிங்கம் தோன்றியது எனக் கூறப்படுகிறது. அதிலிருந்து இந்த சிவலிங்கத்தை இங்குள்ள மக்கள் வழிபடத் தொடங்கி விட்டனர்.
இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் 2500 ஆண்டுகள் பழைமையான சுயம்பு லிங்கம் என்று கூறப்படுகிறது. இந்த சிவலிங்கம் வருடா வருடம் எள் அளவு வளர்கிறது என்று கூறப்படுகிறது. தற்போது இந்த சிவலிங்கத்தின் உயரம் 3.5 அடியாகும். அதன் அகலம் 3 அடியாகும். மாதா சாரதா அவர்களும் இந்தக் கோயிலில் சில காலம் தன்னுடைய நாட்களை கழித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
தில்பந்தேஸ்வர் லிங்கத்தின் வளர்ச்சியை எப்படி அளக்கிறார்கள் என்றால், ஒவ்வொரு இரவும் இக்கோயிலை சாத்துவதற்கு முன்பு சிவலிங்கத்தை சுற்றி நூல் ஒன்று கட்டப்படும். காலை கோயிலுக்கு வந்து பார்க்கும்போது நூல் அறுந்திருந்தால் சிவலிங்கம் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம். இக்கோயில் பூசாரிகள் சிவலிங்கத்தின் வளர்ச்சியை குறிப்பெடுத்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். 1902ல் இருந்து குறிப்பெடுத்துக் கொண்டிருப்பதில் கவனித்தால், சிவலிங்கம் வளர்ந்து கொண்டிருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இக்கோயிலில் பனாரஸ் மற்றும் மலையாளியின் பாரம்பரிய கலவையை காணலாம். இராமாயணத்திற்கும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்த விபாந்தக முனிவர் இத்தல ஈசனை வழிப்பட்டதாகக் கூறப்படுகிறது. தில்பந்தேஸ்வரர் கோயிலில் உள்ள லிங்கத்தை விபண்டேஸ்வர் என்றும் மக்கள் அழைக்கிறார்கள். எனினும் விபண்டேஸ்வரர் லிங்கம் இதற்கு கீழ்தளத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சிலர் விபாந்தக முனிவர் தெற்கிலிருந்து வந்தவர் என்றும் அதனால்தான் தென்னகக் கோயில்களின் சாயலில் இக்கோயில் தெரிகிறது என்று கூறுகின்றனர். இங்கே ஐயப்பனுக்கான தனி சன்னிதியும் உள்ளது. வாரணாசியில் இருக்கும் ஒரே ஐயப்பனுக்கான வழிபாட்டுத் தலம் இதுவேயாகும்.
இக்கோயிலில் மகா சிவராத்திரி 15 நாட்களுக்கு நடைபெறும். மகா சிவராத்திரி இங்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தில்பந்தேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும் தன்னை பக்தியுடன் வேண்டும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்றும் நம்பப்படுகிறது.