இந்து கோயில்கள் என்றாலே பொதுவாக கலசங்கள், உயர்ந்த கோபுரங்கள் கொண்ட கோயில்களைத்தான் பார்க்க முடியும். ஆனால், சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் புதுகுப்பம் என்ற கடற்கரை கிராமத்தில் பிரமிடு வடிவில் நடராஜருக்கு கோயில் ஒன்று அமைந்துள்ளது. உலகிலேயே மிகவும் வித்தியாசமான தோற்றமுடைய கோயில் இது. எகிப்தின் பிரமிடு வடிவத்தில் அமைந்துள்ள தனித்துவமான கட்டடக்கலை காரணமாக உலகம் முழுவதிலும் இருந்து மக்களை ஈர்க்கிறது இக்கோயில்.
பிரபஞ்ச சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி தனது வசம் ஈர்க்கும் சக்தி பிரமிடுகளுக்கு உண்டு. பிரமிடுக்குள் அமர்ந்து தியானம் செய்ய தியானத்தின் பலன்களை பன்மடங்கு பெற முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஜம்மு காஷ்மீர் அரச வம்சத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான கரண்சிங் சிறந்த சிவபக்தர். இவர்தான் இக்கோயிலை 2000ம் ஆண்டு கட்டியுள்ளார்.
2004ல் ஏற்பட்ட சுனாமியால் அழிந்த இக்கோயிலை ஆரோவில் எர்த் இன்ஸ்டிடியூட் உதவியுடன் 2006ல் முன்பு இருந்த அதே இடத்தில் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. உறுதியான செம்மண் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இக்கோயிலின் கருவறையில் ஐம்பொன்னாலான கார்னேஸ்வரர் நடராஜர் கோலத்தில் காட்சி தருகிறார். அதோடு இக்கோயிலில் கயிலாசபதி லிங்கமும், சிவகாமி அம்மையும், விநாயகர், முருகன் ஆகியோருக்கு சிலைகளும் உள்ளன.
இக்கோயிலுக்கு வெளியே பிரம்மாண்டமான சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. லிங்கத்திற்கு எதிரே அழகான நந்தி ஒன்றும் உள்ளது. இக்கோயில் பெரிய பிரமிடுகளைப் போன்று 50 டிகிரி 51 அங்குலம் என்ற கோண அளவுப்படி அமைக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தின் சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி வைத்துக் கொள்ளும் சக்தி பிரமிடுகளுக்கு உண்டு. அதனால் நாம் பிரமிடுக்குள் அமர்ந்து தியானம் செய்யும் போது நமக்கு விரைவில் தியானம் கைகூடும்.
கடற்கரை அருகில் அமைதியான இடத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் பிரமிடுக்குள் அமர்ந்து தியானம் செய்யும்போது பிரபஞ்ச சக்தியின் ஆற்றல் மூன்று மடங்கு அதிகரிப்பதுடன் தியானத்தின் பயனாக பல்வேறு நன்மைகளும் கிடைக்கின்றன. இங்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக தியானமும் கற்றுத் தரப்படுகிறது.
இக்கோயில் மூலவர் நடராஜரின் வலது காதில் ஆண்கள் அணியும் தோடும், இடது காதில் பெண்கள் அணியும் தோடும் அணிந்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். கருவறை நடராஜரின் முகத்தில் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் தினமும் சூரிய ஒளி படுவது மற்றொரு சிறப்பாகும். இந்த பிரமிடு கோயிலுக்கு பலரும் தினமும் வந்து தியானம் செய்கின்றனர். இதன் மூலம் மன அமைதியும், இங்குள்ள ஈசனை வழிபடுவதன் மூலம் இறை அருளும் பெற்றுச் செல்கின்றனர்.
இக்கோயில் காலை 9 முதல் 12 மணி வரையிலும் மாலை 4 முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.