தாலி சரடை மாற்ற நல்ல நாள் எது தெரியுமா?

தாலி சரடை மாற்ற நல்ல நாள்
தாலி சரடை மாற்ற நல்ல நாள்
Published on

தாலிக்கொடியை மஞ்சள் சரடில் போட்டு இருப்பவர்களுக்கு அதனை எப்போது, எப்படி மாற்றுவது, எந்த கிழமையில் மாற்றுவது என்பதில் சந்தேகம் இருக்கும். அது குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

தாலிக் கயிற்றை நாம் அடிக்கடி மாற்றக்கூடாது. கயிறு பழுதாகி மங்கும் தன்மை வந்தால் மட்டுமே அதனை மாற்ற வேண்டும். பொதுவாக தாலிக்கயிற்றை வருடத்திற்கு இரண்டு முறை மாற்றிக்கொள்ளலாம். இவ்வளவு மதிப்புமிக்க தாலிக்கயிற்றை நாம் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மட்டும்தான் மாற்ற வேண்டும். சிலர் வெள்ளிக்கிழமைகளில் மாற்றலாம் என்று கூறுகின்றனர். ஆனால், திருமாங்கல்யத்தை வெள்ளிக்கிழமைகளில் மாற்றக்கூடாது. அது சிறந்தது அல்ல. திருமாங்கல்யத்தை மாற்றும்போது மற்றவர் யாரும் பார்க்கக்கூடாது என்பது மிக மிக முக்கியமான ஒன்று. மற்றவர்கள் துணை இல்லாமல் அவரவர்களுக்கு அவரவர்தான் மாற்றிக்கொள்ள வேண்டும். பெற்ற தாய் கூட பார்க்கக் கூடாது என்பதுதான் உண்மை. பழக்கம் இல்லாதவர்கள் அம்மாவின் துணை கொண்டு மாற்றிக்கொள்ளலாம். ஆனால், விரைவில் பழகிக்கொண்டு தனியாகவே மாற்றிக் கொள்வது சிறப்பானது.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அவரது தாலி கயிற்றையோ அல்லது தங்கத்தால் ஆன தாலி சரடையோ மாற்றக்கூடாது. அந்தக் காலத்தில் பெண்கள் மஞ்சள் கயிற்றில்தான் தாலி அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பெண்கள் தினமும் அந்தத் தாலிக் கயிற்றுக்கு மஞ்சள் தேய்த்து குளிப்பார்கள். திருமணமான சில மாதங்களில் கர்ப்பம் தரித்தவுடன் அந்த மஞ்சள் பூசிய தாலிக்கயிறு அந்தத் தாய்க்கும் சேய்க்கும் பாதுகாக்கும் கிருமி நாசினியாக இருந்தது. தாலிக்கயிற்றில் இருக்கும் மஞ்சள் பெண்களின் மார்பகத்தில் எந்த ஒரு நோயும் அண்ட விடாமல் தவிர்த்தது.

அனைவரும் பொதுவாக தாலிக் கயிற்றை மாற்றும் நாள் ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு அன்றுதான். ஆடிப்பெருக்கு அன்று எந்தவிதமான நாள் நட்சத்திரம் கிழமைகளையும் பார்க்காமல் தாலிக் கயிற்றை மாற்றிக்கொள்ளலாம். புதியதாக திருமணமானவர்கள் ஆடி 18 அன்று தாலியை மாற்றிக்கொள்வது மிகவும் சிறப்பு. 16 திரிகளைக் கொண்டதுதான் ஒரு திருமாங்கல்ய கயிறு. நாம் திருமாங்கல்யத்தை பிரம்ம முகூர்த்தமான அதிகாலை வேளையில் மாற்றுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
இயல்பாக இருக்க விடுங்கள் வீடு இன்பமுறும்!
தாலி சரடை மாற்ற நல்ல நாள்

பெண்கள் காலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து தம் கழுத்தில் உள்ள பழைய தாலிக்கயிற்றை கழற்றாமல் முடிச்சுகளை மட்டும் அவிழ்த்து அதில் உள்ள குண்டுகளை மட்டுமே எடுத்து புது தாலிக்கயிற்றில் கோர்த்து அதனை கழுத்தில் போட்ட பின்புதான் பழைய கயிற்றை கழுத்தில் இருந்து எடுக்க வேண்டும். அந்த பழைய கயிற்றை வீட்டின் அருகில் உள்ள நீர் நிலைகளில் சேர்த்து விடலாம். திருமாங்கல்யத்தில் அனைத்து குண்டுகளையும் கோர்த்துவிட்ட பின்பு நீங்கள் இடும் முடிச்சானது இடது நெஞ்சு பக்கத்தில்தான் இருக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் மஞ்சள் நீரை கரைத்து வைத்துக்கொண்டு உங்கள் கழுத்தில் கட்டிய திருமாங்கல்யக் குண்டுகளை ஏழு அல்லது ஒன்பது முறை அதில் தோய்த்து எடுக்க வேண்டும்.

அதன் பின்பு பூஜை அறையில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு உங்கள் திருமாங்கல்யத்திற்கு குங்குமப் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். பொட்டை வைத்துக்கொள்ளும்போது காயத்ரி மந்திரம் கூறுவது இன்னும் சிறப்பு. திருமாங்கல்யத்தை மாற்றிய தினத்தன்று மாலை வேளையில் குடும்பத்தோடு ஏதாவது ஒரு அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது. ஆடிப்பெருக்கென்று இப்படி செய்து தீர்க்க சுமங்கலியாக வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com