சங்கும், மணியும் பூஜைக்கு இரண்டு கண்கள் போன்றவை. அவற்றை ஏன் பூஜையில் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
மார்கழி பிறந்து விட்டாலே கிராமப்புறங்களில் விடியற்காலையில் சங்கு ஊதி, மணியடித்துக் கொண்டு, பஜனை பாடல்களை பாடிக்கொண்டு கோயில்களுக்கு பிரசாதம் எடுத்துச் செல்வார்கள். அதற்கு முன்பாகவே நாங்கள் எல்லோரும் வாசல் பெருக்கி, பெரிய பெரிய கோலங்களாகப் போட்டு வைத்திருப்போம். அதைப் பார்த்துக்கொண்டே செல்வது அவர்களுக்கானந்தம். எங்களுக்கோ பேரானந்தம்.
மணியும், சங்கும் பூஜையில் முக்கியத்துவம் வாய்ந்தவை. மணி மற்றும் சங்கொலியின் மகிமையை பற்றி சாஸ்திரமும் ஆச்சார விதிகளும் ஏராளமான தகவல்களை கூறுகின்றன.
பொதுவாக, கோயிலிலே நாம் சங்கொலி உயர்வதை கேட்கின்றோம். தீபாராதனை வேளையில் மந்திரம் ஜபிக்கும் ஓசை, மணி மற்றும் சங்கின் ஓசை என்பவை காதுகளுக்கு இன்பமூட்டும்போதும், தேவ விக்கிரகங்களுக்கு முன் தீபச்சுடர்கள் உயர்வதைக் காணும்போதும் பக்தரில் பரவசம் நிறைவதையும், மனதில் நிம்மதி பிறப்பதையும் நாம் கண்டறிந்து இருக்கிறோம்.
மணியோசை ஒரு ஓங்கார நாதம். அலை போல் உயர்ந்து படிப்படியாக தாழ்ந்து ஒரு குறிப்பிட்ட அளவில் உயரும், 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்துக்கு மனதை உணர்வூட்ட இயலும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. பக்தர்களை பரவசத்திற்குக் கொண்டு செல்லும் இயல்பு மணியோசைக்கு உண்டு என்பதை நாம் கண்டறிந்து உணர்ந்தோம்.
மணியை போல் இறைவனைச் சார்ந்த, ‘ஓம்’ என்னும் மங்கல ஓசையே சங்கிலிருந்து எழும்புகிறது. குருக்ஷேத்திர யுத்தத்தின் ஆரம்பத்தில் போர்க்களத்தில் எழுப்பக் கேட்ட சங்கொலி அறிந்தவர் மனதில் இருந்து ஒருபோதும் அகல்வதில்லை.
சங்குகளுக்குள் கடல் இரையும் ஓசை கேட்கும் என்று ஓர் நம்பிக்கை உண்டு. சங்கு வாங்கும் கடையில் அதை வாங்கும்போது அதைத் தட்டி சத்தம் கேட்பதும், காதுக்கருகில் வைத்து கடல் இரைச்சலைப் பரிசோதிப்பதும் வழக்கமானது.
ஒலியின் முக்கிய தன்மையான எதிரொலியின் அடிப்படையில் இந்த இரைச்சல் கேட்கின்றது என்பது போல், வாயுவில் எப்போதும் இதுபோன்ற எதிரொலிகள் உண்டாகிக் கொண்டிருக்கின்றன. சங்கை காதில் வைத்து பார்க்கும்போது வாயுவில் உள்ள சில அதிர்வு எண்ணில் உள்ள ஓசை அலைகளே எதிரொலிக்கின்றன.
சங்கை உரைத்து சில நோய்களுக்கான மருந்து கலவையில் சேர்ப்பதும் உண்டு. இதிலிருந்து சங்கில் ஓர் தனிப்பட்ட மருத்துவ குணங்கள் இருப்பதை அறியலாம். சங்கிலிருந்து உயரும் ஒலி அலைகளைப் பெற்றுக்கொள்ளும் நபரின் மூளையில் பயன் தரும் அதிர்வுகள் உண்டாகும் என்று நவீன சாஸ்திரம் கண்டறிந்துள்ளது.
இப்படி சங்கும், மணியும் ஒலி அதிர்வுகளை நமக்குள் உண்டாக்குவதால் அது பூஜைக்கு உகந்த பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் உள்ள உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்துகொண்டு சங்கு, மணி ஓசையுடன் பூஜை செய்து இறைவன் அருளைப் பெறுவோம்!