கடலுக்குள் மூழ்கிய துவாரகா - இந்திய இதிகாசங்களுக்கு வலு சேர்க்கும் ஓர் எச்சம்!

DWARKA
DWARKAimage credit: buildingmaterialreporter
Published on

- மணிமேகலை

இந்தியாவில் பார்க்க வேண்டிய ஆன்மீக நகரங்களில் துவாரகாவும் ஒன்று. இது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. கடவுளான கிருஷ்ணரால்  உருவாக்கப்பட்டு அவர் வாழ்ந்த நகரமாதலால், இந்தியாவின் முக்தி தரும் ஏழு இடங்களில் துவராகவும் ஒன்று. இது தங்க நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. துவாரகா என்பதற்கு சமஸ்கிருதத்தில் 'வாசல்' என்று அர்த்தம். இந்த நகரத்திற்குள் நுழைய பல்வேறு வாசல்கள் உள்ளன.

இந்துக்களின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்துக்கும் துவாரகாவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வியாசர் எழுதிய மாகபாரத்தில் துவாரகா நகரம் 'தாராவதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

கிருஷ்ணன் மதுராவை ஆண்டு கொண்டிருந்தபோது அரசன் கம்சனை வீழ்த்தினார். தன் மகனை கொன்றதுக்காக கம்சனின் தந்தையான ஜெராசந்தன் தொடர்ந்து  18  முறை மதுராவின் மீது போர் தொடுத்தார். போர்களில் இருந்து யாதவ குலத்தைக் காப்பதற்காக ஒரு தனி நகரை அமைக்க திட்டமிட்டார். இந்த நகரை அமைக்க  தெய்வக் கலைஞர் விஸ்வகர்மாவை கிருஷ்ணர் வரவழைத்து, கடலுக்கு நடுவே ஒரு தீவில் இரண்டே நாட்களில் நன்கு வலுவாக இந்த நகரைக் கட்டி முடித்தார். கப்பல் அல்லது படகு மூலமாகத்தான் கிருஷ்ணர் உருவாக்கிய இந்த துவாரகா உள்ளே நுழைய முடியுமாம். குருச்ஷேத்திரப் போர் முடிந்து சில வருடங்களுக்குப் பிறகு இந்த துவாரகா நகரம் கடல்கோளால் முழுங்கப்பட்டது. கௌரவர்கள் 100 பேர்களின் தாயான காந்தாரி கிருஷ்ணருக்கு இட்ட சாபத்தினால் தான் துவாரகா  நகரம் கடலுக்கு அடியில் மூழ்கி, அழிந்ததாக மகாபாரதத்தில் சொல்லப்படுகிறது.  

இந்தியாவின் இதிகாசங்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் தற்போது கடலுக்கு அடியில் இந்த நகரம் புதைந்து இருப்பதாக இன்றுவரை நம்பப்படுகிறது.

அந்த நம்பிக்கையை வலுசேர்க்கும் பொருட்டு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே  அதாவது 1930 களில் இந்த நகரம் பற்றிய ஆராய்ச்சியை இந்திய தொல்லியலாளர்கள் ஆரம்பித்து விட்டனர். இந்த ஆராய்ச்சி குஜராத்தின்  ஜாம்நகர் மாவட்டத்தில் பேட் துவாரகாவில் முதன் முதலில் தொடங்கப்பட்டது. 

பின்னர் 1960 களில் இங்கு அதிக அகழ்வாராய்ச்சிகள் நடந்தன. இருந்தபோதிலும் துவாரகா பற்றி உறுதியான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்திய தொல்லியல் துறை 1979 இல் மற்றொரு அகழ்வாராய்ச்சியை நடத்தியது. இதில் கி.மு. 2 ஆம் காலகட்டத்திலான மண்பானைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

1883 முதல் 1990 வரை நடந்த அகழ்வாராய்ச்சிகளில் வலுவான அடித்தளம் மற்றும் 500க்கும் மேற்பட்ட பழங்கால பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையும் படியுங்கள்:
நாளை அதிகாலை ஆடல் வல்லானுக்கு ஆனி திருமஞ்சனம்!
DWARKA

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் எஸ்.ஆர் ராவ் கடலில் மூழ்கியுள்ள பெருநகரத்தை கண்டறிவதற்காக ஒர் ஆய்வு நடத்தினார். 2007ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின்படி, பல ஆதாரங்கள் அதாவது, பழங்கால சுவடுகள் கிடைத்திருந்தன. இந்த ஆராய்ச்சி பற்றிய விரிவான தகவல்களை 'தி லாஸ்ட் சிட்டி ஆப் துவாரகா' (The Lost City Of Dwaraka) என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக இந்திய தொல்லியல் ஆய்வாளர் ஷிகரிபுர ரங்கநாத ராவ் எழுதியுள்ளார்.  

பகவான் கிருஷ்ணர் உருவாக்கிய நகரமான துவாரகா இதுதான் என நிரூபிக்க பல விதமான ஆராய்ச்சிகள் இங்கு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 500க்கும் மேற்பட்ட பழங்கால பொருள்கள் இங்கு  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

கடலுக்குள் மூழ்கிய இந்த துவாரகா நகரை பொதுமக்கள் அனைவரும் சென்று பார்க்கும் பொருட்டு  ஆன்மிக சுற்றுலாத்தலமாக மாற்ற  கடந்த ஆண்டு குஜராத் அரசு திட்டமிட்டிருந்தது. இதற்காக பிரத்தியேகமாக ஒரு நீர்மூழ்கி கப்பலை உருவாக்க  மும்பையை சேர்ந்த மசகான் என்ற கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. விரைவில்  இந்த துவாரகா ஆன்மிக சுற்றுலா தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி கையில் மயில் இறகுடன் ஆழ்கடலில் மூழ்கிய துவாரகா நகரத்திற்குச் சென்று வழிபாடு செய்து விட்டு வந்தார். இந்த நிகழ்விற்குப்பின் துவாரகா நகரைப் பற்றிய தேடல்களும் ஆர்வமும் இந்திய மக்களிடையே அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com