

கோயிலுக்கு செல்வது மட்டுமல்ல சுற்றுச்சூழல் பராமரிப்பதும் ஒரு வகையில் இறைபக்தியை வெளிப்படுத்தும் செயல்தான். ஒருவர் மறைந்த பின்னர் அவரது பூத உடல் எரியூட்டிய பின்னர் கிடைக்கும் சாம்பல் நீரில் கரைக்கப்படுறது, சில சமயம் பூமியில் தூவி அந்த இடத்தில் ஒரு செடி நடப்படுகிறது. இந்த நடைமுறையை ஒருவர் புதைக்கப்பட்ட இடத்திலும் தொடர்கின்றன. இது மட்டுமில்லாமல் ஒரு விலங்கு இறந்தால் கூட அது புதைக்கப்படும் இடத்தில் செடி ஒன்றை நடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன?
பொதுவாக ஒருவர் மறைந்த இடத்தில் அவர்களின் நினைவாக இன்னொரு உயிரை வளர்ப்பது, அவர்களுக்கு செய்யக்கூடிய ஒரு மரியாதையாகவும், முன்னோர் வழிபாடாகவும் இருக்கிறது.
அவர்களின் புதைக்கப்பட்ட இடம் மற்றும் அஸ்தி தூவப்பட்ட இடம் என்று மட்டுமல்லாமல், முன்னோர்களின் பெயரைச் சொல்லிக்கூட பல செடிகளை நட்டு வளர்க்கலாம். இது ஒரு மரியாதை சார்ந்த செயலாக மட்டுமல்லாமல், முன்னோர்களை நினைவு கூர்ந்து, அவர்களை வழிபாடு செய்வதற்கு ஒப்பாகும்.
அந்த செடிகள் வளர்ந்து மரமாகி பல உயிர்களுக்கு நிழலை தரும், அந்த மரத்தின் காய்கனிகள் பல உயிர்களுக்கு உணவாகக் கூடும். பறவைகளும் வண்டுகளும் வந்து தங்கும் இடமாக அந்த மரங்கள் மாறும். மனிதர்களுக்கும் கூட அந்த மரங்கள் இளைப்பாறுதலை தருகின்றன. முன்னோர்களின் பெயரில் பல உயிர்களை வாழ வைக்கும் இந்த செயல் மூலமாக முன்னோர்களின் ஆசிகள் வந்து சேரும். இது அமாவாசை மற்றும் திதி போன்ற நாட்களில் அவர்களுக்குச் சடங்குகள் செய்வதைப் போலவே, ஒரு உன்னத செயலாகும்.
இதைப் பற்றி பத்ம புராணத்தில் மகரிஷி வேதவியாசர் மிகவும் சிறப்பாக குறிப்பிட்டுள்ளார். நாம் நட்டு வளர்க்கும் ஒரு செடியின் மீது மழை பொழியும் போதோ அல்லது நாம் நீரூற்றும் போதோ, அந்த இலைகளின் நுனியில் இருந்து சொட்டும் ஒவ்வொரு நீர் துளியும், நாம் நம் முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணமாக கருதப்படுகிறது. அந்த மரத்தின் கிளைகளில் எத்தனை ஆயிரம் இலைகள் இருக்கின்றனவோ அத்தனை ஆயிரம் தர்ப்பணங்கள் செய்த புண்ணியம் நம் முன்னோர்களை சென்றடையும்.
நம் வாழ்க்கை மகிழ்ச்சிக்கரமாகவும் நிம்மதியாகவும் இருக்க கடவுளின் ஆசியை போன்று முன்னோர்களின் ஆசியும் கட்டாயம் தேவை. இதனால்தான், தங்களது முன்னோர்களை வழிபடும் குலதெய்வ வழிபாடு முறை இந்தியர்களிடம் இருக்கிறது. நம் முன்னோர்கள் அனைவரும் புண்ணியம் செய்தவர்களாக கருத முடியாது. அவர் புண்ணியம் செய்தாலும் செய்யாவிட்டாலும் அவர் ஆன்மா முக்தியடையச் செய்வது, அவரது சந்ததிகளின் கடமையாகும். இதை ராமாயணத்தில் வரும் பகீரதன் கதையைக் கொண்டு விளக்கலாம்.
பகீரதன் முன்னோர்கள் கபில முனிவரின் சாபத்திற்கு ஆளாகி சாம்பல் ஆனதால், அவர்கள் நற்கதி அடையவில்லை. தனது முன்னோர்கள் வீடுபேறு அடையவேண்டும் என்பதற்காக பகிரதன் பல ஆண்டுகள் தவம் இருந்து கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்தார். கங்கை நதி பட்டதும் அவர்களின் முன்னோர்கள் சாபம் நீங்கி நற்கதி அடைந்தனர். பகிரதனின் நீண்டகால பெருந்தவம் அவரது முன்னோர்களின் மீதான பக்தி ஆகியவை, அவர் அழியாப் புகழ்பெற காரணமானது. அவரது சந்ததியினரும் பார் போற்றும் வகையில் வாழ்ந்தனர்.
முன்னோர்களின் பெயரில் மரம் நடுதல், போன்ற நல்ல செயல்கள் மூலம் உங்களது புண்ணியம் அதிகரிப்பதோடு, முன்னோர்களின் ஆசிர்வாதத்தினால் உங்களின் பாவங்கள் குறையக்கூடும். உங்களது தடைபடும் செயல்கள் அனைத்தும் நிறைவேறக் கூடும் , உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் மேம்படும், அது மட்டுமல்லாது உங்களுக்கு பாதுகாப்பு கவசம் போல முன்னோர்களின் ஆசி ஆபத்திலிருந்தும் காப்பாற்றும்.