
ஒவ்வொரு மாதமும் வருகின்ற சதுர்த்தி திதியில் இரட்டை பிள்ளையார் சன்னிதி உள்ள கோயிலுக்கு, தம்பதி சமேதராகச் சென்று கீழ்க்கண்ட வழிபாடுகளைச் செய்து வேண்டி விரதம் இருந்தால் நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.
கடன் தொல்லை தீர: ஒவ்வொரு மாதமும் வருகிற ரோஹிணி நட்சத்திரத்தன்று குடும்பத்துடன் இரட்டை பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, அமைதியாக சந்தனம் அரைத்துத் தந்து கணபதிக்கு சந்தனக் காப்பு செய்து வழிபட, கடன் தொல்லை நீங்கும். அச்சமயம், ‘ஓம் சற்குரு சரணம், பிருகு மகரிஷியே போற்றி, குத்ஸி மகரிஷியே போற்றி, வசிஷ்ட மகரிஷியே போற்றி, கௌதம மகரிஷியே போற்றி, காஷ்யப மகரிஷியே போற்றி என்று கூறி, இரண்டை கணபதிக்கு சந்தனத்தை அரைத்துக் கொடுத்து வழிபட வேண்டும்.
குடும்பம் ஒற்றுமை அடைய: திருவோண நட்சத்திர நாளன்று, இரட்டை பிள்ளையாருக்கு மாம்பழச் சாறு கொண்டு அபிஷேகம் செய்து, மாங்கனிகளை படைத்து, ஏழைகளுக்கு அப்பழங்களை தானமாக கொடுத்து விட வேண்டும். இதனால் கணவன், மனைவி, பிள்ளைகளிடையே உண்டான கருத்து வேறுபாடு மாறி, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
ரகசியப் பிணி தீர்ந்திட: ஆடைகளை மாற்றி அணிவதால் உண்டாகும் படை போன்ற நோய்கள் சிலருக்கு வருவதுண்டு. இவர்கள் திருவாதிரை நட்சத்திரத்தன்று இரட்டை விநாயகருக்கு வில்வ மாலை அணிவித்து, அர்ச்சனை செய்தால், அந்த ரகசிய நோய்கள் விரைவில் விலகி விடும்.
பணக் கஷ்டம் விலகிட: முழு தாமரை மலர்களால் மாலை கட்டி அதை மோதகத்தோடு கணபதிக்கு நிவேதனம் செய்வதால் குடும்பத்தில் பணக் கஷ்டம் மறையத் தொடங்கும். சங்கடஹர சதுர்த்தி விரதத்தை இரட்டை பிள்ளையார் கோயிலில் தொடங்குவதாலும் குடும்பப் பணக் கஷ்டங்கள் விலகும்.
பொதுவாகவே, இரட்டை பிள்ளையார் சன்னிதியில் அருகம்புல் மாலை போட்டு நெய் திரியிட்டு விளக்கேற்றி எளிமையாக வழிபட்டு வந்தாலே அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தந்து வினைகளைத் தீர்ப்பார் விநாயகர்.