
பழனியில் நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார் போகர் சித்தர். பழனியில் போகர் சித்தர் சமாதி இருக்கும் இடத்தில் ஒரு குகையிருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் வழியாக சென்றால் பழனி முருகனின் கருவறைக்கு நேராக செல்லலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒருநாள் போகர் தனது சீடர்கள் அனைவரையும் அழைத்து, தான் ‘நிர்விகல்ப சமாதி’ அடையப் போவதாக தெரிவிக்கிறார். (நிர்விகல்ப சமாதி என்றால், உடலை விட்டு பிரிந்து பஞ்சபூதத்துடன் கலப்பதாகும்) பழனி முருகன் கருவறைக்கு செல்லும் இந்த குகைக்குள் சென்று தான் நிர்விகல்ப சமாதி அடையப் போவதாக கூறினார் போகர் சித்தர்.
நிர்விகல்ப சமாதி அடைந்த பின்பு அந்த குகையின் வாசலை மூடி தான் பூஜித்து வந்த மரகத லிங்கம் மற்றும் புவனேஸ்வரி அம்மனையும் வைத்து பூஜை செய்து வாருங்கள் என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் இந்த கோவிலுடைய பொறுப்பை புலிப்பாணி சித்தரிடம் விடுவதாகவும், அவருடைய வம்சாவளிகள் தொடர்ந்து பூஜை செய்து வருவார்கள் என்றும் கூறிவிட்டு குகைக்குள் சென்று மறைந்தார். அதன் பிறகு போகர் சித்தரை யாரும் பார்க்கவில்லை. அதற்கு பின்னர் போகர் சித்தர் சொன்னதுப் போலவே அவருடைய சீடர்கள் அந்த குகையை மூடி அதன் முகப்பில் மரகத லிங்கத்தையும், புவனேஸ்வரி அம்மனையும் வைத்து பூஜித்து வருகின்றனர்.
கோரக்கர் சித்தர் தன்னுடைய புத்தகமான 'சந்திர ரேகை'யில் போகர் சித்தர் எப்போது, எந்த சூழ்நிலையில் மறுபிறவி எடுப்பார் என்று சொல்லியிருக்கிறார்.
'உலகில் பல இடங்களில் போர், பஞ்சம் போன்றவை ஏற்பட்டு மக்கள் இறப்பார்கள். உலகில் பல துக்கமான சம்பவங்கள் நடக்கும், கோவில்களில் கடவுளுக்கு பூஜைக் குறையும். இதனால் கடவுளின் அருளும் குறையும். இதுப்போன்ற சூழ்நிலையில் போகர் சித்தர் பூமிக்கு திரும்பி வருவார். போகர் மனிதவடிவில் பூமிக்கு வரும் வேளையில் கோரக்கர் சித்தரின் சமாதி பிரகாசமாக ஒளிரும். ஜோதிர்லிங்கம் ஒன்று தானாகவே நிறுவப்படும். இதன் மூலம் போகர் சித்தர் மறுபிறவி எடுத்து பூமிக்கு வந்துவிட்டார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்' என்று அப்புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறது.
இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். போகர் சித்தர் உண்மையிலேயே மறுப்பிறவி எடுப்பாரா? சொல்லுங்கள் பார்க்கலாம்.