சாதாரணமாக, விழா போன்றவற்றுக்குச் செல்பவர்கள் கூட அங்கு சாப்பிடுவதை பொதுவாக, விரும்ப மாட்டார்கள். காரணம், ‘அங்கு சமைக்கப்படும் பாத்திரங்கள் சுத்தமானதாக இருக்குமா? அந்தப் பாத்திரங்களில் சமைத்து பரிமாறுவது நம் உடலுக்கு சரியாக வருமா?’ என்றெல்லாம் பல்வேறு வினாக்களை தனக்குத்தானே கேட்டுக்கொண்டு, ‘எனக்கு சாப்பிட்டால் கெட்ட கனவு வரும். எங்கள் குல தெய்வத்திற்கு ஒத்துக்கொள்ளாது. தீட்டு அதனால் நாங்கள் உண்ண மாட்டோம்’ என்று தவிர்ப்பவர்கள் எல்லாம் உண்டு. ஆனால், கோயிலில் பிரசாதமாகக் கொடுப்பதை தவிர்ப்பவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். அப்படி உண்ணுவதால் ஏற்படும் பயன்கள், நம்பிக்கைகள் என்னவென்று இந்தப் பதிவில் காண்போம்!
‘கோயிலில் சமைக்கும் சோற்றை கண்டிப்பாக உண்ண வேண்டும்’ என்று கூறினால், இக்காலத்து இளைஞர்கள் வேண்டுமேயானால், ‘கோயிலில் ஏன் சாப்பிட வேண்டும்? உணவு விடுதிகளிலோ, வீட்டிலோ சாப்பிடலாமே’ என்பார்கள். அவர்கள் கூறுவதில் நியாயம் இருக்கின்றது. பசி ஆறுவதற்கு கோயிலில்தான் சாப்பிட வேண்டும் என்பது இல்லையே, வீட்டிலோ விடுதியிலோ பசியாறிக் கொள்ளலாமே.
கோயில் சோறு என்பது பசிக்காக உண்ணுவதல்ல; இறைவனுக்கு படைத்த அன்னத்தை உண்ண வேண்டும் என்பதற்காகவே. மேலும், ‘அதை நிவேதனம் செய்யும்போது அதில் உள்ள தீமைகளை எல்லாம் இறைவன் ஏற்றுக்கொண்டு, நல்லனவற்றை மட்டுமே நமக்குக் கொடுத்து அருள்வான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும்தான்.’ அதனால் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைக்காகவே உண்ணுகின்றோம்.
கோயிலில் இறைவனுக்குப் படைத்த உணவில் பல சிறப்புகள் உள்ளன. இந்தச் சோற்றுக்காக பயன்படுத்தப்படும் அரிசியின் சிறப்பு என்னவென்றால், அப்பொழுதெல்லாம் தவிடு நீக்காமல் குத்திய அரிசியை பொதுவாக உபயோகிப்பதால், அதன் குணங்கள் எதுவும் நஷ்டப்படாமல் சத்துள்ளதாய் இருக்கும். மேலும், கோயிலில் சமையல் செய்யும் பாத்திரமும் சிறப்பானது. தாமிரம், வெண்கலத்தாலான உருளியில் அது தயாரிக்கப்படும். அலுமினியம் போல் தீங்குகள் எதுவும் சமையலில் கலப்பது இல்லை. அதனால் உடல் நிலைக்கு எந்த பாதிப்பும் வர வாய்ப்பில்லை. இதை கிளறுவதற்கான பரந்த அகப்பைகள் இரும்பு அல்லது தேங்காய் ஓட்டினால் செய்யப்பட்டதாகவே இருக்கும். இரும்பிலான அகப்பை மிக நன்று. இரும்பு அம்சங்கள் உணவில் கலப்பது சோற்றை மேன்மைப்படுத்தும்.
இரும்புச்சத்து உடம்புக்கு எவ்வளவு அவசியம். அவை செய்யும் நன்மைகள் பற்றிய குறிப்புகளை நவீன மருத்துவம் தெளிவாக விளக்கியுள்ளதை நாம் நன்கறிவோம்.
இதில் பக்தருக்குள்ள திருப்தி, இறைவன் அருகாமை கிடைக்கப் பெறுவதே. இந்த நேர்ச்சைச் சோற்றில் சேர்க்கும் துளசி இலையின் மருத்துவ குணங்களை நாம் நன்கறிந்துள்ளோம் அல்லவா? இதுபோன்ற பல்வேறு நன்மைகளை நேர்ச்சைச் சோறு கொடுப்பதால் கோயிலில் உணவருந்த யாரும் தயங்குவதில்லை.