இராமாயண மகாகாவியத்தில் அனுமனின் பக்தித் திறத்தை உலகுக்கு உணர்த்த ஸ்ரீராமர் நிகழ்த்திய ஒரு பக்தி நிகழ்வை இந்தப் பதிவில் காண்போம்.
ஸ்ரீராம அவதாரத்தின் நோக்கம் நிறைவேறிய தறுவாயில், மகாவிஷ்ணு தனது இருப்பிடத்திற்கு திரும்புவதற்கான நேரம் இது என்று அனைத்து தேவ, தேவதைகளும் உணர்ந்தனர். இராமாவதாரம் முடிவடைய வேண்டுமானால் ஸ்ரீராமர் மறைய வேண்டும். ஆனால், ராமனை உரிமை கொண்டாட எமனை அயோத்தியில் நுழைய அனுமன் அனுமதிக்க மாட்டார்.
அனுமனின் கவனத்தைத் திசை திருப்ப ஸ்ரீராமர் தனது மோதிரத்தை தரையின் விரிசல் வழியே கீழே எறிந்து அதை தனக்காகத் திரும்ப எடுத்துத் தருமாறு அனுமனிடம் கேட்டார். அனுமன் அதை திரும்பக் கொண்டுவரக் கீழே இறங்கி பாம்புகளின் தேசத்தை அடைந்து அங்கு நாகராஜாவிடம் ஸ்ரீராமரின் மோதிரத்தைக் கேட்டார்.
நாகராஜன் மோதிரங்களால் நிரப்பப்பட்ட ஒரு அறையை அனுமனுக்குக் காட்டினர். ‘இதில் உனது ராமருடைய மோதிரம் எது? இவை அனைத்தும் ஸ்ரீராமருடைய மோதிரங்கள்தான்’ என்று நாகராஜன் கூற, அனுமன் ஆச்சரியமடைந்து, ‘இவ்வளவு மோதிரங்கள் எப்படி இங்கு இருக்கும்?’ என்று கேட்டார்.
அதற்கு நாகராஜன், ‘ஒவ்வொரு மோதிரமும் ஒரு கால சக்கரத்தைக் குறிக்கிறது. ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு திரேதா யுகம் உள்ளது. அதில் ஒரு ராமனும் ஒரு அனுமனும் உள்ளனர். ஒவ்வொரு முறையும் ஸ்ரீராமர் தனது மோதிரத்தைக் கைவிடுவார். அனுமன் அவரது மோதிரத்தைத் தேடி பாதாள லோகத்திற்கு வருவார். அனுமன் பூமிக்குத் திரும்புவதற்குள் ஸ்ரீராமர் மனித உடலை விட்டுப் போய்விடுவார். மனிதனாகப் பிறந்த அனைவரும் ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும், அது கடவுளாக இருந்தாலும் சரி என்ற மாபெரும் தத்துவத்தை உணர்த்துகிறார். நாகராஜனின் இந்த அறிவுரையை ஏற்றுக்கொண்ட அனுமன், காலசக்ராவை புரிந்து கொள்கிறார்.
ஸ்ரீராமன் மீது கொண்ட பக்தி மிகுதியால் எமனையும் எதிர்த்து ராமபிரானின் மரணத்தை வெல்லும் ஆற்றல் மிக்கவர் அனுமன் என்று அனுமனின் பக்தியின் திறத்தை அனைவருக்கும் உணர்த்துகிறார் ஸ்ரீராமர்.