
மன அமைதிக்காகவும் வேண்டுதலுக்காவும் கோயிலுக்குச் செல்லும்போது, அங்கு இறைவனை வழிபடுவதோடு, கோயில் பிராகாரத்தை வலம் வருவதும் பக்தர்களின் நடைமுறை. அப்படி வலம் வருவதால், ஆலய இறை வழிபாடும் முழுமையாக நிறைவடைவதாக பக்தர்களின் நம்பிக்கை. அப்படி கோயிலுக்குச் சென்று ஆலயத்தை எத்தனை முறை வலம் வர வேண்டும்? எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
நமக்கு என்ன காரியம் நடக்க வேண்டுமோ அல்லது நம்முடைய வேண்டுதல் எதுவோ அதற்கேற்ப எண்ணிக்கையில் ஆலயத்தை வலம் வருவதால், இறை வழிபாட்டின் பலன்களை முழுமையாகப் பெற முடியும். பெரும்பாலானவர்கள் நேரமில்லை எனச் சொல்லி சாமியை மட்டும் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து விடுவார்கள். ஆனால், கோயிலை வலம் வருவது என்பது மிகவும் முக்கியமானதாகும். அப்படி வலம் வரும்போது, மனதார இறைவனை நினைத்தபடி வலம் வந்தால் மனதில் உள்ள தீய எண்ணங்கள் நீங்கி, இறைவனிடம் இருந்து வெளிப்படும் நேர்மறை ஆற்றல்களால் நம்முடைய மனது சுத்தமாகும். நேர்மறையான ஆற்றல்கள் பெறுவதால் நமக்கு நன்மைகள் அதிகம் நடக்கும்.
கோயில்களை வலம் வரும்போது ஒற்றைப்படை எண்ணிக்கையில்தான் வலம் வர வேண்டும். ஒவ்வொரு தெய்வத்தையும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வலம் வந்து வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போல் பலன்களும் மாறுபடும். உதாரணமாக,
* விநாயகர் கோயிலை ஒரு முறை வலம் வந்து வழிபட வேண்டும். இதனால் காரியத் தடைகள் விலகும்.
* முருகன் கோயிலை 6 முறை வலம் வர வேண்டும். இதனால் எதிரிகள் தொல்லை நீங்கி, ஞானம் பெருகும்.
* அம்மன் கோயிலை 5 முறை வலம் வர வேண்டும். இதனால் வெற்றி, மன அமைதி கிடைக்கும். வெள்ளிக்கிழமை துவங்கி, செவ்வாய்கிழமை வரை தினமும் அம்பிகையின் கோயிலுக்கு சென்று 5 முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.
* சிவன் கோயிலை 5 முறை வலம் வந்தால் நினைத்தது நடக்கும். செல்வ வளம் பெருகும், பிறவா நிலை ஏற்படும்.
* பெருமாள் கோயிலை 3 முறை வலம் வர வேண்டும். இதனால் ஆட்சி அதிகாரம், செல்வாக்கு, அஷ்டலட்சுமி கடாட்சம் ஆகியவை கிடைக்கும்.
* நவகிரகங்களை ஒன்பது முறை வலம் வருவதால் ஜாதகங்களில் இருக்கும் குறைகள் நீங்கும்.
இப்படி எந்த தெய்வத்தின் கோயிலுக்கு சென்று எத்தனை முறை வலம் வர வேண்டும் என தெரியாதவர்கள், அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடியாதவர்கள் பொதுவாக எந்த கோயிலுக்கு சென்றாலும் எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வலம் வரும் எண்ணிக்கையும், பலன்களும்:
* 1 முறை வலம் வருவது இறைவனிடம் நெருங்கச் செய்யும்.
* 3 முறை வலம் வருவது மனச்சுமையை குறைக்கும்.
* 5 முறை வலம் வருவது விருப்பங்களை நிறைவேற்றும்.
* 7 முறை வலம் வருவது காரிய வெற்றி தரும்.
* 9 முறை வலம் வருவது எதிரிகள் தொல்லையை நீக்கும்.
* 11 முறை வலம் வருவது ஆயுள் விருத்தியைத் தரும்.
* 13 முறை வலம் வருவது பிரார்த்தனைகளை நிறைவேற்றும்.
* 15 முறை வலம் வருவதால் செல்வம் பெருகும்.
* 17 முறை வலம் வருவதால் தானிய வளம் பெருகும்.
* 19 முறை வலம் வருவதால் நோய்கள் தீரும்.
* 21 முறை வலம் வருவதால் கல்வி வளர்ச்சி ஏற்படும்.
* 27 முறை வலம் வருவால் குழந்தை பாக்கியம் ஏற்படும்.
* 108 முறை வலம் வருவதால் சகல நலன்களும் உண்டாகும்.
இதை மனதில் கொண்டு இனி ஆலய வழிபாட்டினைச் செய்து இறையுருள் பெறுவோம்.