

சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆதி திருவரங்க பெருமாளை தரிசிக்க போயிருந்தேன். அப்போது திருக்கோவிலூர் அருகே அந்திலி என்ற கிராமத்தில் உள்ள ஒரு அழகிய லட்சுமி நரசிம்ம சாமி கோயிலுக்கு போக வாய்ப்பு கிடைத்தது.
தென்பெண்ணை ஆற்றின் அருகாமையில் ஒரு அமைதியான இடத்தில் அமைந்துள்ளது இந்தகோவில். இந்த கோவிலை பற்றிய ஸ்தல வரலாறு இதுதான். மகா விஷ்ணு பிரகலாதனைக் காப்பாற்ற நரசிங்க அவதாரம் எடுக்க போனபோது தனது வாகனமான கருடரை கூட்டி போகவில்லை. இதனால் கோபபட்டு கருடர் இங்குள்ள ஒரு சிறிய குன்றில் வந்து அமர்ந்து விஷ்ணுவை நரசிங்கமாக தரிசிக்க தவம் செய்தார்.
அவர் செய்த அந்த கடும் தவத்தால் மூவுலகும் மிகவும் உஷ்ணம் அடைந்தது தேவர்கள் விஷ்ணுவிடம் வந்து முறையிட்டனர். விஷ்ணு லட்சுமி தேவியுடன் அந்திலிக்கு வந்து கருடருக்கு அவர் விரும்பியபடி சாந்த மூர்த்தியாய் லட்சுமி நரசிம்மராய் தரிசனம் அளித்தார்.
திவ்ய தேசங்களில் ஒன்றாக இது இல்லா விட்டாலும் தமிழ்நாட்டில் இருக்கும் எட்டு மிக முக்கியமான நரசிம்ம க்ஷேத்ரங்களில் ஒன்றாக போற்றப் படுகிறது. இந்த கோயிலின் மிக முக்கிய விசேஷம் இந்த கோயிலை தாங்கி நிற்கும் பாறை அதாவது கருடர் நரசிம்மரை தரிசிக்க தவம் செய்த அதே பாறை கருடன் போல காட்சி அளிப்பதுதான்.
இந்த இடம் திருக்கோவிலூரிலிருந்து சற்று உள் தள்ளியுள்ளதால் மிகவும் அமைதியான சுற்றுச்சூழலில் ரம்மியமாக இருக்கிறது. இந்த கோயிலை ஒரு மத்வ அர்ச்சகர்தான் பார்த்துக் கொள்கிறார். கர்ப்பகிரகமும் சிறிது நரசிம்மர் விக்கிரகமும் சிறிது. ஆனால் சொல்ல முடியாத அழகு.
நான் அங்கு போவதற்கு முன்பு அர்ச்சகரை கேட்டுக் கொண்டபடி பெருமாளுக்கு சர்க்கரை பொங்கல் செய்து நைவேத்தியம் செய்து தயாராக வைத்திருந்தார். அதை தொன்னையில வைத்து கோயிலின் பின்புறத்தில் நிற்கும் அரச மரத்தடியில் அமர்ந்து சாப்பிட திவ்யமாகவும் இருந்தது. இந்த கோவிலுக்கு அருகிலேயே ஒரு அனுமார் கோவிலும் உள்ளது. தீராத நோய்களை இந்த லட்சுமி நரசிம்மர் தீர்த்து வைப்பார் என்று இந்த கோவிலின் பட்டர் கூறினார்.கோவில் எளிமையாகவும் அதே சமயத்தில் தூய்மையாகவும் உள்ளது.
இங்கு வருபவர் யாருக்கும் உடனே இந்த இடத்தை விட்டு போக மனம் வராது.நரசிம்ம பக்தர்கள் விழுப்புரத்திலோ அல்லது திருக்கோவிலூரிலோ தங்கி ஆதி திருவரங்கரையும் திருவிக்ரமறையும் அந்திலி அப்பனான லக்ஷ்மி நரசிம்மரையும் தரிசித்து சேவித்து பலனடையலாம்.