
தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூர் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் கோவிலில் சனி பகவான் தனக்கென தனிக்கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் சனிபகவான் சுயம்புவாக லிங்க வடிவில் காட்சித் தருகிறார். மேலும் சனி பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய ஸ்தலம் என்பதால், இக்கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இக்கோவிலின் சிறப்புகளைப் பற்றி விரிவாக காண்போம்.
மற்ற கோவில்களில் சனிபகவானை வணங்கும் போது சனியின் தாக்கம் மட்டுமே குறையும். ஆனால், இந்த ஸ்தலத்தில் சனி பகவானை வணங்கினால் அவரால் பல நன்மைகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
திருநள்ளாறு கோவிலுக்கு பிறகு பக்தர்கள் அதிகமாக செல்லக்கூடிய கோவிலாக குச்சனூர் கோவில் இருக்கிறது. குச்சனூர் சனீஸ்வரன் கோவிலில் சனீஸ்வரரே மூலவராக இருக்கிறார். இங்குள்ள சனிபகவான் லிங்க வடிவில் காட்சித் தருகிறார்.
சனிதோஷத்தால் பல இன்னல்களை சந்தித்த தனது வளர்ப்பு தந்தையான தினகரன் என்ற மன்னனுக்காக சந்திரவதனன் என்னும் மன்னன் சுரபி நதிக்கரையில் இரும்பால் சனிபகவானின் உருவத்தை வடித்து சனி பகவானின் அருளைப் பெறக் கடும் தவத்தை மேற்க்கொண்டார். அவரின் பக்தியை கண்டு மனம் இறங்கிய சனி பகவான் அவரின் துன்பங்களை போக்கினார். பிறகு சுயம்புவாக சனீஸ்வர பகவான் தோன்றிய இடத்தில் குடில் அமைத்து சனி தோஷத்தால் துன்பப்படுபவர்களுக்காக ஒரு சிறு கோவிலை அமைத்தார்கள்.
இக்கோவிலில் விடத்தை மரம் தான் தலவிருட்சம், கருங்குவளை மலர் தலமலர், வன்னி இலை தலயிலையாகும். காகம் சனீஸ்வரரின் வாகனமாகவும் எள் சனீஸ்வரரின் தானியமாகவும் இருக்கிறது. எனவே, இக்கோவிலில் எள் விளக்கு ஏற்றி காகத்திற்கு அன்னமிடுவது சிறப்பாக கருதப்படுகிறது.
குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிப்பாடு நடைப்பெறும். இக்கோவிலில் ‘ஆடிப்பெருந்திருவிழா’ சிறப்பாக கொண்டாடப்படும். இங்குள்ள சனி பகவான் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களின் ஒருங்கிணைந்த வடிவமாக கருதப்படுவதால், இவருக்கு ஆறு கண்களும், நான்கு கைககளும், இரண்டு பாதங்களும் உள்ளன. மேலும் இவர் கையில் சக்தி ஆயுதம், வில், அபய ஹஸ்தம் ஆகியவற்றை வைத்து பக்தர்களுக்கு அருள் புரிகிறார். எனவே, சனி தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இக்கோவிலுக்கு ஒருமுறை சென்று வருவது நன்மை பயக்கும்.