

நம் கனவுகள் பெரும்பாலும் நிகழ்கால வாழ்க்கையுடன் தொடர்பு உள்ளதாக இருக்கிறது. நம் ஆழ்மனதின் எண்ணங்கள்தான் கனவுகளாக வருகின்றன என்ற அறிவியல் கூற்றை எப்போதும் நம்மால் ஆதரிக்க முடியாது. நாம் நினைக்காத, சிந்திக்காத பல செயல்களும் கனவுகளில் வருகின்றன. சில கனவுகள் ஆன்மீகத்தின் படி நம் எதிர்கால வாழ்க்கையை முன்கூட்டிய கூறும் தீர்க்க தரிசனமாக இருக்கும் என்று ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர். அதன்படி விலங்குகளில் பெரியதான யானையை கனவில் கண்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை அறிந்துகொள்வோம்.
யானை என்பது ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த விநாயக கடவுளின் மறு உருவமாக பார்க்கப்படுகிறது. யானைகள் மஹாலக்ஷ்மி, இந்திரன், அரசன் ஆகியோருடன் தொடர்பை கொண்டது. பெரும்பாலும் யானைகள் நல்ல சகுனத்தையும் , சில நேரம் எச்சரிக்கையையும் கனவில் தருகின்றன.
கனவில் வெள்ளை யானையை கண்டால்?
இந்திரனின் வாகனமான ஐராவத யானைதான் வெள்ளை நிறத்தில் இருக்கும். இது மிகவும் அபூர்வமானது. வெள்ளை நிற யானையை கனவில் கண்டால் உங்களுக்கு விரைவில் தலைமைப் பொறுப்பு வரும் என்று அர்த்தம். வெள்ளை யானை ஆன்மீகம் மற்றும் அமைதியின் அடையாளம். உங்களுக்கு இருக்கும் சிக்கல்கள் விரைவில் தீரும் என்று முன்கூட்டியே உணர்த்துகிறது.
கனவில் கருப்பு யானை வந்தால்?
கருப்பு யானை பொதுவாக அரசர்களின் முதன்மை வாகனம். முற்காலத்தில் வாரிசு இல்லாமல் அரசர்கள் இறந்துவிட்டால், புதிய அரசனைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு பட்டத்து யானைகளுக்கு வழங்கப்படும். அதுபோல கனவில் கருப்பு யானையை கண்டால், உங்களுக்கு அரசாங்க உத்தியோகம், அரசு ஒப்பந்தம், அரசின் மூலமாக ஆதாயம் கிடைக்கபோகிறது என்று பொருள்.
கனவில் யானை மீது சவாரி செய்தால்?
நீங்கள் யானை மீது சவாரி செய்வதாக கனவு கண்டால் அது ஒரு நல்ல சகுனத்தின் அறிகுறியாக இருக்கும். இது உங்களின் எதிரிகளை நீங்கள் வெல்வீர்கள் என்பதின் அடையாளம். உங்களின் அறிவு மற்றும் செயல்திறன் தலைமைத்துவ பண்பு ஆகியவை அங்கீகரிக்கப்பட போவதன் அடையாளமாகவும் இருக்கிறது.
கனவில் யானையை ஜோடியாக கண்டால்?
யானையை துணையுடன் கனவில் கண்டால், விரைவில் திருமணம் கை கூடும் என்பது முதன்மையான கணிப்பாக இருக்கிறது. யானைகள் அன்பு, விசுவாசம், ஒற்றுமை ஆகியவற்றின் அடையாளமாக இருக்கின்றன. இது கணவன் மனைவி இடையேயான அன்பையும், புரிதலையும் உணர்த்துகிறது.
கனவில் யானைகளை கூட்டமாக கண்டால்?
யானைக் கூட்டம் எப்போதும் அன்புடனும் ஒன்றுக்கொன்று பாசத்துடன் இணைந்து கூட்டமாக வாழக்கூடியவை. குடும்பத்தில் நிலவியிருந்த சச்சரவு மற்றும் பகைகள் முடிந்து, ஒற்றுமை நிலவப் போவதன் அடையாளம் இந்த கனவு.
கனவில் யானை ஆசி வழங்கினால்?
உங்களுக்கு இறைவனின் அருள் பரிபூரணமாக உள்ளது. நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும். தடைப்பட்ட காரியங்கள் முடியும் என்பது அடையாளம் இது.
கனவில் யானை உங்களை துரத்தினால்?
ஏதோ ஒரு பிரச்னை உங்களைதேடி வருகிறது. விரைவில் அதை சமாளிக்க தயாராக வேண்டும் என்று எச்சரிக்கை கொடுக்கும் கனவு இது.நிஜ வாழ்வில் உள்ள பிரச்னைகளை தவிர்க்காமல் அதிலிருந்து சமாளித்து மீளவேண்டும் என்பதை உணர்த்தும் கனவு இது.
கனவில் யானை உங்களை தாக்கினால்?
கனவில் யானைகள் தாக்குதல் நடத்துவதுபோல கண்டால், விரைவில் நீங்கள் உடல்நலப் பிரச்னைகளை சந்திக்க போவதன் அடையாளமாக இருக்கும். மேலும் செய்யும் செயல்களில் ஒரு சில தடைகள் வரலாம் என்பதை எச்சரிக்கும் கனவு இது. இதனால், முன்கூட்டியே கவனமாக இருக்கலாம்.
கனவில் மெலிந்த யானையை கண்டால்?
நீங்கள் சோம்பேறியாக இருக்கிறீர்கள், முதலில் அதிலிருந்து விடுபட்டு உழைப்பாளியாக மாறவேண்டும் என்பதன் அர்த்தம் இது. மெலிந்த யானை வரப்போகும் நிதி பற்றாக்குறை பற்றியும், வறுமை பற்றியும் எச்சரிக்கும் கனவாக இருக்கும்.
கனவில் யானை உங்கள் ஊருக்கு வந்தால்?
யானைகள் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளம். கனவில் அவை ஊருக்குள் வந்தால், ஊரில் நல்ல மழை பெய்யும், விளைச்சல் அமோகமாக இருக்கும், ஊர் செழிப்புடன் இருக்கப்போவதை உணர்த்துகிற கனவு இது.
பொதுவாக நல்ல சகுன கனவுகளை கண்டால் அதை வெளியில் கூறாமல் இருந்தால் பலிக்கும் என்றும், கெட்ட சகுன கனவுகளை வெளியில் சொல்வதன் மூலம் அதன் தாக்கத்தை குறைக்கவும் முடியும் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர். கனவுகளின் பலன்கள் சுவாரசியமானது. அனைவருக்கும் அதன்படி நடக்கும் என்று உறுதி கூற முடியாது.