தஞ்சை மாவட்டம், கும்பகோணம் - திருவாரூர் பாதையில் சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாச்சியார்கோவில். நர நாராயணர் இருவமாக எழுந்தருளியுள்ளதால் இந்த ஊருக்கு திருநறையூர் என்று பெயர் உண்டு. காலப்போக்கில் ஊர் வளர வளர திருநறையூர் மற்றும் நாச்சியார்கோவில் என இரண்டு ஊர்களாக அறியப்படுகின்றன.
மேதாவி மகரிஷி என்பவர் இத்தலத்தில் இறைவனை வணங்கி வந்தார். மகாவிஷ்ணுவை இந்த மகரிஷி வணங்காமல் இருந்தாலும் அவர் பத்தினி மகாலட்சுமி தாயாரே தனக்கு மகளாகப் பிறக்க அருள் செய்ய வேண்டும் என்று சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார். சிவபெருமான், திருமாலிடம் மேதாவி மகரிஷியின் விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டார். மகாவிஷ்ணு கூறியதின் பெயரில் மகாலட்சுமியும் தீர்த்தக் குளத்தில் ஒரு மலர்ந்த தாமரை மலரில் மேதாவி மகரிஷி முன்பு தோன்றினாள்.
மகரிஷியும் அவளை வளர்த்து திருமண பருவத்தில் மகாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுக்க ஆசைப்பட்டார். அவ்வாறே சிவன், பார்வதி இருவரும் முன் நின்று மகாவிஷ்ணுவுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். கோரக்க சித்தர் என்பவர் தனக்கு ஏற்பட்ட சரும வியாதி நீங்க இத்தலத்தில் இறைவனை வழிபட்டார். இறைவன் அவருக்கு அருள்புரிய சித்தர் தனது நோய் நீங்கப் பெற்றார். சித்தருக்கு அருளியதால் இறைவன் பெயர் சித்தநாதீஸ்வரர் என்றும் ஆலயம் சித்தீஸ்வரம் என்றும் வழங்குகிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்புரிகிறார். மகாவிஷ்ணுவை திருமணம் செய்வதற்காகவே மகாலட்சுமி மனித உருவில் முனிவரின் மகளாக அவதரித்த தலம்தான் திருநறையூர்.
இந்தத் தலத்தில் மகாலட்சுமிக்கு தனி சன்னிதி இருக்கிறது மகாலட்சுமி அவதாரத் தலம் என்பதால் இவள் குழந்தை வடிவில் காட்சி தருகிறாள். இவளை மழலை மகாலட்சுமி என்று அழைப்பார்கள். இவளுக்கு பாவாடை சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள். இங்கு அவதரித்த மகாலட்சுமி தாயார் திருமாலை திருமணம் செய்து அருகில் உள்ள நாச்சியார்கோவிலில் அருளுகிறாள். மேலும், மகாலட்சுமிக்கு பிறந்த ஊராக திருநறையூர் தலமும் புகுந்த வீடாக அருகில் உள்ள நாச்சியார்கோவில் வைணவ தலமும் கருதப்படுகிறது.
இந்தத் தலத்தில் மற்றொரு சிறப்பு அம்சம் மகாலட்சுமிக்கு வழங்கப்படும் தீபாவளி சீர் வைபவம். தீபாவளிக்கு முதல் நாள் சித்தநாதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து பட்டுப்புடைவை, சீயக்காய், எண்ணெய், வேஷ்டி துண்டு, பூமாலை, பழங்கள் மற்றும் தாமரை மலர்கள் ஆகியவற்றை மேள தாளத்துடன் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் சென்று தீபாவளி சீராக வழங்குவது வழக்கம்.
இந்தக் கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர், பலிபீடம் நந்தி ஆகியவற்றைக் காணலாம்.
ரிஷபத்தின் தலை மீது வலது கையை ஊன்றியபடி காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பமும் பிச்சாடனர் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டியவை. கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் உருவச் சிலையும் கலை அழகுடன் காணப்படுகிறது. பிராகாரத்தில் ஒரே சன்னிதிக்குள் மூன்று சண்டிகேஸ்வரர்கள் இருப்பதும் இங்கு சிறப்பாகும்.
கோஷ்டத்தில் உள்ள துர்கை பிரசன்ன துர்கை என்று அழைக்கப்படுகிறார். இவள் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி நளினமாக வலது காலை சற்று முன்புறமாக வைத்திருக்கிறாள். துர்கையின் இத்தகைய கோலத்தைக் காண்பது அரிது.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here