தமிழகத்தின் 'தட்சிண துவாரகை' - மன்னார்குடி சிறப்புகள்!


Mannargudi Specialities
Mannargudi Specialities
Published on

“திருவாரூர் தேரழகு, மன்னார்குடி மதிலழகு”இந்த பழமொழியே மன்னார்குடியின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும். காவிரி டெல்டா சமவெளியில், பசுமை போர்த்திய வயல்களுக்கு இடையே ஆன்மீகத் தடாகமாகத் திகழ்வதுதான் மன்னார்குடி. சோழர் காலத்துக் கலைநயமும், நாயக்கர் காலத்து கட்டிடக்கலையும் ஒருங்கே சங்கமிக்கும் இந்தத் திருத்தலம், விஷ்ணுவின் உறைவிடமாகப் போற்றப்படுகிறது. இந்த ‘மன்னை’ மாநகரின் சிறப்புகளை காண்போம்.

“மன்னார்”என்பது விஷ்ணுவைக் குறிக்கும், “குடி” என்பது வசிப்பிடம் என்று பொருள். அதாவது “விஷ்ணு உறையும் ஊர்” என்பது இதன் பொருள். இங்குள்ள புகழ்பெற்ற ராஜகோபாலசுவாமி கோவிலின் பெயரால் இவ்வூர் “ராஜமன்னார்குடி” என்றும் அழைக்கப்படுகிறது.

ஆன்மீகச் சிறப்பு: இவ்வூரின் அடையாளமே அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோவில்தான். இந்த கோவிலின் சுற்றுச்சுவர்கள் அவ்வளவு பிரம்மாண்டமாகவும் அழகாகவும் இருக்கும். வட இந்தியாவில் உள்ள துவாரகைக்கு இணையாக, தென்னிந்தியாவில் இது “தட்சிண துவாரகை” என்று போற்றப்படுகிறது. இங்குள்ள ஹரித்ரா நதி என்னும் தெப்பக்குளம் இந்தியாவின் மிகப்பெரிய கோவில் குளங்களில் ஒன்றாகும்.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் பங்குனித் திருவிழா:

இந்த திருவிழா தமிழகத்தின் மிகப்பெரிய மற்றும் மிக நீண்ட நாட்களுக்கு 18 நாட்கள் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்றாகும். இதனை உள்ளூர் மக்கள் “மன்னை பெரிய திருவிழா” என்று அன்போடு அழைப்பார்கள். ஒவ்வொரு நாளும் ராஜகோபாலசுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.

வெண்ணெய்த் தாழித் திருவிழா (16-ம் நாள்): இந்தத் திருவிழாவின் மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான பகுதி இதுதான். பகவான் கிருஷ்ணர் ஒரு குழந்தையாகத் தவழ்ந்து வரும் கோலத்தில், கையில் வெண்ணெய் உருண்டையுடன் வீதி உலா வருவார். அப்போது பக்தர்கள் அவர் மீது வெண்ணெய் மற்றும் தயிரை வீசி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். “குழந்தை கிருஷ்ணனை” நேரில் காண்பது போன்ற உணர்வு பக்தர்களுக்கு ஏற்படும்.

பங்குனி உத்திரம் - தேரோட்டம் (17-ம் நாள்): பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் தேரோட்டம் மிகவும் பிரபலம். மன்னார்குடி தேரின் அழகு மற்றும் அதன் பிரம்மாண்டம் பார்க்க வேண்டிய ஒன்று. “மன்னார்குடி மதிலழகு” என்பது போல, அந்த மாட வீதிகளில் தேர் அசைந்து வரும் காட்சி மிகவும் கம்பீரமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
நட்புக்கு இலக்கணம் வகுத்த இதிகாச நாயகர்கள்: 4 உன்னத உறவுகளின் கதை!

Mannargudi Specialities

ஹரித்ரா நதி – தெப்பத் திருவிழா (18-ம் நாள்): திருவிழாவின் இறுதி நாளில், இந்தியாவின் மிகப்பெரிய குளமான ஹரித்ரா நதியில் தெப்பத் திருவிழா நடைபெறும். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி உலா வரும்போது அந்த இடமே ஒளியால் நிறைந்திருக்கும்.

இங்குள்ள தாயாரின் பெயர் “செங்கமலத் தாயார்”. இவருக்கும் தனிப்பட்ட முறையில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.

ராஜகோபாலசுவாமிக்கு செய்யப்படும் அலங்காரங்கள் (பவள மல்லி மாலைகள், வைர ஆபரணங்கள்) உலகப்புகழ் பெற்றவை. குறிப்பாக கிருஷ்ணராக அவர் கொள்ளும் பல அவதாரங்கள் வியக்க வைக்கும்.

மன்னார்குடி என்பது தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் இறைநம்பிக்கையின் கருவூலம். வானுயர்ந்த கோபுரங்களும், பிரம்மாண்டமான மதில் சுவர்களும், அமைதி தவழும் ஹரித்ரா நதியும் பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும். நவீன கால மாற்றங்களுக்கு மத்தியிலும், தனது தொன்மையும் பாரம்பரியமும் மாறாமல் காத்து வரும் மன்னார்குடி, ஆன்மீகப் பயணிகளுக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் ஒரு சொர்க்கமாகவே திகழ்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com