

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது இந்த கோவில்.
இது ஒரு பழமையான சிவன் கோவிலாகும். முற்காலத்தில் இந்த இடங்கள் முழுவதும் மருத மரங்கள் நிறைந்து காணப்பட்டது. இங்குள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாக தோன்றினார். நாறும்பு நாதர் தாயார் கோமதி அம்பாளுடன் இங்கு அருள் பாலிக்கிறார். இங்குள்ள அம்பாள் ருத்ராட்சத்தால் ஆன மேனியுடன் காட்சி தருகிறார். இது ஒரு சிறப்பான அம்சமாகும்.
மூலவர் தலையில் வெட்டு காயத்துடன் சற்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறார். சுயமபு மூர்த்தியாக இருப்பதால் சந்தனாதி தைலம் பூசி பூஜை நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த கோவில் காசிக்கு நிகரான ஸ்தலமாக கருதப்படுகிறது. இந்த ஸ்தலம் ஸ்ரீ சைலத்தின் தலைப்பகுதியாகவும் திருவிடை மருதூர் இடைப்பகுதியாகவும் திருப்புடைமருதூர் பாத பகுதியாகவும் கருதப்படுகிறது.
தைப்பூசம் பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். இக்கோவில் பாண்டிய மன்னர்களால் நிறுவப்பட்டு பண்டைய கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தல விருட்சம் மருத மரம். தீர்த்தம் தாமிரபரணி தீர்த்தம்.
தல வரலாறு
ஒரு சமயம் சிவனிடம் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காசிக்கு ஒப்பான இடத்தை தென்னகத்தில் காட்டுமாறு வேண்டிக் கொண்டன.ர் அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் பிரம்ம தண்டத்தை தரையில் இடும்படி கூறினார்.
அவர்கள் பிரம்மதண்டத்தை தரையில் வீசும்போது அந்த பிரம்மதண்டம் தாமிரபரணி ஆற்றைக் கடந்து திருப்படை மருதூர் என்ற ஊரில் நின்றது. இந்த இடமே காசிக்கு நிகரான இடம் என சிவன் கூறினார். அதை தேவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
ஒரு சமயம் கருவூர் சித்தர் சிவனை தரிசிக்க இங்கு வந்தார். அந்த சமயம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அவரால் ஆற்றைக் கடந்துசெல்ல முடியவில்லை. சிவனிடம் மனம் உருகி வேண்டினார். சிவனும் கருவூர்சித்தர் தன்னை வழிபட தாமிரபரணி ஆற்றில் வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.
அன்று முதல் பக்தர்கள் அனைவருக்கும் செவி சாய்த்து அவர்கள் பிரச்னையை தீர்த்து வைத்து வேண்டிய அருள் புரிகிறார்.
சிவனின் தலைப்பகுதியில் மானின் காலடி தடமும் மன்னன் கோடரியால் வெட்டிய தழும்பும் காணப்படுகிறது.
இங்கு இருக்கும் கோமதி அம்மன் கைலாய மலையில் உள்ள நீல கல்லால் ஆன தேவியென கருதப்படுகிறது. காசியில் உள்ள கங்கை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்வது போல் இங்குள்ள தாமிரபரணி நதியும் தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது. எனவே இந்த இடம் தென்னகத்தின் காசி என அழைக்கப்படுகிறது.
உள்புறம் உள்ள சுற்றுப்புறகாரத்தில் 63 நாயன்மார்கள் சிலை உள்ளது . இதனுடன் கருவூர் சித்தர் சிலையும் காணப்படுகிறது. பிரம்ம தண்டம் கருவறையின் இடதுபுறம் நிறுவப்பட்டுள்ளது. சிவனுக்கு புனுகு சாத்தி வழிபாடு நடைபெறுகிறது.
ராஜகோபுரம் மிகுந்த வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது . இந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் இங்கு வந்து தவம் செய்து தங்களது தோஷங்கள் நிவர்த்தி ஆனதாக வரலாறு கூறுகிறது. மகா சிவராத்திரி அன்று காலை 6:00 மணி முதல் ஏழு மணி வரை சூரிய ஒளி மூலவர் மீது படும்படி அமைக்கப் பட்டுள்ளது சிறப்பானதாகும். இங்கு பக்தர்கள் படிப்பாயாசம் செய்து வழிபாடு செய்கிறார்கள்.
இந்தக் கோவிலிலும் கோவிலைச் சுற்றியும் எண்ணற்ற மரங்கள் உள்ளன. ஜாதக ரீதியாக பிரச்னை உள்ளவர்கள் தங்களது கோரிக்கைகளை இங்குள்ள ஒரு பெட்டியில் எழுதி போடுகிறார்கள். அந்தக் கோரிக்கைகள் நிறைவேறுவதாக ஐதீகம்.
திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும் இந்த கோவிலுக்கு எண்ணற்ற பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
மும்மூர்த்திகள் வழிபட்ட ஸ்தலமாகும். திருமால் பிரம்மன் இந்திரன் ஆகியோர் இங்கு வந்து பூஜை செய்தனர். 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இங்குள்ள ராஜகோபுரம் ஐந்து நிலைகளை கொண்டது. ராஜகோபுரத்தில் அழகிய சிற்பங்கள் நிறைந்து காணப்படுகிறது.
தினசரி காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை நடை திறந்து இருக்கும்.