
பிரபஞ்சத்தைப் படைத்த சிவபெருமான், உலக உயிர்களைப் படைக்க பிரம்மா என்னும் நான்முகக் கடவுளையும், படைத்த உயிர்களைக் காக்க பகாவான் மகாவிஷ்ணுவையும் படைத்தார். ஆனால், படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழிலை மேற்கொண்ட பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமானால், உலகில் படைக்கப்பட்ட உயிரினங்கள் யாவும் முக்தி என்னும் பிறவா நிலையை அடைய முடியவில்லை. ஒரு உயிரினம் பிறவா நிலையை அடைய வேண்டுமாயின். தனது கர்ம வினைகளை முழுமையாக அனுபவிக்க வேண்டும்.
இவ்வாறு ஒரு உயிரினம் தனது கர்ம வினைகளை சரிவர (பாவங்கள் மற்றும் நன்மைகள்) அனுபவித்து முக்தி பெற சிவபெருமானிடமிருந்து உருவாக்கப்பட்ட நாயகர்களே 'நவநாயகர்கள்.' இவர்கள் அனைவரும் சிவபெருமானுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள். நவநாயகர்கள் அனைவரும் ஒரே காலகட்டத்தில் உருவானவர்கள் அல்ல. பல ரிஷிகள் மற்றும் முனிவர்களுக்கு மகன்களாகப் பிறந்து, அவர்களின் வழிகாட்டலின்படியும், இவர்களின் தவ வலிமையாலும் பல்வேறு இன்னல்கள் மற்றும் இடைஞ்சல்களை அனுபவித்தும் நவகிரக மண்டலத்தில் இணைந்தார்கள்.
சிவபெருமானால் உபதேசிக்கப்பட்ட பாவம், புண்ணியம் என்னும் கணக்குகள் சட்டங்களாக மாற்றப்பட்டு, அந்த சட்டங்களை செயல்படுத்தும் செயல் அதிகாரிகளாக நவகிரகங்கள் செயல்படுகின்றன. நவகிரகங்களுக்கு, செயல்படுத்தும் அதிகாரம் மட்டுமே உண்டு. விதிவிலக்கு அளிக்கவோ அல்லது மன்னிக்கவோ அதிகாரம் இல்லை. மன்னிக்கும் அதிகாரமும், விதிவிலக்கு அளிக்கும் அதிகாரமும் அதிதேவதைக்கு மட்டுமே உண்டு.
நாம் கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகத்துக்கு உரிய கடவுளை வணங்கினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆதலால். நவகிரங்களை வணங்குவதைக் காட்டிலும் அதிதேவதைகளை வணங்குவது சிறப்பு. அதற்காக நவகிரகங்களை வணங்காமல் இருப்பதும் சிறப்பல்ல. காரணம், தவறு செய்த குற்றவாளியை சட்டத்தைக் காக்கும் காவல்காரர்கள் அடித்தும் அழைத்துச் செல்லலாம் அல்லது மரியாதையுடனும் அழைத்துச் செல்லலாம். ஆகவே. நவநாயகர்கள் நம்மை நன்முறையில் நடத்துவதும் அல்லது கடுமையாக நடத்துவதும் அவர்களை வணங்குவதைப் பொறுத்து அமையும்.
நவகிரகங்கள்தான் நம் உறவினர்கள்! மனிதனுடைய ஒவ்வொரு செயலும் நவகிரகங்களின் ஆட்சியின் ஆளுகைக்கு உட்பட்டுத்தான் நடைபெறுகின்றன. சிவபெருமானிடமிருந்து உருவான நவகிரகங்கள் வாழ்க்கையில் நமது உறவினர்களாக நம்மை சூழ்ந்துள்ளனர். நவகிரகங்களில் முதலாவதாக உள்ள சூரியன் தந்தை ஆவார். நவகிரகங்களில் இரண்டாவதாக உள்ள சந்திரன் தாய் ஆவார். சகோதர, சகோதரிகள் மற்றும் கணவனாக, நவகிரகங்களில் மூன்றாவதாக உள்ள செவ்வாய் உள்ளார்.
நவகிரகங்களில் நான்காவதாக உள்ள புதன் மாமன், மைத்துனர்கள் ஆவர். நவகிரகங்களில் ஐந்தாவதாக உள்ள குரு புத்திரர்கள் ஆவார். நவகிரகங்களில் ஆறாவதாக உள்ள சுக்கிரன் மனைவி மற்றும் நண்பர்களாக நம்மை சூழ்ந்துள்ளனர். நவகிரகங்களில் ஏழாவதாக உள்ள சனி, பணியாட்களாக இருக்கின்றனர். நவகிரகங்களில் எட்டாவதாக இருக்கின்ற ராகு, தந்தை வழி தாத்தாவாகவும் பாட்டியாகவும் நம்மை சூழ்ந்துள்ளனர். கேது, நவகிரகங்களில் ஒன்பதாவதாக உள்ளார். இவர் தாய் வழி தாத்தாவாகவும் பாட்டியாகவும் நம்மை சூழ்ந்துள்ளனர்.