பஞ்சமுக ஆஞ்சநேயர்: தீய சக்திகளை அழிக்க அனுமன் எடுத்த விஸ்வரூபம்!

Panjamuga Anjaneyar
Panjamuga Anjaneyar
Published on

ராமாயணக் காவியத்தின் முக்கியமான கதாபாத்திரம் அனுமன். இவர் ஸ்ரீராமனுக்கு சேவை செய்து வாழ்வதே தனது பிறவிப் பயன் என்று வாழ்ந்தவர். அது மட்டுமின்றி, ராம - லட்சுமணருக்கு எந்த ஒரு துன்பமும் நேரக்கூடாது என்று எண்ணி இரவு பகல் எப்பொழுதும் அவர்களுக்குக் காவலாக இருந்தார். அப்படிப்பட்ட அனுமன் ஒரு சமயம் ஐந்து முகங்களைக் கொண்ட பஞ்சமுக அவதாரத்தை எடுத்தார். அது ஏன் என்று தெரியுமா?

ஸ்ரீராம - ராவண யுத்தத்தின்போது ராவணன், ஸ்ரீராமனின் வலிமையைத் தவறாக எண்ணி தனக்குப் பதில் தனது உடன் பிறந்தவர்களை முதலில் போருக்கு அனுப்பினான். அப்படி உடன்பிறப்புகளில் அனுப்பப்பட்டவர்களில் ஒருவர்தான் ராவணனின் தம்பி அகிராவணன். இந்த அகிராவணன் பாதாள லோகத்தின் அதிபதியாகவும், புத்திசாலித்தனத்திலும் மாயக் கலைகளிலும் வல்லவனாகத் திகழ்ந்தான்.

இவன் காளி தேவியிடம் வரம் பெற்றவன். இவன் காளியிடம் பெற்ற வரத்தால் அனுமனை ஏமாற்றி அவனுடைய பலத்த பாதுகாவலிலிருந்த ராம - லட்சுமணரை தந்திரமாகக் கடத்திச் சென்று பாதாள லோகத்தில் சிறை வைத்தான். ஸ்ரீராமன் பக்தரான அனுமன் அவர்களை மீட்கப் பாதாள லோகத்துக்குச் சென்றார். பாதாள லோகத்தில் அகிராவணனுக்கும் அனுமனுக்கும் மிகப்பெரிய சண்டை நடந்தது.

இதையும் படியுங்கள்:
உங்க ஊர் கோவில்ல கொடியேற்றியாச்சா? அதன் முழு அர்த்தம் தெரியுமா?
Panjamuga Anjaneyar

அனுமன் எவ்வளவு முயற்சித்தும் அகிராவணனை தோற்கடிக்க முடியவில்லை. அகிராவணனை தோற்கடிப்பதற்கான வழிகள் ஏதும் தெரியாமல் அனுமன் தவித்தார். அப்போதுதான் அனுமனுக்குத் தெரிந்தது அகிராவணன் காளி தேவியிடம் வரன் பெற்றவன் என்பது. அகிராவணன் காளி தேவியிடம் பெற்ற வரம் என்னவென்றால், ‘எனது சக்தி ஐந்து திசைகளில் ஐந்து விளக்குகள் போல் எரிய வேண்டும். அந்த ஐந்து விளக்குகளையும் ஒருசேர யார் அணைக்கிறார்களோ அவர்களாலேயே எனது மரணம் நிகழவேண்டும்’ என்பதே.

அனுமன் ஐந்து திசைகளில் உள்ள அந்த ஐந்து விளக்குகளைக் கண்டுபிடித்தார். அந்த ஐந்து விளக்குகளையும் ஒருசேர அணைத்தால்தான், அகிராவணன் சக்தி குறையும் என்பதை அறிந்த அனுமான். புத்திசாலித்தனமாகப் பஞ்சமுக வடிவம் எடுத்தார்.

அதாவது தனது முகத்துடன் நரசிம்மர், கருடன், ஹயக்ரீவர், வராகர் ஆகியோர்களின் முகங்களைச் சேர்த்து ஐந்து திசைகளிலும் இருந்த விளக்குகளை ஒருசேர ஊதி அணைத்தார். இதனால் அகிராவணன் பலம் குறைந்தது. அதன் பிறகு அனுமன் அவனுடன் போரிட்டு தோற்கடித்து, ராம - இலட்சுமணரை மீட்டார்.

-க. பிரவீண்குமார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com