பெருமாளின் அருளோடு ஆரோக்கியமும் தரும் நூபுர கங்கை தீர்த்தம்!

நூபுர கங்கை தீர்த்தம்
நூபுர கங்கை தீர்த்தம்
Published on

துரை அழகர்கோவிலில் உள்ளது பழமுதிர்சோலை முருகன் கோயில். சிறு குன்றின் மீது அமைந்த இக்கோயிலில் இருந்து சற்று தொலைவு மேலே ஏறிச் சென்றால் வேடுவர்களின் குலதெய்வமான ராக்காயி கோயிலில் அமைந்துள்ளது நூபுர கங்கை தீர்த்தம். ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தத் தீர்த்தம் உற்பத்தியாகும் இடம், பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பின்னரும் கூட இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

யானையின் துதிக்கை போல பருமனாக அமைந்த கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்தில் வந்து விழுகின்றது இந்த நூபுர கங்கை தீர்த்தம். இந்தத் தீர்த்தத்தில் இரும்புச்சத்து, தாமிரச்சத்து அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. பல்வேறு நோய்களைத் தீர்க்கும் சக்தி கொண்டதாக இந்த தீர்த்தம் விளங்குகிறது.

இந்தத் தீர்த்தம் தெற்கு நோக்கி பாயும்போது, ‘சிலம்பாறு’ என்று அழைக்கப்படுகிறது. சோலை மலையின் கீழ் வீற்றிருக்கும் அழகரின் அடிகளை வருடிக்கொண்டு கடைசியாக ஏரிகளில் கலந்து வயல்களில் பாய்கிறது. ஆற்று நீரின் ருசியும் ஆற்று நீரால் விளையும் தானியங்களின் ருசியும் மிகுந்திருப்பதால் இதற்கு, ‘தேனாறு’ என்றும் பெயர். இந்தத் தீர்த்த நீரில்தான் புகழ்பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது. இங்கிருந்து சற்றுத் தொலைவில் இருக்கிறது அனுமன் தீர்த்தம். இங்கு ஒரு அனுமன் ஆலயம் உள்ளது. இதற்கு சற்று மேலே கருட தீர்த்தம் மற்றும் கருடர் கோயில் இருக்கின்றன. அதன் பக்கத்தில் பாண்டவர் தீர்த்தமும் கோயிலும் காணப்படுகிறது. அழகர் கோயிலுக்குச் சென்று வடக்கே போனால் உத்தர நாராயண வாவி எனும் தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தத்தைக் கொண்டுதான் அழகர்கோவிலின் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகமும் சமையலும் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

அழகரின் திருமஞ்சனத்துக்கு மட்டும் தினமும் இரண்டு மைல் தொலைவில் உள்ள நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது. சைத்ரோத்ஸவ காலத்தில் அழகர் மதுரைக்கும் வண்டியூருக்கும் போய் தங்கி இருப்பார். அப்போதும் கூட நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வந்துதான் அவருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. வேறு தீர்த்தத்தில் அழகரை நீராட்டினால் அவரது உருவம் கருத்து விடுகிறது என்பதாலேயே இப்படிச் செய்யப்படுவதாகக் கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
மூளையை தின்னும் பயங்கர அமீபாவிடமிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?
நூபுர கங்கை தீர்த்தம்

இந்த நூபுர கங்கை தீர்த்தத்திற்கும் ஒரு புராணக் கதை உள்ளது. பெருமாளின் வாமன அவதாரத்தின்போது, பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க வேண்டும் என்று தனது சிறிய காலடி மூலமாக மூவுலகங்களையும் அளந்து வான் வரை உயர்ந்து நின்றார். பல ஆண்டுகளாக வானுலகத்தில் இருக்கும் பிரம்ம தேவன் பெருமாளைக் காண வேண்டும் என்று தவமிருந்தார். அப்பொழுது திடீரென்று பெருமாளின் பாதம் தென்பட, தனது கையில் வைத்திருந்த சொர்ண கலசத்தில் இருந்த கங்கையின் நீரை பெருமாளின் பாதத்திற்கு ஊற்றி அபிஷேகம் செய்தார்.

அப்பொழுது பெருமாளின் காலில் அணிந்திருந்த சிலம்பு, அதாவது நூபுரத்தில் கங்கை தீர்த்தம் பட்டு பிரம்ம லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு வந்து சேர்ந்த இடமே இந்த நூபுர கங்கை என்று சொல்லப்படுகிறது. அதேபோல், பெருமாளின் சிலம்பில் கங்கை விழுந்து வந்ததால் இதற்கு சிலம்பாறு என்ற மற்றொரு பெயரும் பெற்று புண்ணியத் தீர்த்தமாக விளங்குகிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த நூபுர கங்கை தீர்த்தத்தில், சமயம் வாய்க்கும்பொழுது நீங்களும் சென்று நீராடி பெருமாளின் அருளோடு உடல் ஆரோக்கியமும் பெற்று வரலாமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com