

தமிழகத்தில் அதிசயம் நிறைந்த தலங்கள் உள்ளன. அவை பக்தர்களை ஆச்சர்யப்பட வைக்கும் அப்படிப்பட்ட அரிய தலம்தான் காஞ்சிபுரத்தில் பிறவாதீச்வரர் கோவில். இந்த கோவிலின் தனிவிசேஷம் இது வருடத்தில் ஒருநாள் அதாவது சிவராத்திரியன்று மட்டுமே திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் இக் கோவில் கருவறை மூடியே இருக்கும். பழமையான வரலாறுபடி காஞ்சியில் 1008 சிவன் கோவில்கள் இருந்ததாக கூறுகிறது
பல்லவ மன்னர்களின் தலைநகரமாக காஞ்சி விளங்கியது. மணிபல்லவம் எனும் தீவிலிருந்து வந்ததாக கூறப்படும் இந்த மன்னர்கள் சிம்மக் கொடியை தங்கள் சின்னமாகக் கொண்டிருந்தனர். அவர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் இன்று கூட பல்லவர் கட்டிடக்கலைகான சாட்சியாக உள்ளன. அவற்றில் மிக மர்மமானதும், ரகசியம் நிறைந்ததாகவும் இந்த பிறவாதீஸ்வரர் கோவில் திகழ்கிறது. சிவராத்திரி ஒருநாள் மட்டுமே திறக்கப் படுவதால் பக்தர்கள் அன்று அங்கு குவிகிறார்கள் கோவில் வாசல் திறக்கும்போது அந்த நொடியே பக்தர்கள் மனமுருகி இறைவனிடம் இதுவே கடைசி பிறவியாக இருக்கட்டும் என்று வேண்டுகிறார்கள்.
இந்த ஆலயம் கிபி 700முதல் 728 வரை ஆட்சி செய்த ராஜ் சிம்மன் பல்லவனால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இக்கோவில் கட்டுமான அமைப்பு தனித்தன்மையானது. மேற்கு நோக்கி அமைந்த கருவறை. இரண்டு அடுக்கு விமானம் எண்கோண வடிவில் அமைந்த கருவறை. செவ்வக வடிவில் அமைந்த முக மண்டபம் . இவை அனைத்தும் பல்லவகால கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டு.
இத்தலவரலாற்றில் முக்கியமாக இடம் பெறுபவர் வாமதேவ முனிவர். ஐதீகம்படி அவர் தாயின் கருவில் இருந்தபோதே ஒரு பிரார்த்தனை செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. கருவில் இருக்கும்போதே சிவபெருமானிடம் இந்த பிறவியே கடைசியாக வேண்டும் என வேண்டினார். ஈசன் அவரிடம் காஞ்சிக்கு வந்து அவரை வழிபடக்கூற வாமதேவரும் காஞ்சிக்கு வந்து ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட அவர் மறுபிறவி இல்லாநிலை அடைந்ததாக புராணம் கூறுகிறது.
இக்கோவில் சிற்பங்கள் மிக அழகு. சுவரில் சோமாஸ்கந்தர் வடிவில் சிவன், பார்வதி, மற்றும் முருகன் காட்சி தருகின்றனர் இங்கு தெற்கில் தட்சிணாமூர்த்தி, கிழக்கில் விஷ்ணு, வடக்கில் பிரம்மா வெளிப்புறச் சுவர்களில் துர்கை கஜலக்ஷ்மி போன்ற தெய்வங்கள் சிற்பக்கலையின் உயர்ந்த தரத்தை வெளிப்படுத்துகின்றன. இங்கு சிவராத்திரி ஒரே இரவில் பக்தர்களுக்கும் தரிசனம் தந்து பிறவியை நீக்குகிறார்.
இதையும் தெரிங்சுக்கோங்க
தினமும் ஒருமணி நேரம் மட்டுமே திறக்கப்படும் கோவில்
மதுரை பாதாள குபேர பைரவர் கோவில் தினமும் ஒருமணி நேரம் மட்டுமே திறக்கப்படும். மதுரை மேல் சித்திரை வீதியில் உள்ளது இக்கோவில். இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் பைரவர் சாதாரண சன்னதியில் இருப்பதுபோல் இல்லை. சன்னதியின் அமைப்பு பாதாளம் போன்ற ஆழத்தில் உள்ளது. பாதாளத்தில் இருப்பதால் வெளியிலிருந்து பார்க்கும்போது தெரியாது இந்த சன்னதியின் முன் நிற்கும்போது தெய்வீக சக்தி மறைந்திருப்பது போன்று உணர்வு ஏற்படும்.
இக்கோவில் சிறப்பு இது தினமும் ராகு காலத்தில் மட்டுமே திறந்திருக்கும் அப்போதுதான் பூஜை நடக்கிறது. இவரை வழிபட செல்வம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும், நீண்ட ஆயுள், பிள்ளை பாக்கியம் கிடைக்கும். அதோடு பில்லி சூன்யம் போன்ற தீய சக்திகளை நீக்கும்.
திங்கள் இரவில் மட்டுமே திறக்கப்படும் சிவன் கோவில்
தஞ்சை முத்துப்பேட்டை அருகே பரகலக்கோட்டையில் அமைந்திருக்கும் பொதுவுடையார் சிவன் கோவில் திங்கள் கிழமை இரவு மட்டுமே திறக்கப்படுகிறது. இங்கு வெள்ளாள மரமே சிவலிங்கமாக வணங்கப்படுகிறது. வெள்ளாள மரத்தின் முன்பக்கம் ஒரு பகுதியில் சந்தனக்காப்பு வஸ்திரம் சாற்றி அலங்கரித்து வணங்கப் படுகிறது. இங்கு சிவனுக்கு நடக்கும் சிவராத்திரி, அன்னாபிஷேகம் போன்ற கொண்டாட்டங்கள் கிடையாது.
பெண்கள் இங்கு தென்னங்கீற்றாலான துடைப்பம் தயார் செய்து காணிக்கை தருகிறார்கள். இப்படிச்செய்தால் கூந்தல் நன்கு வளர்வதாக நம்பப்படுகிறது.