

இக்கோயில் கேரளத்தில் பத்தனம் திட்டா மாவட்டத்தில் திருவல்லா என்ற ஊருக்கு அருகில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பத்தனம் திட்டா, கோட்டயம் ஆகிய நகரங்களில் இருந்தும் இங்கு வந்து செல்ல பஸ் வசதி உண்டு. ஸ்ரீ வல்லப சேத்திரம் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. ஆழ்வார்களால் பாடப்பட்ட தலம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இரண்டு கொடி மரங்களுடன் அழகுற கட்டப்பட்டுள்ளது இக்கோயில்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் இப்பகுதியில் உள்ள சங்கரமங்கலம் என்ற கிராமத்தில் சங்கரத்தம்மாள் என்று ஓர் அம்மையார் இருந்தார். அவர் ஒவ்வொரு மாதமும் ஏகாதசி விரதம் இருந்து இந்த கோயிலுக்கு வருவார். மறுநாள் துவாதசியன்று இக்கோயிலை சுற்றி உள்ள இடங்களில் இருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவார். அவர் கோவிலுக்கு செல்லும் வழியில் தோலாகாகரன் என்ற அரக்கன் இவருக்கு அடிக்கடி துன்பம் செய்து வந்தான். இதை பெருமாளிடம் சங்கரத்தம்மாள் முறையிட்டார்.
அடுத்த ஏகாதசியன்று சங்கரத்தம்மாள் கோவிலுக்கு வரும் வழியில் ஒரு பிரம்மச்சாரிய இளைஞர் அந்த அரக்கனுடன் சண்டையிடுவதைக் கண்டார். சற்று நேரத்தில் சண்டை நின்றது. அரக்கன் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டான். தன்னை காப்பாற்றுவதற்காக அரக்கனுடன் சண்டை இட்ட இளைஞனுக்கு நன்றி சொல்ல சங்கரத்தம்மாள் தேடியபோது அந்த இளைஞனை காணவில்லை.
நன்றி சொல்ல வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்று கலக்கத்துடனே கோவிலுக்குள் வந்த சங்கரத் தம்மாளூக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. கோயிலில் பெருமானே அந்த இளைஞனின் கோலத்தில் அருள்பாலித்துக்கொண்டிருந்தார். பெருமாள்தான் தன்னை காக்க இளைஞன் வடிவில் வந்தார் என்பதை அறிந்த சங்கரத்தம்மாள் ஆனந்த கண்ணீர் சிந்தினார்.
பொதுவாக பிரம்மச்சாரி இளைஞர்கள் அங்கவஸ்திரம் அணிவதில்லை. அதேபோல் இத்தலத்தில் உள்ள பெருமாளும் அங்க வஸ்திரம் இல்லாமல் வெற்று மார்புடனே காட்சியளிக்கிறார். அவரது மார்பில் லட்சுமி நிரந்தரமாக குடியிருப்பதால் 'திருவாழ் மார்பன்' என்ற பெயர் அவருக்கு வழங்கல் ஆயிற்று .
பொதுவாக பெருமாள் கோயில்களில் திருவடி தரிசனமே முக்கியமாகக் கருதப்படும். ஆனால் இத்தலத்தில் பெருமாளின் திரு மார்பு தரிசனமே பிரதானமாக விளங்குகிறது.
சங்கரம்மாள் ஒருமுறை பிரம்மச்சாரி இளைஞர்களுக்கு அன்னதானம் செய்து கொண்டிருந்தபோது, இறைவனும் ஒரு பிரம்மச்சாரி வடிவில் அங்கு வந்து மற்றவர்களைப் போல் வரிசையில் நின்று அன்னதானம் பெற்றிருக்கிறார். அப்போது அவர் தன் விரதம் முடிந்தபின் சாப்பிடுவதற்காக சங்கரத்தம்மாள் வைத்திருந்த உப்பு மாங்காயை தருமாறு கேட்டாராம்.
உடனே சங்கரம்மாள் அதை பாக்குமர இலையில் வைத்து அந்த இளைஞருக்கு கொடுத்ததால், அன்று முதல் இக்கோயிலில் பாக்கு மர இலையில் சாதமும், உப்பு மாங்காயும் நைவேத்தியமாக படைக்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக கோயிலில் தினமும் பக்தர்களுக்கு மாங்காய் ஊறுகாயோட அன்னதானம் வழங்கப்படுகிறது.
கேரளத்திற்கே உரிய கட்டடக்கலை அமைப்புடன் வட்ட வடிவிலான மூலஸ்தானத்தின் பின்புறம் செல்வத் திருக்கொழுந்து நாச்சியார் வீற்றிருக்கிறார். கோயிலின் வெளிப்பிராகாரத்தில் சாஸ்தா அழகுற தரிசனம் தருகிறார். மூலவரின் நேர் எதிரில் 50 அடி உயர கல் தூணில் கருடாழ்வாரைக் காணலாம்.
வழக்கமாக பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு எதிராக தனி சன்னதியில்தான் அவர் வீற்றிருப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில சுமார் 50 அடி உயரமுள்ள கல்தூனில் பறக்கும் நிலையில் தங்க கலசம் ஏந்திவிட்டிருக்கிறார். பூவுலக வாழ்வில் நிறைவு கண்டு வைகுந்த வாசனுடன் ஐக்கியமாக ஏங்கி காத்திருக்கும் பக்தர்களை இவர்தான் தன் மீது அவர்களை சுமந்து வைகுந்தத்திற்கு அழைத்துச் செல்கிறார் என்பது இத்தலத்தின் ஐதீகம்.
பல நூற்றாண்டுகளாக இந்த ஆலயத்தில் வழிபாடு செய்ய பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. மார்கழி மாத திருவாதிரை மற்றும் சித்திரை முதல் தேதி ஆகிய இரண்டு நாட்களில் மட்டுமே பெண்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். வெகு காலத்திற்கு பின்னரே ஆண்களைப்போல எல்லா நாட்களும் பெண்களும் வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஒரு கோயிலில் ஒரு கொடிமரம்தான் இருக்கும். ஆனால் இங்கு கோயிலுக்குள் ஒன்று கோயிலின் வெளியில் ஒன்று என்று இரண்டு இருக்கின்றன. திருவிழாவின்போது இரண்டு கொடி மரங்களிலும் கொடியேற்றப்படுகிறது. அந்த வழியே செல்லும் வெளியூர் வாசிகளுக்கு கோயிலில் திருவிழா நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்பதால்தான் கோவிலுக்கு வெளியே இருக்கும் கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது என்கிறார்கள் இவ்வூர் மக்கள்.
விசேஷ வழிபாடு: குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து கோயிலில் கதக்களி நிகழ்ச்சியை நேர்ச்சையாக நடத்தி இறையருளால் மழலை பாக்கியம் பெறுகின்றனர். மழலைக்கு ஏங்குவோர் இங்கு வந்து பிரார்த்தித்து பயன்பெறலாம்.