

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 103வது சிவத்தலமாக திகழ்வது சதுரங்கவல்லபநாதர் கோவில். இத்தலம் திருநாவுக்கரசர் பாடல் பெற்ற தலமாகும். திருநெல்வேலி நெல்லையப் பருக்கும் இந்த பூவனூர் சதுரங்க வல்லபநாதருக்கும் ஒரு தொடர்பு உண்டு. அதுமட்டுமல்ல. இந்த ஆலயத்திற்கு ஏன் சதுரங்கவல்லப நாதர் என்ற பெயர் வந்தது என்பது பற்றியும் காணலாம்.
தல வரலாறு
வசுதேவன் என்ற மன்னனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்தது. தன் ராணி மற்ற பரிவாரங்களுடன் பல்வேறு சிவாலயங்களில் பிரார்த்தனை செய்தார். திருநெல்வேலியில் நெல்லையப்பரை வேண்டிக் கொண்டிருந்தபோது இறைவன் மன்னன் மீது இரக்கப்பட்டு பார்வதியை அவருக்கு மகளாகவும் சாமுண்டியை அந்த குழந்தைக்கு தாதியாகவும் செல்லும்படி கூறினார்.
ஒருமுறை அரசன் அரசியுடன் தாமிரபரணி ஆற்றில் நீராடும் போது தாமரை மலரில் சங்கு மிதப்பதைக் கண்டார். சங்கை எடுத்தபோது அது குழந்தையாக மாறியது. ராஜாவும் ராணியும் அந்த குழந்தைக்கு ராஜேஸ்வரி என்று பெயர் இட்டு சாமுண்டியை அந்த இளவரசிக்கு தாதி ஆக்கினார்.
ராஜராஜேஸ்வரி அனைத்து வகையான கலைகளிலும் தேர்ச்சி பெற்றாள். குறிப்பாக சதுரங்கம் விளையாடுவதில் திறமை பெற்று விளங்கினார். தன் மகளுக்கு உரிய வயதில் வரனைத்தேடும்போது சதுரங்கத்தில் அவளை தோற்கடிப்பவவருக்கு திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தார். பலர் முயன்றனர். யாராலும் அவளை வெல்ல முடியவில்லை.
மன்னர் கவலை கொண்டார். ஒரு முனிவர் மன்னனை மீண்டும் சிவாலயங்களுக்குச் சென்று வணங்கும்படி கூறினார். மன்னர் பூவனூர் வந்தார். அங்கு ஒரு சித்தர் அரசனை அணுகி இளவரசிக்கு சதுரங்க விளையாட்டில் சவால்விட்டார். விளையாட்டில் சித்தர் வென்று இளவரசியின் கையைக் கேட்டான். தன்னை சிவபெருமான் என வெளிப்படுத்தினான். சிவபெருமான் பார்வதியை மணந்தார்.
சதுரங்கத்தில் வெற்றி பெற்றதால் இவருக்கு சதுரங்க வல்லப நாதர் என்ற பெயர் ஏற்பட்டது. பார்வதிக்கு தாதியாக இருந்த சாமுண்டீஸ்வரி இக்கோவிலில் அருள்பாலிக்கிறார். சாமுணாடீஸ்வரி அம்மனிடம் பெண்கள் சீட்டு கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். எந்த பிரார்த்தனையும் 90நாட்களில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
அனைத்து சித்தர்களும் அகத்தியருக்கு பூஜை செய்து வழிபட வேண்டிய தலம் இது. ஞாயிறு தோறும் விஷக்கடி நிவர்த்தி செய்ய அகஸ்தியர் பிரானின் ஆசியோடு சாமுண்டீஸ்வரி அம்மன் முன் மூலிகை வேர் ரட்சை கட்டப்படுகிறது. இக்கோவிலில் உள்ள கிருஷ்ண குஷாடஹரம் தீர்த்தம் குஷ்டத்தைப் போக்கும் தன்மையுடையது ஆடி மாதத்தில் அம்மனுக்கு சர்க்கரை பாவாடை போடப்பட்டு நிவேதனம் செய்யப் படுகிறது.
சதுரங்கத்தில் 64சதுரகட்டங்களானது இறைவனின் 64வடிவங்களையும், 64நாட்டிய நிலைகளையும் குறிப்பது என்பதனை அம்பிகை மூலம் ஈஸ்வரன் நேரிடையாக நிரூபித்த தலம். 64விதமான கனிகள், காய்கள், பூக்கள், தான்ய திரவியங்கள் மூலிகைகள் கொண்டு பஞ்ச சக்திகளால் மகரிஷிகள் நவராத்திரி உத்சவத்தைக் கொண்டாடிய தலம்.
புஷ்ப காசி தேவதைகள் புஷ்பங்களை பூவனூரிலிருந்து எடுத்துச் சென்றுள்ளன. எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த பூவனூரில் ஒரு மண்டலம் தங்கியும், தீர்த்தங்களில் நீராட உடல், மனம், புத்தி, உள்ளம், அறிவு ஐந்தும் தூய்மை பெறும்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு இறைவனை வழிபட்டால் குணமாகும். சாமுண்டி பக்தர்கள் கடன் தொல்லையிலிருந்து விடுபடவும் பூச்சிகளின் விஷக்கடிகளிலிருந்து விடுபடவும் அருள்பாலிக்கிறார்.
பாரதப் பிரதமர் 2022ம் ஆண்டில் தமிழகத்தில் சதுரங்க ஒலிம்பியாட் டை துவங்கி வைத்தபோது பூவனூர் சதுரங்க வல்லப நாதர் மற்றும் பார்வதி உறை சதுரங்க நாதர் கௌவிலைக் குறிப்பிட்டு சதுரங்க விளையாட்டு தமிழகத்தில்தான் துவங்கியது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.