

நற்குணம் கொண்ட நபிகள் நாயகம் செய்த செயலைப் பற்றி அறிவோம்!
நபிகள் நாயகம் அவர்கள் பள்ளிவாசலின் வெளியில் அவர்களுடைய தோழர்களோடு ஒரு நாள் அமர்ந்திருந்தார். இவரை பார்ப்பதற்கு எத்தனையோ மக்கள் வருவார்கள் போவார்கள். அவர்கள் தங்களால் இயன்ற உணவுப் பொருட்களைக் கொண்டு வந்து நபிகள் நாயகத்திடம் அன்புடன் சாப்பிடுவதற்கு கொடுப்பார்கள். அந்த உணவுப் பொருட்களை நபிகள் நாயகம் அவர்களுடைய தோழர்கள் எல்லோருக்கும் கொடுத்துவிட்டுதான் அவர் எப்பொழுதும் சாப்பிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று ஒரு மூதாட்டி திராட்சைப் பழங்களை கொண்டு வந்து நபிகள் நாயகத்திடம் கொடுத்தார். அந்த திராட்சைப் பழங்களை பெற்றுக்கொண்ட நபிகள் நாயகம் அவராகவே திராட்சைப் பழங்களை முழுவதுமாகச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தார்.
நபிகள் நாயகம் சாப்பிடுவதைப் பார்த்து அந்த மூதாட்டி மிகுந்த சந்தோசம் அடைந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த அவரது தோழர்கள் அமைதியாகவே இருந்தார்கள். அந்த மூதாட்டி நபிகள் நாயகத்திடம் இருந்து விடை பெற்று சென்றுவிட்டார். அருகில் இருந்த நபிகள் நாயகத்தின் தோழர்கள்,
“அண்ணலே! எப்பொழுதும் யாராவது உணவுப் பொருட்களை கொடுத்தால் அதனை மற்றவர்களுக்கு நீங்கள் பகிர்ந்து கொடுத்து அல்லவா சாப்பிடுவீர்கள்? இன்று மட்டும் என்ன ஆயிற்று? நீங்களாகவே அந்த திராட்சைப் பழங்களை முழுவதும் சாப்பிட்டு விட்டீர்கள். ஏன் இவ்வாறு செய்தீர்கள்?” என்று தோழர் ஒருவர் கேட்டார்.
அதற்கு நபிகள் நாயகம் இவ்வாறு பதில் கூறினார்,
“அந்த மூதாட்டி கொடுத்த திராட்சை பழங்களில் புளிப்பு சுவை அதிகமாக இருந்தது. அதனை நான் உங்களுக்குக் கொடுத்தால் புளிப்பு சுவை அதிகமாக இருக்கிறது என்று முகம் சுளித்துவிடுவீர்கள்! அந்த பழங்களைச் சாப்பிடாமல் கீழே போட்டு விடுவீர்கள் என்று எனக்குத் தெரியும்! இதனால் அந்த மூதாட்டியின் மனம் நொந்து போய்விடும். ஆகையால் அத்தனை பழங்களையும் நானே சாப்பிட்டு விட்டேன். இதுதான் காரணம் என்றார் நபிகள் நாயகம்.
இவ்வாறு நபிகள் நாயகம் கூறிய பதிலைக் கேட்டு தோழர்கள் அனைவரும் அவரை வியந்து பார்த்தார்கள். மற்றவர்களுடைய மனது எந்த ஒரு காரணத்தினாலும் புண்பட்டு விடக்கூடாது என்ற கொள்கையை உடையவர் நபிகள் நாயகம். அதனால்தான் அவர் இன்று வரை பண்பட்டு நிற்கிறார் என்பது உலகறிந்த உண்மையாகும்.