

அதிசய ஆன்மீக தகவல்கள்:
* சின்ன சேலம் ஆறகழூரில் உள்ள காமநாதேஸ்வரர் ஆலயத்தில் அஷ்ட பைரவர்களையும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம்.
* காங்கேயம் முருகன் ஆலயத்தில் கால்நடைகள் நோய் நொடியின்றி வளமாக வாழ கதனை என்று கூறப்படும் அதிர்வெடி வழிபாடு நடைபெறுகிறது.
* சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அழகிரிநாதசுவாமி ஆலயத்தில், சிம்ம முகத்துடன் அனுமனை தரிசிக்கலாம்.
* வந்தவாசிக்கு அருகில் உள்ள மேல ஆவணியாபுரத்தில் சிம்ம முகத்தோடு அருள்கிறாள் மகாலட்சுமி! பக்தர்களைக் காக்க, யாகத் தீயால் எரிந்த, அடையாளம் காணமுடியாத, முகமில்லாத நரசிம்மர் மடியில் அமர்ந்திருக்கிறாள். அந்த நரசிம்மரின் முகத்தை தேவிதான் ஏற்று அருள்பாலிக்கிறாள்.
* ராமபிரான் நான்கு கரங்களுடன் மூலவராக செங்கல்பட்டிற்கு அருகே உள்ள பொன்பதர்கூடத்திலும் உற்சவராக கும்பகோணத்தருகே உள்ள புள்ளம்பூதங்குடியிலும் அருள்பாலிக்கிறார்.
* மனித முகத்துடன் விநாயகரை கும்பகோணம் திருமீயச்சூர் அருகே உள்ள செதலபதியிலும் சிதம்பரம் தெற்கு வீதியிலும் தரிசிக்கலாம்.
* வேதாரண்யம் அருகில் உள்ள கோடிக்காட்டில் ஆறு கரங்களும் ஒரு முகமும் கொண்ட முருகப்பெருமான் அருள்கிறார்.
* சென்னை – மயிலை கோலவிழி அம்மனின் திருவிழிகள் மனிதர்களுக்கு இருப்பது போலவே உயிரோட்டமுள்ளதாக அமைந்துள்ளது.
* விருத்தாசலம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் சப்தகன்னியர்களும் தாயாரின் தோழிகளாக பூஜிக்கப்படுகின்றனர்.
* செங்கல்பட்டு – மதுராந்தகம் பிரதான சாலையில், படாளம் கூட் ரோடில் இருந்து இடதுபுறத்தில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள அரசர்கோயிலில் ஆறு விரல்கள் கொண்ட மகாலட்சுமியை தரிசிக்கலாம்.
* சிதம்பரத்தில் உள்ள தில்லைக்காளி ஆலய பிராகாரத்தில் கடம்பவன தட்சிணாமூர்த்தி ரூபிணி எனும் பெயரில் பெண் வடிவ தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.
* விநாயகரின் முகத்தையும் தேள் போன்ற வரிவரியான உடலமைப்புடன் உள்ள விருச்சிகப் பிள்ளையாரை கும்பகோணம் ஆடுதுறையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மருத்துவக்குடியில் தரிசிக்கலாம்.
* வேலூர் அருகில் உள்ள சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் ஒரே கருவறையில் அருள்கின்றனர்.