

விழுப்புரம் மாவட்டத்தில் கூத்தனூர் அடுத்துள்ள ரிஷிவந்தியத்தில் அமைந்துள்ளது அர்த்தநாரீஸ்வரர் கோவில். தேவர்களின் தலைவனான இந்திரன் ரிஷிவந்தியம் இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டான். ஆனால் இத்தலத்தில் இருந்த பார்வதி அம்மனை அவர் வழிபடவில்லை ஒருநாள் கோபமடைந்த அம்மன் பால் குடத்தை மறைத்துவிட்டார்.
பால் குடத்தைக் காணாததால் மனமுடைந்த இந்திரன் கோவில் பலிபீடத்தில் தலையை மோதி உயிர்விட முயற்சித்தபோது ஈசன் இந்திரன் முன் தோன்றி பார்வதிக்கும் பாலாபிஷேகம் செய்யக் கூறினார். மேலும் அதற்குப் பிறகு நடக்கும் தேன்அபிஷேகம் செய்யும்போது தனது உருவத்துடன் பார்வதியும் தோன்றுவார் எனக் கூறினார். அதற்குப் பிறகு நடக்கும் தேன் அபிஷேகத்தில் ஈசனுடன் கையில் கிளியுடன் பார்வதி தரிசனம் தருகிறார்.
தேன் அபிஷேகத்தில் மட்டுமே தினசரி இந்த அதிசயம் நடக்கிறது. சிவன் பார்வதிக்கு கைலாய மலையில் திருமணம் நடந்தபோது தெற்கு உயர்ந்து வடக்கு தாழந்தது. இதை பயன்படுத்த ஈசன் அகத்திய முனிவரை தேற்கு நோக்கி அனுப்பினார். அவரும் தெற்கில் பல இடங்களில் ஈசனை பூஜித்தார். அப்போது ஈசன் அவருக்கு திருமணக் கோலம் காட்டினார். அந்த தலமே ரிஷிவந்தியம்.
இக்கோவில் ஈசன் அர்த்தநாரீஸ்வரர் அம்பிகை முக்தாம்பிகை. தலவிருட்சம் புன்னை மரம். இக்கோவில் திருமலை நாயக்கரால் புதுப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. இக்கோவில் வலப்புறத்தில் சிற்ப வேலைப்பாடுகள் உள்ள மண்டபம் உள்ளது. இங்கு தட்டினால் பண் இசைக்கும் தூண் உள்ளது. இங்குள்ள யாளிவாயில் பந்து உள்ளது. அதை எந்த பக்கமும் உருட்டலாம். ஆனால் வெளியே எடுக்க முடியாது இது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது.
இந்த தலம் பேச்சு குறைபாட்டை நீக்கும் தலமாக நம்பப்படுகிறது. மேலும் அகத்திய முனிவருக்கு ஈசன் தன் மணக்கோலத்தைக் காட்டிய தலம் இது. ராமபிரான் அங்கு வந்து வழிபட அவருக்கு ஞானோதயம் வழங்கிய ஈசன் இத்தலத்தில்தான்.
குரு நமச்சிவாயரின் சீடரான குக நமச்சிவாயம் இத்தலத்திற்கு வந்தபோது பசியால் தவித்தார். அம்மையைப் பார்த்து தாயிருக்க சோறு என்ற செய்யுளை பாடனார் அம்பிகை அவரிடம்தான் ஈசனுடன் சேர்ந்து இத்தலத்தில் உள்ளதால் இருவரையும் பற்றி பாடல் பாடச் சொல்ல அவர் பாடியதும் பொற்கிண்ணத்தில் சோறு கொண்டுவந்து அவர் பசியாற்றினார் என்று வரலாறு கூறுகிறது.
இந்த சிவ ஆலயத்திற்கும் பணி செய்தால் 27 அச்வமேத யாகம் செய்த பலன் கிடைக்குமாம். இங்கு முற்காலத்தில் அதிக ரிஷிகள் வந்து வழிபட்டதால் ரிஷிவனம் என்ற பெயர் ஏற்பட்டது அது மருவி ரிஷிவந்தியம் ஆனது.
தேன் தானும் கெடாது. தன்னுள் சேர்க்கும் பொருளையும் கெடவிடாது. அதுபோல் சிவனும் சக்தியும் பிரியாத ஒன்று என்பதை உணர்த்தும் சின்னமாக இக்கோவில் தேனாபிஷேகம் விளங்குகிறது. இத்தலத்தை தரிசிப்பதால் குடும்ப ஒற்றுமை, பாபநிவர்த்தி ஆன்மிக உயர்வு என பல நன்மைகளை அளிக்கும். சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்தும் உயிருள்ள சாட்சி ரிஷிவந்தியம்.