ருத்ராட்சம் முகங்களும் அதன் பலன்களும்!

Rudraksha faces and its benefits
Rudraksha faces and its benefits

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து விழுந்த கண்ணீர் துளிகளே ருத்ராட்சம் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் ருத்ராட்ச மரம் இமாலய மலை அடிவாரத்தில் வளர்கிறது. ருத்ராட்சங்களில் 108 வகை உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இனி, ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

* ருத்ராட்சத்தை அணிந்திருக்கும்போது அது நமது உடலை கவசம் போல பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது.

* நம் உடலுக்கும், மனதிற்கும் ருத்ராட்சம் பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும்.

* நம்முடைய கர்ம வினைகளை அறுத்தெறிய இது உதவுகிறது.

* மனதிற்கு அமைதியை ருத்ராட்சம் கொடுக்கிறது.

* கோள்களால் ஏற்படும் பாதிப்புகளை இது நீக்குகிறது.

ருத்ராட்சத்தில் 1 முதல் 21 முகங்கள் வரை உள்ளன. அதில் 1 முதல் 14 முகங்கள் உள்ள ருத்ராட்சங்கள் சுலபமாகக் கிடைக்கும். ருத்ராட்ச முகம் என்பது, ஒரு ருத்ராட்சத்தை எடுத்துக்கொண்டால் அதில் எத்தனை கோடுகள் உள்ளதோ அத்தனை முகங்கள் என்று கணக்கிடப்படுகிறது.

ஒரு முக ருத்ராட்சம்: ஒரு முக ருத்ராட்சத்தை பார்ப்பதே மிகவும் அரிதாகும். இதை தொட்டு வணங்கினாலே நம்முடைய பாவங்கள் போகும் என்று சொல்லப்படுகிறது.

இரண்டு முக ருத்ராட்சம்: இரண்டு முக ருத்ராட்சத்தை அர்த்தநாரீஸ்வரர் சொரூபம் எனப்படுகிறத. இந்த ருத்ராட்சத்தை பயன்படுத்துவதால், குரு-சிஷ்யர் உறவில் மகிழ்ச்சியையும், ஒற்றுமையும் ஏற்படுத்தும். இது சந்திர கிரகத்தோடு தொடர்புடையது. இந்த ருத்ராட்சம் கொடிய பாவத்தை போக்கக்கூடியதாகும். செல்வம், மன அமைதி, குண்டலினி சக்தியை எழுப்பக்கூடியது.

மூன்று முக ருத்ராட்சம்: மூன்று முக ருத்ராட்சத்தின் கடவுள் அக்னி ஆவார். சோமன், சூரியன், அக்னி என்று சொல்லப்படக்கூடிய முக்கண்ணனின் வடிவம் பெற்றதாகும். இது செவ்வாய் கிரகத்தோடு தொடர்புடையது. ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடைய இதை அணியலாம்.

நான்கு முக ருத்ராட்சம்: நான்கு முக ருத்ராட்சம் பிரம்மாவை குறிக்கக்கூடியதாகும். இது பக்தி, செல்வம், மோட்சம் ஆகியவற்றை தரக்கூடியது. அறிவுக்கூர்மையை மேம்படுத்தக்கூடியது. இது புதன் கிரகத்தோடு தொடர்புடையது என்பதால் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், படைப்பாளிகள், நுண்கலை வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் அணிந்து கொள்ளலாம்.

ஐந்து முக ருத்ராட்சம்: ஐந்து முக ருத்ராட்சம் காலாக்னி ருத்ர ரூபத்தை உடையது என்று சொல்லலாம். ஏனென்றால் இது ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற பஞ்ச முகத்தினை உடையது. இது குரு கிரகத்துடன் தொடர்புடையது. பொதுவாக, ஐந்து முக ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். பாவங்களைப் போக்கக்கூடிய சிவ கடாட்சத்தைக் கொண்டது.

ஆறு முக ருத்ராட்சம்: ஆறு முக ருத்ராட்சம் முருகப்பெருமானுடைய வடிவமாக கருதப்படுவது. இது சுக்கிரனுடன் தொடர்புடையதாகும். பிரம்மஹத்தி தோஷத்தைக் கூட போக்குமளவிற்கு மிக புண்ணியமான ருத்ராட்சமாகும். இதை அணிவதால் புகழ், புத்தி, தெளிவு, மெய்ஞானம், பரிசுத்தம் ஆகியவை கிடைக்கும்.

ஏழு முக ருத்ராட்சம்: ஏழு முக ருத்ராட்சம் ஆதிசேஷனின் அம்சத்தை கொண்டது. சப்த கன்னிகளின் அருளைப் பெற்றது. நாக தோஷத்தை நீக்கக்கூடியது. யோக சக்தியை நம்முள் அதிகளவில் பெருக்கக்கூடிய தன்மை ஏழு முகம் கொண்ட ருத்ராட்சத்திற்கு உண்டு.

எட்டு முக ருத்ராட்சம்: எட்டு முக ருத்ராட்சம் அஷ்ட கணபதியின் அருளை பெற்றுத் தரக்கூடியதாகும். ராகு கிரகத்துடன் தொடர்புடையது. இதை அணிந்து கொள்ளும்போது அஷ்ட வசுக்களின் ஆசி நமக்குக் கிட்டும் என்று சொல்லப்படுகிறது. அஷ்டமாசித்திகளை பெறக்கூடிய தன்மையை இது தரும். அஷ்ட லட்சுமிகளையும் நம்மோடு வாசம் செய்யும் தன்மையைத் தரும்.

இதையும் படியுங்கள்:
டாக்டரிடம் போகாமல் வாழ இந்த 10ஐ கடைப்பிடித்தாலே போதுமே!
Rudraksha faces and its benefits

ஒன்பது முக ருத்ராட்சம்: ஒன்பது முக ருத்ராட்சம் நவ பைரவர்களின் அருளை தரக் கூடியதாகும். கேது கிரகத்தோடு தொடர்புடையது. பில்லி, சூனிய, ஏவலை போக்கக்கூடிய தன்மையையும், நவகிரகங்களின் பீடையை அழிக்கும் தன்மையும், சித்தி முத்தியை தரும் தன்மையை கொண்டது. இந்த ருத்ராட்சத்தை கழுத்தில் அணிவதை விட, இடது மணிக்கட்டில் அணிந்துக்கொண்டால் அதிக பலன் கிடைக்கும்.

பத்து முக ருத்ராட்சம்: பத்து முக ருத்ராட்சம் மகாவிஷ்ணுவின் அம்சத்தை உடையதாகும். பூத, பிரேத, பிசாசுக்களின் பயத்தை போக்கக்கூடியது. ஆபத்தை நம்மிடமிருந்து நீக்கும், பீடைகளை போக்கி புண்ணியத்தை பெற்றுத் தரக்கூடியதாகும்.

இதில் ஒரு முகம், ஏழு முகம், எட்டு முகம், ஒன்பது முகம், பதினொறு முகம் ஆகிய ருத்ராட்சம் விலை அதிகமானது ஆகும்.

கௌரிசங்கர் என்ற ஒரு வகை ருத்ராட்ச வகையுள்ளது. இரண்டு ருத்ராட்சம் ஒட்டிக்கொண்டிருக்கும். இது சிவன் பார்வதியை குறிக்கிறது. இந்த ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால், சிவன் பார்வதியின் அருள் ஒருசேர நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com