பெண்களின் சபரிமலை: ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பின்னணி ரகசியங்கள்!

Sabarimala for women
Aatrukal Bhagavathyamman
Published on

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில், தென்னிந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாகும். இது பெண்களின் சபரிமலை என்று போற்றப்படுகிறது. ஆன்மிக முக்கியத்துவம், வரலாற்றுச் சிறப்பு மற்றும் தனித்துவமான திருவிழாக்கள் மூலம் இக்கோயில் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இக்கோயிலின் சிறப்பம்சங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1. பெண்களின் சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு எப்படி ஆண்கள் விரதமிருந்து செல்கிறார்களோ, அதேபோல ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயிலுக்குப் பெண்கள் அதிக அளவில் விரதமிருந்து வழிபடுகின்றனர். இதனாலேயே இது, ‘பெண்களின் சபரிமலை‘ என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்களை விட பெண்களுக்கே வழிபாட்டு உரிமைகளிலும், திருவிழாக்களிலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அருணாசலேஸ்வரர் கோயில் கம்பத்து இளையனார் சன்னிதி சொல்லும் செய்தி!
Sabarimala for women

2. கண்ணகியின் மறுவடிவம்: இக்கோயிலின் மூலவராக விளங்கும் தெய்வம் பத்ரகாளி. இருப்பினும், சிலப்பதிகார நாயகி கண்ணகி, மதுரையை எரித்த பிறகு கோபம் தணியாமல் கேரளா வழியாக கொடுங்கல்லூர் செல்லும் வழியில் இங்கு தங்கியதாக ஐதீகம். கண்ணகி ஒரு சிறுமி வடிவில் ஆற்றுக்கால் பகுதியில் இருந்த ஒரு பெரியவர் முன்பு தோன்றியதாகவும், அந்தப் பெரியவர் கனவில் வந்து தனக்குக் கோயில் எழுப்புமாறு கூறியதாகவும் வரலாறு கூறுகிறது. கண்ணகியின் உக்கிரமான கோபம் இங்கு சாந்தப்படுத்தப்பட்டு, அருள் தரும் தெய்வமாக விளங்குகிறார் என்று சொல்லப்படுகிறது.

3. உலகப் புகழ் பெற்ற ஆற்றுக்கால் பொங்கல்: இக்கோயிலின் மிக முக்கியமான சிறப்பம்சம் ஆண்டுதோறும் நடைபெறும் ஆற்றுக்கால் பொங்கல் திருவிழா ஆகும். இது கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 1997 மற்றும் 2009ம் ஆண்டுகளில், ஒரே இடத்தில் லட்சக்கணக்கான பெண்கள் கூடி பொங்கல் வைத்து வழிபட்டதற்காக இக்கோயில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் சாதி, மத வேறுபாடின்றி இங்கு ஒன்று கூடி பொங்கல் வைத்து வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
நவம்பர் 24 சோமவார சதுர்த்தி: அங்காரக தோஷம் நீங்க ஆனைமுகத்தான் வழிபாடு!
Sabarimala for women

கோயிலின் கருவறையில் ஏற்றப்படும் புனித நெருப்பு, சில மைல்கள் தாண்டி வரிசையாக நிற்கும் பெண்களின் அடுப்புகளுக்குக் கைமாற்றப்படுகிறது. அரிசி, வெல்லம், தேங்காய் மற்றும் நெய் கொண்டு மண் பானையில் பொங்கல் வைத்து அம்மனுக்குப் படைப்பது இங்கு சிறப்பு. இந்தப் பொங்கல் பிரசாதம் அம்மனுக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது.

4. கட்டடக்கலை: கேரள மற்றும் திராவிடக் கட்டடக்கலைகளின் கலவையாக இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் முகப்பில் உள்ள கோபுரங்கள் மற்றும் சுவர்களில் சிலப்பதிகாரம், தட்சனின் யாகம், மகிஷாசுரமர்த்தினி போன்ற புராணக் கதைகளை விளக்கும் மிக நுணுக்கமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மூலவர் விக்ரகம் ரத்தினங்கள் மற்றும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்குப் பரவசத்தை ஊட்டுகிறது.

இதையும் படியுங்கள்:
ஐயப்ப விரதம்: கருப்பு ஆடை அணிந்தால் சனி பகவானின் ஆட்டம் அடங்குமா?
Sabarimala for women

5. குத்தியாட்டம்: பொங்கல் விழா பெண்களுக்குச் சிறப்பானது என்றால், சிறுவர்களுக்கு 'குத்தியாட்டம்' என்ற வழிபாடு முக்கியமானது. இது போலி இரத்த பலியாகக் கருதப்படுகிறது. விரதமிருக்கும் சிறுவர்கள் அம்மனின் படை வீரர்களாக கருதப்படுகிறார்கள் (மகிஷாசுரனை வதம் செய்த பூத கணங்கள்). இவர்கள் கோயிலில் தங்கி கடுமையான விரதமிருந்து, விழாவின் இறுதி நாளில் பாடல்கள் பாடி ஊர்வலமாக வருவது தனிச்சிறப்பு. சிறுவர்கள் சடங்கு ஆடைகளை அணிந்து, உடலின் பக்கவாட்டில் கூரான கம்பிகளைச் செருகி, மேள தாளங்களுக்கு ஏற்ப கோயிலை வலம் வருவார்கள்.

6. பெண்மையின் சக்தி, பக்தி மற்றும் ஒற்றுமையின் அடையாளம்: ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் என்பது வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல; அது பெண்மையின் சக்தி, பக்தி மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகும். ஒரு பெண்ணின் கோபம் அடங்கி, அவளே தாயாக மாறி உலகைக் காக்கும் தத்துவத்தை இக்கோயில் உணர்த்துகிறது. வாழ்க்கையில் நிம்மதி, செல்வம் மற்றும் ஆரோக்கியம் வேண்டி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும் சக்தி பீடமாக இது திகழ்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com