
பொன்னம்பலம், வெள்ளியம்பலம் , தாமிரசபை, சித்திர சபை, ரத்தின சபை என நடராஜர் பஞ்ச சபைகளில் திருநடனம் ஆடுகிறார்.
நான்கு சபைகளிலும் இடது காலை தூக்கி நடனம் ஆடும் சிவன், மதுரையில் வெள்ளியம்பலத்தில் மட்டும் வலது காலை தூக்கி நடனமாடுவது ஏன் என்று தெரியுமா?
ஐந்து சபைகள் :
நடராஜர் ஐந்து நடன சபைகளில் ஆடும் திருநடனத்தை காண கண்கோடி வேண்டும்.
நடராஜப் பெருமான் இவ்வாறு ஆடிக்கொண்டே இருப்பதால் தான் உலகத்தின் இயக்கம் இயற்கையை ஒட்டி இயல்பாக உள்ளதாக கூறப்படுகிறது.
சிதம்பரத்தில் - பொன்னம்பல சபையில் ஆடுவது - ஆனந்த தாண்டவம் .
திருநெல்வேலியில் - தாமிரசபையில் ஆடுவது - முனி தாண்டவம்.
குற்றாலத்தில் - சித்திர சபையில் ஆடுவது - திரிபுரா தாண்டவம்.
திருவாலங்காட்டில் - ரத்தின சபையில் ஆடுவது - காளி தாண்டவம்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் - வெள்ளியம்பலத்தில் ஆடுவது - சந்தியா தாண்டவம்.
மற்ற சபைகளில் வலது காலை ஊன்றி இடது காலை தூக்கி நடனமாடுகிறார். ஆனால் மதுரையில் மட்டும் வலது காலை தூக்கி களி நடனம் ஆடுவதற்கு ஒரு சுவாராஸ்யமான கதை உண்டு. அது என்ன என்று பார்ப்போம்.
பிற்காலத்தில் மதுரையை ராஜசேகர பாண்டிய மன்னன் ஆண்டான். சிவ பக்தனான அவன் ஆய கலைகளில் 63 கற்றுத் தேர்ந்தான். பரதம் மற்றும் பாக்கியிருந்தது.
ஒரு சமயம் அவன் மற்றொரு மன்னனுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலை வந்தது. எனவே பரதம் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதைக் கற்றான்.
முதல்நாள் பயிற்சி எடுத்த மன்னனுக்கு காலில் கடும் வலி உண்டானது. அப்போதுதான் அவனுக்கு ஒரு உண்மை உரைத்தது.
'பரதம் கற்க இன்று ஒரு நாள் ஆடிய நமக்கே இப்படி வலிக்கிறதே? இங்கே எம்பெருமான் தொடர்ந்து ஒரு காலை மட்டும் ஊன்றி அல்லவா ஆடிக் கொண்டிருக்கிறார்? அவருக்கு எவ்வளவு வலி இருக்கும்' என நினைத்தவன், நேராக நடராஜர் சன்னதிக்கு சென்றான்.
'பகவானே! உன் கால் வலிக்குமே ! காலை மாற்றி ஆடு!' என வேண்டினான்.
இறைவன், மன்னனை மேலும் சோதிக்கும் விதமாக சலனமின்றி நின்றிருந்தார்.
'அப்படி நீ கால் மாற்றி ஆடாவிட்டால் என் முன்னால் ஒரு கத்தி நட்டு வைத்து அதன் மீது விழுந்து உயிர் துறப்பேன்' என்று மிரட்டலாய் மன்றாடினான் மன்னன்!
சற்றே கண் மூடி மன்னர் மீண்டும் கண் திறந்த போது அப்படியே மெய் சிலிரத்து போனான்.
ஆமாம்! பக்தனுக்காக இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி ஆடிக்கொண்டிருந்தார் நடராஜர் .
'எனக்காக கால் மாறி ஆடிய பெருமானே! இதே திருக்கோலத்தில் பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் தந்தருள வேண்டும்' என்று நெகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டான் மன்னன். பக்தனின் வேண்டுதலை ஏற்ற சிவன் அவனுக்காக இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி ஆடினார்.
இதுவே பக்தனுக்காக ஆடிய சந்தியா தாண்டவம்.
இன்றைக்கும் மதுரை சுந்தரேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள மகா மண்டபத்தில் கால் மாற்றி ஆடிய கோலத்தில் காட்சி தருகிறார் நடராஜ பெருமான்.
பதஞ்சலிக்காக ஆடிய ஆனந்த தாண்டவம், மன்னனுக்காக கால் மாற்றி ஆடிய சந்தியா தாண்டவம் நடராஜர் சன்னதி எதிரே உள்ள சுவரில் சித்திரமாக வரையப்பட்டுள்ளது. நடராஜரின் கால் மாறி ஆடி அந்த சந்தியா தாண்டவம் பற்றி 10ம் நூற்றாண்டு சேர்ந்த வல்லாள சேர மன்னர் செப்பு பட்டயத்தில் குறிப்பு காணப்படுகிறது.