
சப்த விடங்கத் தலங்களான திருவாரூர், திருநாகைக்காரோணம், திருநள்ளாறு, திருமறைக்காடு, திருக்காறாயில், திருவாய்மூர், திருக்கோளிலி முதலிய தலங்கள் நடராஜபெருமானுக்குரிய தலங்கள் ஆகும். ஒவ்வொரு தலத்திலும் அவரது தனித்தன்மையான நடன முறைகள் அமையப் பெற்றுள்ளன.
திருவாரூர்: மேலும் கீழும் ஏறி இறங்கியும் முன்னும் பின்னும் சென்று வந்தும் அடியவர்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்த இங்கே இறைவன் ஆடுவது அசபா நடனம் ஆகும்.
திருநாகைக்காரோணம்: கடலில் தோன்றும் அலைகளின் அசைவை நிகர்த்த நடனம் இங்கே ஈசன் ஆடுவது. இதற்கு ‘பாராவர நடனம்’ என்று பெயர்.
திருநள்ளாறு: இத்தலத்தில் இறைவன் ஆடுவது பித்துக்கொண்டவன் தலையைச் சுற்றி ஆடுவது போல் ஆடும் நடனம். இவ்வகையான நடனத்திற்கு, ‘உன்மத்த நடனம்’ என்று பெயர்.
திருமறைக்காடு: அன்னப் பறவை நடப்பது போன்று ஆடும் நடனம். இத்தலத்தில் ஈசன் ஆடிய இந்த நடனத்திற்கு ‘அம்ச பாத நடனம்’ என்று பெயர்.
திருக்காறாயில்: சேவற்கோழி நடப்பது போன்று ஆடும் நடனம். இதற்கு ‘குக்குட நடனம்’ எனப் பெயர். இறைவனின் இவ்வகையான நடனம் இத்தலத்தில் நடந்தேறியது.
திருவாய்மூர்: நீர் நிறைந்த குளத்தில் ஒற்றைத் தாளில் நிற்கும் தாமரை மலர் காற்றால் தள்ளுண்டு மெல்லென ஆடுவது போன்ற நடனம். கமல நடனம் இங்கே பரமன்ஆடுவது.
திருக்கோளிலி: மலர்களுள் வண்டு குடைந்து சென்று ஆடுவது போன்ற நடனம். இவ்வகையான நடனம் ‘பிருங்க நடனம்.’ இது இந்தக் கோயிலில் நடராஜ பெருமானால் நிகழ்த்தப்பட்டது.
நடராஜர் கையில் உள்ள உடுக்கை பிரம்மாவின் படைக்கும் தொழிலைக் குறிக்கிறது. மகாவிஷ்ணுவின் காக்கும் தொழிலை அவரது அபய கரம் செய்கிறது. ருத்ரனின் அழிக்கும் தொழிலை அவரது கையில் உள்ள நெருப்பு செய்கிறது. மகேஸ்வரனின் மறைத்தல் பாவங்களைப் பொறுத்தல் தொழிலை அவர் முயலகன் என்ற அரக்கனை தன் காலடியில் வைத்திருப்பது காட்டுகிறது. சதாசிவனின் அருள்புரியும் தன்மையை அவரது தூக்கிய திருவடி உணர்த்துகிறது.