திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் கோயிலில், வேதங்கள் மலைக் குன்றுகளாக வீற்றிருக்க, உச்சியில் சிவபெருமான் வேதகிரீஸ்வரர் சுயம்பு மலை கொழுந்தாக கோயில் கொண்டுள்ளார். அம்பாள் திரிபுரசுந்தரி அடிவாரத்தில் உள்ள பக்தவச்சலேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கிறார்.
உப்புத்தன்மை கொண்ட கடல் நீரில் மட்டுமே தோன்றும் இயல்புடைய சங்கு, இக்கோயில் தீர்த்தக் குளமான நன்னீரிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றுவது குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த 1939, 1952, 1976, 1988, 1999 ஆகிய ஆண்டுகளில் இக்குளத்தில் தோன்றிய சங்குகள் கோயில் நிர்வாகம் சார்பில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதிலும் மிகவும் பழைமையான சங்கு மார்க்கண்டேயர் காலத்தைச் சேர்ந்ததாகவும் கருதப்படுகிறது. கார்த்திகை மாத 1008 சங்காபிஷேக உத்ஸவத்தில் இக்குளத்தில் தோன்றிய சங்குகளில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்.
கடந்த 2011 செப்டம்பர் 1ம் தேதி இக்குளத்தில் சங்கு தோன்றி 12 ஆண்டுகள் ஆகிறது. தற்போது நேற்று (7.3.2024) இக்குளத்தில் புனித சங்கு தோன்றி பக்தர்களை பரவசப்படுத்தியது. இதற்கு முன்பு தோன்றிய சில சங்குகள் மிகுந்த ஓசையுடன் பிறந்தது. நேற்று தோன்றிய சங்கு ஓசை ஏற்படுத்தவில்லை. காலை 9 மணிக்கு குளத்தின் மேற்குக் கரை படியை ஒட்டி தீர்த்தகிரீஸ்வரர் கோயில் பின்புறம் கொடிகள் வேக அசைவுடன் இருந்ததை சிலர் பார்த்தனர். கொடியசைவை அறிவதற்காக அவற்றை அகற்றியபோது அங்கு சங்கு மிதந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். பிறகு மாசி மண்டபத்தில் அதற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மங்கல வாத்தியங்கள் முழக்கத்துடன் மாட வீதிகள் வழியில் கோயிலுக்குக் கொண்டு சென்று வழிபட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
ஒரு சமயம் மார்க்கண்டேயர் இறைவனை வழிபட பாத்திரம் இன்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும் அது முதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தக் குளத்தில் சங்கு பிறப்பது வழக்கமாக உள்ளது.
அன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். எனவே, ஆடிப்பூரம், நவராத்திரி கடைசி நாள், பங்குனி உத்திரம் என ஆண்டுக்கு மூன்று நாட்கள் மட்டும்தான் முழு அபிஷேகம் செய்வார்கள். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும்தான் அபிஷேகம் செய்வார்கள். 565 படிக்கட்டுகளுடன் மலை மீது அமைந்த அமைதி தவழும் அழகிய தலம் இது. இந்தத் தலத்தில் சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும்.