உன்னுள்ளே தேடு: இறைவனை வணங்கும் முறைகள்!

Ways to worship God!
Ways to worship God!
Published on

னிதன் இயற்கையின் சக்திகளை உணரத்தொடங்கிய காலத்திலிருந்தே, அதற்குப் பின்னால் ஒரு உயர்ந்த சக்தி இருப்பதாக நம்பி வந்தான். அந்த உயர்ந்த சக்தியே “கடவுள்” என அழைக்கப்படுகிறது. மனிதன் தன் மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் காரணமாகக் கருதும் அந்த இறைவனை நினைத்து மரியாதையுடன் வணங்கும் செயல்தான் “வழிபாடு”. கடவுளை வணங்குவதற்கு ஒரே ஒரு வழி மட்டுமல்ல; பல்வேறு முறைகள் உள்ளன.

மனவழி வணக்கம்: வெளிப்படையான சடங்குகளின்றி, மனதிற்குள் கடவுளை நினைத்து வணங்குவது ஆகும். தியானம், மௌன பிரார்த்தனை, சிந்தனை ஆகியவை இதன் அடிப்படை. சிலர் கோவிலுக்குச் செல்ல இயலாத சூழ்நிலையில் இருந்தாலும், மனதினுள் இறைவனை நினைத்து நம்பிக்கையுடன் இருப்பர் “மனமே கோவில், மனமே தெய்வம்” என்ற பழமொழி மனவழி வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்த வழிபாடு மனிதனின் மனஅமைதியையும், சிந்தனை தெளிவையும் வளர்க்கிறது.

வாய்மொழி வழிபாடு: குரல் மூலம் கடவுளை நினைத்து வணங்கும் முறையாகும். நாமஜபம், மந்திர உச்சரிப்பு, ஸ்தோத்திரங்கள், பஜனைகள், கீர்த்தனைகள் ஆகியவை இதில் அடங்கும். பாடல்களாகவும் பிரார்த்தனைகளாகவும் இறைவனைப் புகழும்போது, மனித மனம் மகிழ்ச்சியடைகிறது. இந்த முறையால் பக்தி உணர்வு அதிகரித்து, மனதில் உற்சாகமும் நம்பிக்கையும் உருவாகிறது.

உடல் வழிபாடு: உடல் செயல்கள் மூலம் கடவுளை வணங்குவது. கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்வது, சாஷ்டாங்க நமஸ்காரம், தீபம் ஏற்றுதல், பூக்கள் சமர்ப்பித்தல் போன்றவை இதற்கான உதாரணங்கள். இந்த வழிபாடு ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கற்றுத்தருகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு மரியாதை, பொறுமை போன்ற பண்புகளை வளர்க்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
அன்னையருக்கு மட்டுமே திதி கொடுக்கும் உலகின் ஒரே அபூர்வ தலம்!
Ways to worship God!

பூஜை மற்றும் சடங்கு வழிபாடு: பூஜை, அபிஷேகம், ஆராதனை, யாகம், ஹோமம் போன்றவை சடங்கு வழிபாட்டின் முக்கிய அம்சங்கள். இவை மத நூல்களிலும் மரபுகளிலும் கூறப்பட்ட விதிமுறைகளின்படி நடைபெறும். விரதம், நோன்பு போன்றவை உடலை கட்டுப்படுத்தி, மனதை இறைவன் மீது ஒருமுகப்படுத்தும் பயிற்சியாகும். இந்த வழிபாட்டு முறைகள் ஒழுக்கத்தையும் பொறுமையையும் வளர்க்கின்றன.

சேவை வழிபாடு: மனிதர்களுக்கு உதவி செய்வதையே கடவுளுக்கு செய்யும் வழிபாடாகக் கருதுவது. ஏழைகளுக்கு உணவு வழங்குதல், நோயாளிகளை பராமரித்தல், கல்வி உதவி செய்வது போன்றவை இதன் சிறந்த எடுத்துக்காட்டுகள். “மனித சேவையே மகேசன் சேவை” என்ற பழமொழி இந்த வழிபாட்டின் சாரத்தை வெளிப்படுத்துகிறது. இந்த முறையில் வணங்கும் மனிதன், சமூக பொறுப்புணர்வுடன் செயல்படக் கற்றுக்கொள்கிறான்.

அறிவு வழிபாடு: இறைவனை அறிவின் மூலம் உணரமுயற்சிப்பது. வேதங்கள், உபநிஷத்துகள், பகவத்கீதை, தத்துவ நூல்கள் போன்றவற்றை வாசித்து சிந்திப்பது இதன் அடிப்படை. இந்த வழிபாடு மனிதனை கேள்வி கேட்கும் தன்மையுடன், உண்மையை தேடும் பாதையில் செலுத்துகிறது. அறிவும் பக்தியும் இணையும்போது மனிதன் உயர்ந்த சிந்தனையாளனாக மாறுகிறான்.

இயற்கை வழிபாடு: சூரியன், சந்திரன், நதிகள், மரங்கள், மலைகள் போன்றவற்றில் கடவுளை காணும் வழிபாடு ஆகும். தமிழர் பண்பாட்டில் மரங்களையும் நதிகளையும் தெய்வமாகப் போற்றும் பழக்கம் உள்ளது. இந்த வழிபாடு மனிதனை இயற்கையை பாதுகாக்கும் எண்ணத்துடன் செயல்பட ஊக்குவிக்கிறது.

இதையும் படியுங்கள்:
இரண்டு நிமிடம் மட்டுமே மூடப்படும் அதிசய கிருஷ்ணர் கோவில்!
Ways to worship God!

நல்லொழுக்க வாழ்க்கை வழிபாடு: நேர்மை, உண்மை, கருணை, அன்பு, பொறுமை ஆகிய நல்ல பண்புகளுடன் வாழ்வதே ஒரு சிறந்த வழிபாடாகும். தினசரி வாழ்க்கையில் தவறுகளைத் தவிர்த்து, நல்ல மனிதனாக இருப்பதே இறைவனை மகிழ்விக்கும் வழியாகும். சிலர் கோவிலுக்குச் செல்லாமல் இருந்தாலும், நல்ல செயல்களால் இறைவனை அடைவார்கள்.

உண்மையான பக்தி என்பது வெளிப்படையான சடங்குகளில் அல்ல; நல்ல மனம், நல்ல சிந்தனை, நல்ல செயல் ஆகியவற்றில்தான் உள்ளது. அதனால், கடவுளை வணங்குவதன் உண்மையான பொருள் – மனிதனை ஒரு நல்ல மனிதனாக மாற்றுவதுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com