![sivasakthi](http://media.assettype.com/kalkionline%2F2024-05%2F210950d7-c60e-4a3f-93e6-c5936c1252dc%2F1.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
வருடத்தில் நான்கு மாதங்கள் ‘ஷடசீதி புண்ணிய காலம்’ என்று அழைக்கப்படுகிறது. அவை ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாத ஒன்றாம் தேதி. ஷடசீதி புண்ணிய காலம் பிறக்கும் நாளில் சிவசக்தி வழிபாடு, சித்தர்கள் வழிபாடு, ஞானிகளின் அருள் பெற்று வருவது தனி சிறப்பினைத் தரும்.
சிவபெருமானுக்கு மிகப்பிரியமான மாதம் ஷடசீதி புண்ணிய காலமாகும். இக்காலத்தில் சிவன் சக்தியை வழிபடுவது கூடுதல் சிறப்பு தரும். ஆற்றலையும் மனம் மகிழ்ச்சியையும் பெற்றுத் தரும். இந்த நாளில் சிவன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை, ஆராதனை செய்து வருவது சிறப்பு. அன்றைய தினம் முழுவதும் முடிந்த வரை சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். ஷடசீதி நாளில் நாம் சிவபெருமானிடம் வேண்டுவது நிச்சயம் நிறைவேறும். இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் செய்தால் பித்ருக்களின் ஆசியும் அருளும் நிச்சயம் கிடைக்கும்.
‘திரு’ என்று தொடங்கும் ஊர்களில் உள்ள சிவன் கோயில்களை இன்று வழிபட்டு வருவது மிகுந்த சிறப்பாகும். சிவபெருமான் கடவுளுக்கெல்லாம் கடவுள், தேவர்களுக்கெல்லாம் தேவர். மகாதேவர் சிவன் எளிமையானவர். சிவனிடம் வரம் வேண்டுவது மட்டுமின்றி, அவரிடம் உள்ள பல நல்ல விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.
ஜடாமுடி, நெற்றிக்கண் திரிசூலம், சாம்பல் பூசிய தோற்றம், நாகம், நீலகண்டம், உடுக்கை, கங்கை, கமண்டலம் என அனைத்துமே மனித வாழ்க்கைக்கு பல பாடங்களை கற்றுத் தருகின்றன. நான் என்னும் அகங்காரத்தை விட்டு விட்டால் உங்கள் மனநிலை மற்றும் உடல் நிலை மேலோங்கும் என்பதை சிவபெருமானிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
விஷூவகன் என்றால் பிரம்மா. பிரம்மாவுக்குரிய மாதங்கள் சித்திரை, ஆடி, ஐப்பசி, தை. இதில் சித்திரை மற்றும் ஐப்பசி மாத பிறப்பு விஷூ புண்ணிய காலம் ஆகும். ஆடி மாதம் தட்சிணாயண புண்ணிய காலம், தை மாதம் உத்திராயண புண்ணிய காலம். பகவான் மகாவிஷ்ணுவுக்குரிய மாதங்கள் வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்கள். இந்த மாதங்கள் பிறக்கும் நேரமே விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று அழைக்கப்படுகிறது.