
பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்த கிருஷ்ணாஷ்டமி தினமான இன்று அவர் அருளிய நல்லுரைகள் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.
* எவர் ஒருவர் அனைத்து ஆசைகள், விருப்பங்கள், அகங்காரம் முதலியவற்றை விலக்கி, தனது கடமைகளைப் புரிகிறாரோ அவரே சாந்தி அடைகின்றார்.
* உண்மையில் ஒரு கண நேரமாவது எவனும் கர்மம் செய்யாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் தனது சுபாவ குணங்களால் கட்டுப்படுத்தப்பட்டு கர்மத்தை செய்ய வேண்டியவனாகிறான்.
* அன்னத்தால் உயிர்கள் உண்டாகின்றன. அன்னம் மழையால் உண்டாகிறது. மழை யக்ஞத்தால் பெய்கின்றது. யக்ஞம் கர்மத்தால் ஆகின்றது.
* தர்மம் குறைந்து அதர்மம் மேலோங்கும்பொழுது நல்லோர்களைக் காப்பதற்காகவும் கொடியவர்களை நாசம் செய்து தர்மத்திற்கு புத்துயிர் அளித்து பரிபாலிக்க ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிக்கிறேன். ஆசையை விலக்கி, தன் மனத்தை வசப்படுத்தி எல்லாப் பொருட்களையும் விட்டுவிட்டு சரீரத்தால் மட்டுமே கர்மம் செய்பவன் தனது கர்மத்தால் எவ்விதமான தோஷத்தையும் அடைய மாட்டான்.
* சிரத்தையுடன் கூடியவன், கடவுளை சரண் புகுந்தவன், புலனை அடக்கியவன் போன்ற இவ்வித புருஷன் ஞானமடைகின்றான். ஞானம் பெற்றவுடன் பரம சாந்தி நிலையை எய்துகிறான்.
* கர்மங்களை பிரம்மத்தினிடம் அர்ப்பணம் செய்து பற்றை ஒழித்து தனது கடமையை செய்பவன், தாமரை இலை மேல் நீர் துளி ஒட்டாமலிருப்பது போல் பாவத்தினால் தீண்டப்பட மாட்டான்.
* சமநிலை பெற்ற மனத்தோன் இவ்வுடலில் இருந்தவண்ணமே சம்சாரத்தை வென்றவனாகிறான். பிரம்மம் களங்கமற்ற சமநிலை உடையது. ஆதலால், அவன் பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.
* தனது சொரூபத்தை உணர்ந்து காமத்தையும் குரோதத்தையும் வென்று மனத்தை வசப்படுத்திய முனிவர் பிரம்ம நிர்வாண சுகத்தால் சூழப்படுகின்றனர்.
* மனத்தை வென்று பூர்ண சாந்தி அடைந்தவனுடைய ஆத்மா சீதோஷ்ணம் சுக, துக்கம், மான-அவமானம் போன்றவற்றில் ஒரேவிதமான மனோபாவத்துடன் இருக்கும்.
* என்னை எல்லோரிடத்திலும், இப்பிரபஞ்சம் முழுவதிலும் எவன் பார்க்கின்றானோ, அவன் என் பார்வையிலிருந்து விலகுவதில்லை. நானும் அவனது பார்வையில் இருந்து மறைவதில்லை.
* எவன் ஒருவன் என்னை எந்த ரூபத்தால் தியானிக்கின்றானோ, தொழுகின்றானோ அவனுக்கு அந்தந்த ரூபத்தில் நான் காட்சி அளிக்கின்றேன்.
* எனது யோக மாயையால் மூடப்பட்டிருக்கும் நான், எல்லோருக்கும் புலப்பட மாட்டேன். பிறப்பும் இறப்பும் இல்லாத என்னை இந்த மூட உலகம் நன்கு அறியாது.
* இறுதிக் காலத்தில் என்னை நினைத்தவண்ணமே தனது தேகத்தை துறப்பவன் எனது சொரூபத்தை அடைகின்றான். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை.