நடக்காது என நினைத்த காரியத்தையும் நடத்திக்காட்டும் ஸ்ரீ சுதர்சன வழிபாடு!

நடக்காது என நினைத்த காரியத்தையும் நடத்திக்காட்டும் ஸ்ரீ சுதர்சன வழிபாடு!

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனுக்கு சங்கு, சக்கரம், கதை, வில், கத்தி என்று ஐந்து ஆயுதங்கள் உண்டு. அவை முறையே பாஞ்சஜன்யம், சுதர்சனம், கௌமோதகீ, சார்ங்கம், நந்தகம் என்று பெயர் கொண்டவை. இந்த ஐந்திலும் விசேஷமானது சுதர்சனம் என்கிற சக்கரம். சக்கரத்தாழ்வார் என்று போற்றப்படுபவரும் இவர்தான். உலகில் உள்ள ஆயுதங்களுக்கெல்லாம் அரசன் என்ற பொருளில், ‘ஹேதிராஜன்’ என்றும் போற்றப்படுபவர் இவர். ‘சக்ரரூபி விஷ்ணு’ என்றே இவரை அனைவரும் கொண்டாடுவர். ‘ஸஹஸ்ரார ஹும்பட்’எனும் மந்திரத்தால் ஆராதிக்கப்படும் இவர் அறுகோண சக்கரத்தில் இருந்து அருளாட்சி புரிகிறார்.

மந்திரங்களில், ‘ராஜ மந்திரங்கள்’ என்று சிலவற்றை வகைப்படுத்துகிறது மந்திர சாஸ்திரம். அத்தகைய ராஜ மந்திரங்களில் ஸ்ரீ சுதர்சனமும் ஒன்று. கடுமையான நியமங்களோடு உபாசிக்க வேண்டியது இந்த மந்திரம். ஜபிப்பவரின் ஆற்றலை பன்மடங்கு அதிகரிப்பதும், அவர் செல்லுமிடமெங்கும் துன்பங்கள் அகலுவதுமான அற்புதத்தை நிகழ்த்தவல்லது இந்த சுதர்சன மந்திரம். இதன் சிறப்பைச் சொல்லும்போது, ‘எம்பெருமான் கருதுமிடம் பொருதும் ஆழி’ என்பர் பெரியோர். ‘ஆதிமூலமே‘ என்றழைத்த யானை கஜேந்திரனைக் காக்க எம்பெருமான் கரத்திலிருந்து சீறிக் கிளம்பி வந்தவர் இந்தச் சக்கரத்தாழ்வார்தான். சினங்கொண்ட துர்வாசரால் ஏவப்பட்ட பூதத்தை வீழ்த்தி, மன்னன் அம்பரீஷன் நினைக்கும் முன்பே, துர்வாசரை துரத்திச் சென்றவர் இந்த சுதர்சனர்.

வரைமுறை கடந்து ஸ்ரீ கிருஷ்ணனை ஏசிய சிசுபாலனின் சிரத்தைக் கொய்தவரும் இவர்தான். அபிமன்யுவின் மரணத்துக்குக் காரணமான ஜயத்ரதனை வீழ்த்தும் பொருட்டு, ஸ்ரீ கிருஷ்ணனால் ஏவப்பட்ட இவர்தான் சூரியனை மறைத்து மாய இருளை ஏற்படுத்தினார். அதைக் கண்டு வெளிப்பட்ட ஜயத்ரதனை அர்ஜுனன் வீழ்த்தவும், இவர் விலகி சூரிய ஒளி படரவும் நேரம் சரியாக இருந்தது. இப்படி சக்கரத்தாழ்வாரின் சிறப்புகள் அளப்பரியவை. சிறைவாசம், பயம், கிரக தோஷங்கள், கடன் பிரச்னைகள், வழக்குகள் உள்ளிட்ட சிக்கல்களில் இருந்து அடியார்களைக் காப்பவர் ஸ்ரீ சுதர்சனர். இப்பெருமானை வழிபட சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. சித்திரை அவருக்குரிய நட்சத்திரம். ஒரு மண்டலம் என சங்கல்பம் செய்து கொண்டு, தினமும் நெய் தீபம் ஏற்றி, 45 முறை சக்கரத்தாழ்வர் சன்னிதியை வலம் வந்தால், நடக்காது என்று நினைத்த காரியமும் கைகூடும் என்பது பலரின் அனுபவம். செவ்வாய்க்கிழமைகளில் இவரை வலம் வந்து வழிபட்டால் கடன் தொல்லைகள் அகலும்.

தம் பதினாறு கரங்களிலும் பதினாறு ஆயுதங்களைக் கொண்டவராக விளங்குபவர் ஸ்ரீ சுதர்சனர். சக்கரம், மழு, ஈட்டி, தண்டம், அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கு, வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் ஆகியவற்றைத் தரித்தவராக இவர் காட்சி தருவார். இந்தக் கோல மூர்த்தியை, ‘ஷோடசாயுத ஸ்தோத்திரம்’ சொல்லி வழிபடுவது மிகச் சிறந்த பலனைத் தரும். சுதர்சன ஜபமோ, ஹோமமோ செய்ய முடியாதவர்கள், ஸ்ரீ சுதர்சனரின் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வரலாம். அதுவும் முடியாதவர்கள், ‘ஜயஜய ஸ்ரீசுதர்சன’ என்பதையே மஹாமந்திரமாகச் சொல்லி
ஸ்ரீ சுதர்சனர் சன்னிதியை வலம் வரலாம். வீட்டின் அருகில் ஆலயம் இல்லையென்றால், வீட்டை தூய்மைப்படுத்தி, வீட்டிலேயே குறைந்தது 45 முறை இந்த மந்திரத்தைச் சொல்லி வாருங்கள். உங்களை வதைக்கும் பிரச்னைகள் அனைத்தும் விலகும். இது பலரின் அனுபவம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com